தமிழ்த் திரை இசையின் பிதா மகர்கள் – 3. - பாபநாசம் சிவன்
தமிழ் தந்த தியாகராஜர் என்று அழைக்கப படும் பாபநாசம் சிவன் 26-09-1890ல் தஞ்சைக்கு அருகில் உள்ள போலகம் என்னும் சிறு கிராமத்தில் ராமாமிருத ஐயருக்கும் யோகாம்பாளுக்கும் மகனாகப் பிறந்தவர். அவரது இயற்பெயர் ராமையா. சிறு வயதுப் பிராயத்தில் தந்தையை இழந்த ராமையா, தன் தாயார் மற்றும் மூத்த சகோதரருடன் 1898லிருந்து 1910 வரை இரண்டு வருடங்கள் திருவனந்தபுரத்துக்குக் குடி பெயர்ந்திருக்கிறார். திருவனந்தபுரத்து அரசருடைய ஊட்டுப்புறையின் ஆதரவில் வாழ்க்கை நடத்தியிருக்கிறார்கள். . திருவனந்தபுரத்தில் இருந்த இரு ஆண்டுகளில் மகாராஜா சம்ஸ்கிருதக் கல்லூரியில் உபாத்யாயர் பட்டம் பெற்றார். இதைத் தவிர முறையான கல்வி எதையும் சிவன் பின்னாளில் பெறவில்லை. அவருக்கு மரபின் அடிப்படையிலான இசைப்பயிற்சியோ பாக்களை இயற்றும் பயிற்சியோ வாய்த்திருக்கிவில்லை. ஆனால் கேள்வி ஞானத்தில் தன்னுடைய இசை வளமையைப் பெருக்கிக் கொண்டிருக்கிறார் சிவன். சிவனுடைய தாயார் மிகவும் அற்புதமான குரல் வளம் வாய்ந்தவராக இருந்திருக்கிறார். சுமார் 600 கீர்த்தனைகளுக்கு மேல் முறையாகப் பாடக் கற்றுக்கொண்டாராம் அந்த அம்மையார். சிவனின் தாய்வழிப் பாட்டனாரும் அந்தக் காலத்தில் மிகப்பெரும் இசை வல்லுநராக இருந்திருக்கிறார். இவ்விருவரின் தாக்கத்தில் இசையின் மேல் மாளாத காதலைக் கொண்டு வளர்ந்திருக்கிறார் சிவன். வளர்ந்த பிறகு கோனேரிராஜபுரம் வைத்தியநாதய்யர் போன்ற இசை வல்லுநர்கள் அவருடைய இசை வளமையினை செம்மைப்படுத்தியும் பெரும் ஆதரவும் அளித்து இருக்கிறார்கள்.
1910ல் அன்னையை இழந்த சிவன், திருவனந்தபுரத்தை விட்டு நீங்கி பாபநாசத்துக்கு வந்திருக்கிறார். தஞ்சை மாவட்டம் முழுதும் தன்னுடைய சகோதரருடன் நடைப்பயணமாகவே சென்று பல லயங்களில் திருவிழாக்களின்போது பஜனை உற்சவத்தை நடத்தியிருக்கிறார். அந்த பஜனை உற்சவங்களின்போது அவரே இயற்றிய பாடல்களை அவர் கணீரென்ற குரலில் பாடி மிகப்பெரும் கூட்டத்தை ஈர்த்து இருக்கிறார். திருவையாற்றில் சப்த ஸ்தானத் திருவிழாவிலும் சிவன் பாடலைக் கேட்க பெரும் திரளான மக்கள் கூடியிருக்கிறார்கள். 1912லிருந்து 1959 வரை அவர் இடைவிடாது சப்த ஸ்தான வைபவத்தில் கலந்து கொண்டு இருந்திருக்கிறார்.
அந்நாளில் இறையிசையில் தன்னைக் கரைத்துக் கொண்டவர்களை சிவன் என்று அன்புடன் அழைக்கும் மரபு இருந்திருக்கிறது. அந்த மரபில் ராமையா 'பாபநாசம் சிவன்' ஆக தஞ்சை கணபதி அக்கிரகாரத்தின் இசைப்பிரியர்களால் அன்புடன் பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.
1930ல் சென்னைக்குக் குடி பெயர்ந்தார் சிவன். அன்றிலிருந்து அவர் காலமாவதற்கு ஓராண்டுக்கு முன் அதாவது 1972 வரை மார்கழி மாதங்களில் மயிலையின் நான்கு மாடவீதிகளையும் சுற்றி வந்து அவர் நடத்திய கிரி பிரதட்சணமும் மார்கழி மாத விடியற்காலை பஜனைகளும் மிகவும் பிரசித்தமானவை. (கல்கி, விகடன் தீபாவளி மலர்கள்) 60களில் திராவிடர் கழகம் லய வழிபாட்டுக்கு எதிரான போராட்டங்களை வீதிகளுக்கு எடுத்து வந்த நேரம். சில இடங்களில் வன்முறை சம்பவங்களும் நிகழ்ந்தன.
பின்னாட்களில் அவரை மிகவும் அதிகமாகப் பாதித்தவர்கள் கோபாலகிருஷ்ண பாரதியும், நீலகண்ட சிவனும். இவ்விருவரின் பாடல்களில் மனம் கரைந்திருக்கிறார் சிவன்.
இசையும் கலையும் வசமானவர்களுக்கு இயற்கையாகவே சமூகம் குறித்த அக்கறையும் உள்ளீடாக உறைந்து கொண்டே இருக்கும். சிவனுக்கும் இருந்தது. துவக்க காலத்தில் இந்திய சுதந்திரப் போரில் நேரிடையாகப் பங்கு கொள்ளவில்லை என்றாலும் அதன் மீது பெரும் அக்கறை கொண்டு இருந்திருக்கிறார். பல தேசியப் பாடல்களை இயற்றத் தொடங்கினார் சிவன். அவை அக்காலத்தில் பெரும் புகழ் பெறவில்லை என்றாலும் பலருடைய கவனத்தை வெகுவாக ஈர்த்து இருக்கிறது. சிவன் இயற்றிக் கொடுத்த பாடல்களை நாடகக் கலைஞர்கள் தங்கள் நாடகங்களில் கையாளத் துவங்கினார்கள்.
ஒரு சாகித்ய கர்த்தாவாக சிவன் சங்கீத மும்மூர்த்திகளின் வரிசையைப் பின் தொடர்ந்து வந்திருக்கிறார். அவருடைய சாகித்யங்களில் வார்த்தைகள் அவருக்காகத் தவம் இருந்திருக்கின்றன. வார்த்தைகளுக்காக அவர் எந்த அகராதியையோ சூத்திர நூல்களையோ பயன்படுத்தவில்லை. தாளக்கட்டுக்களும் சொற்களும் அவர் வாயிலில் தவமிருந்து காத்து சேவகம் புரிந்திருக்கின்றன. அரியக்குடி ராமானுஜ அய்யங்கார், மகாராஜபுரம் விசுவநாத ஐயர், செம்பை வைத்தியநாத பாகவதர், முசிரி சுப்பிரமணிய அய்யர், செம்மங்குடி சீனிவாச ஐயர் போன்ற அக்காலத்தின் பிரசித்த பெற்ற இசைக்கலைஞர்கள் சிவனின் சாகித்யத்தைப் பாடி பிரபலப்படுத்தினார்கள். பிரபலம் அடைந்தார்கள். சிவனுடைய சாகித்யங்கள் கீர்த்தனைகள், வர்ணங்கள், ஓபரா என்று சொல்லப்படும் இசைநாடகங்களுக்கான பதங்கள் மற்றும் ஜாவளிகளைக் கொண்டு மிளிர்ந்து துலங்கின. இவற்றை அவருடைய குமாரத்தி டாக்டர் ருக்மணி ரமணி அவர்கள் ஆறு தொகுதிகளாக வெளியிட்டு இருக்கிறார். அவற்றில் இரு தொகுதிகள் தமிழ்ச் சங்க நூலகத்தில் இருக்கின்றன.
பத்து ஆண்டுகளுக்கும் மேலான ஆய்வு மற்றும் கடுமையான உழைப்புக்குப் பிறகு சிவன், சம்ஸ்கிருத பாஷா சப்த சமுத்ரஹ (வடமொழி சொற்கடல்) என்னும் சமஸ்கிருத அகராதி ஒன்றைத் தொகுத்து இருக்கிறார். அந்திம காலத்தில் ஸ்ரீராம சரித கீதம், (ராமாயணத்தை 24 பத்திகளில் 24 ராகங்களின் அடிப்படையில் அமைத்திருப்பார்) மற்றும் காரைக்கால் அம்மையார் சரித்திரம் போன்ற நூல்களை இயற்றினார். இவையும் நூல் வடிவம் பெற்றிருக்கின்றன.
சென்னை நாட்களில் அவர் திரைத் துறைக்கு அறிமுகம் ஆனார்.. பக்த குசேலா, பக்த சேதா, தியாகபூமி மற்றும் குபேர குசேலா கிய படங்களில் முக்கியப் பாத்திரமேற்று நடித்துள்ளார்சிவனுடைய திரைப்பாடல்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. பக்தி, தேசியம், சமூக விழிப்புணர்வு போன்றவை கலந்து மிக அருமையான சொற்கோவைகளில் அரிதான தாளக்கட்டுக்களில் அமைந்து அனைவரின் மனங்களையும் அந்நாளில் மட்டுமல்லாது இந்நாளிலும் கவரும் இசைச் சொற்சித்திரங்கள் அவை. அவருடைய பாடல்களால் வெற்றியடைந்த திரைப்படங்கள் கணக்கற்றவை.

சிவனுடைய புரவலர்கள் என்று சொல்லவேண்டும் என்றால் கலாட்சேத்திராவின் திருமதி ருக்மணி அருண்டேல், அந்நாளைய திரைப்பட இயக்குநர்கள் கே.சுப்பிரமணியம், எஸ்.எஸ்.வாசன், கல்கி சதாசிவம், எம்.எஸ்.சுப்புலட்சுமி, முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரன், இயல், இசை நாடக மன்றம், சங்கீத் நாடக அகாதமி போன்ற நிறுவனங்கள் சிவனை வெகுவாக ஆதரித்தன.மிகவும் எளிமையான ஆன்மீக வாழ்க்கையை வாழ்ந்தவர் சிவன் அவர்கள். தன்னை அவர் என்றுமே எங்குமே முன் நிறுத்திக் கொண்டவர் இல்லை.
சுமார் 2500 பாடல்களை பல ராகங்களில் இயற்றியிருக்கிறார். பல நாடகங்களுக்கும் திரைப்படங்களுக்கும் பாடல்கள் இயற்றியிருக்கிறார். 1934லிருந்து 1939 வரை அவர் கலாட்சேத்ராவில் இசைஆசிரியராகப் பணி புரிந்து இருக்கிறார். திரைப்படப் பாடல்களுக்குப் பாடல் எழுதவேண்டி கலாட்சேத்திராவில் ஆசிரியர் தொழிலைத் துறந்தார்.
தியாகைய்யருக்கு ஒரு ராமர் என்றால் நம் சிவனுக்கு மயிலை கபாலீஸ்வரர் நவரச கானடாவில் நானொரு விளையாட்டுப் பொம்மையா, மோகனத்தில் கபாலி, மத்யமாவதியில் கற்பகமே போன்ற பாடல்கள் இறவா வரம் பெற்றவை.
சேவா சதனம், அம்பிகாபதி, நந்தனார், சகுந்தலை, சாவித்ரி, சிவகவி, தியாகபூமி போன்ற இறவா வரம் பெற்ற படங்களில் அவருடைய பாடல்கள் இடம் பெற்றன
அவர் இசையமைத்த படங்கள் சில:
சத்யசீலன், சிவகவி, ஹரிதாஸ், ஆகிய படங்களை, ஜி ராமனாதனுடனும், வால்மீகி என்ற படத்திற்கு S V வெகட்ராமனுடனும் சேர்ந்து இசையமைத்திருக்கிறார்.
.
இவர் இயற்றிய பிரபல பாடல்களில் சில:
அசோக்குமார் - தியானமே எனது மனது நிறைந்தது சந்திர பிம்ப வதனம், மனமே நீ ஈசன் நாமத்தை வாழ்த்துவாய், பூமியில் மானிட ஜென்மம் அடைந்தும் ஓர் புண்ணியம் இன்றி விலங்குகள் போல், சத்துவ குணபோதன்...
திருநீலகண்டர் - உன்னைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ, தீன கருணாகரனே நடராஜா நீலகண்டனே...மறைவாய்ப் புதைத்த ஓடு, பவளமால் மாலையை
ஹரிதாஸ் - என்னுடல்தனில் ஒரு ஈ மொய்த்தபோது, , மன்மத லீலையை வென்றார் உண்டோ
நந்தனார் - பிறவா வரம் தாரும்
இவரது பிரபல பக்திப் பாடல்கள் சில:
அம்பா நீ இரங்காயெனில் புகலேது, (அடாணா), நேவி நீயே துணை (கீரவாணி) காணக் கண் கோடி வேண்டும் (காம்போதி) கா வா வா கந்தா வா வா (வராளி), கண்ணன் மதுர இதழை (பீம்ப்ளாஸ்), கபாலி (மோகனம்), கற்பகமே (மத்யமாவதி), மா ரமணன்(ஹிந்தோளம்), நான் ஒரு விளையாட்டு பொம்மையா (நவரச கானடா), பிறவா வரம் தாரும் (லதாங்கி) சாமஜ வர கமனா (மத்யமாவதி), ஸ்வாமிக்கி சரி எவரே (கேதாரகௌளை) தத்வமரிய தரமா (ரீதி கௌளை) போன்றவை.
எனது நினைவுக்கடல் என்னும் பெயரில் ஒரு சிறிய சுயசரிதையை எழுதியிருக்கிறார் சிவன். 1968ல் சிவன் அவர்கள் தினமணி கதிருக்காக தொடராக எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். தன்னுடைய இளமைப்பருவ நினைவுகளில் தொடங்கி 1921ல் தன்னுடைய சென்னை வருகை வரை பதிவு செய்திருப்பார் சிவன். துரதிருஷ்டவசமாக சிவனின் உடல்நிலை காரணம் கொண்டு இத்தொடர் 1968ல் நிறுத்தப்பட்டது அக்டோபர் 10, 1973 அன்று தமிழ்த் தியாகய்யர் காலமானார்.
No comments:
Post a Comment