Thursday, September 21, 2017

டி சலபதிராவ்

தமிழ்த் திரையிசையின் பிதாமகர்கள் - 15 - டி சலபதிராவ் 

விஜயவாடா அருகே உள்ள கபிலேஸ்வரம் கிராமத்தில் டிசம்பர் 20, 1920 அன்று சலபதிராவ் பிறந்தார்.அவர் பிறந்த கிராமத்தில் பொதுவுடமை இயக்கம் (கம்யூனிசம் பரவியிருந்தது அவரது தமக்கைகளில் ஒருவர் கம்யூனிஸத்தில் தீவிர ஈடுபாடு உடையவர். இன்னொரு சகோதரிக்கு சங்கீதம் கற்பிக்கப் பட்டு வந்தது. அதில் சலபதிராவ் ஈடுபாடு கொண்டார். 

பொறியியல் படிப்புக்காக பம்பாய் சென்றவர் அங்கு இசை பயின்றார். யாரிடம் என்ற விவரங்கள் இல்லை. ஊர் திரும்பியதும் கம்யூனிச இயக்கத்தில் கலந்து கொண்டார். அதன் விளைவாக 3 ஆண்டுகள் சிறையில் அடைக்கப் பட்டார். சிறையிலும் பலரை பாட சொல்லி உற்சாகப்படுத்தியிருக்கிறார்.

அவர் திரையுலகில் நுழைந்தது 1951 ஆம் ஆண்டு. ஆனால் நேரடியாகத் தமிழ் திரைப்படங்களில் இசையமைக்கத் துவங்கியது 1956ல் அமரதீபம் திரைப்படம் மூலம். இப்படத்தில் 3 இசையமைப்பாளர்கள் பணியாற்றினார்கள். சலபதிராவுக்கு பின்னணி இசைதான் தரப்பட்டது. மற்ற இருவரும் ஆளுக்கு இரண்டு பாடல்கள் இசையமைத்து ஒதுங்கி விட்டார்கள். ஆகையால் மீதமுள்ள பாடல்களுக்கு சலபதிராவே இசையமைத்தார். 

"எங்கே மறைந்தனையோ" என்ற ஒரு பாடல், எம் எல் வசந்தகுமாரி பாடியது. இதற்கு ஜி என் பாலசுப்ரமணியம் இசையமைத்திருந்தார். இன்னொரு பாடல் "நாடோடிக் கூட்டம் நாங்க தில்லேலேலோ" என்று நரிக்குறிவார்கள் பாடுவது. ஏ பி கோமளா, டி வி ரத்னம். டி எம் சௌந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன் ஆகியோர் பாடியது. ஜி ராமநாதன் இசையமைத்திருந்தார். ஆனால் இப்படத்தில் சாகாவரம் பெற்றதென்னவோ சலபதிராவின் பாடல்கள்தான்.

மனித குலத்துக்கு அவசியமான குணத்தைப் பற்றி ஒரு பாடல் "நாணயம் மனுஷனுக்கு அவசியம், மிகவும் அவசியம்" - கே எஸ் கோபாலகிருஷ்ணன் எழுதியது. இதில் நாணயம் என்பதை இரு பொருள் பட எழுதியிருக்கிறார் கே எஸ் ஜி. இப்பாடலுக்கு எளிமையான ஆனால் மக்கள் மனதில் அழுத்தமாகப் பதியும் இசையை அமைத்திருந்தார் சலபதிராவ். டி எம் சௌந்தரராஜன் இதற்கு மேலும் உயிரூட்டியிருந்தார் தனது தெளிவான உச்சரிப்பின் மூலம்.

அறிவுரை கூறும் பாடலிலிருந்து ஒரு காதல் பாடலுக்கு இசையமைக்கும்போதுதான் என்ன ஒரு மாற்றம் இவரது இசையில். "தேன் உண்ணும் வண்டு" பாடலில்! ஹிந்துஸ்தானி இசையின் அடிப்படையில் மாண்டலின், வயலின், புல்லாங்குழல் என்று இனிமையான இசைக்கருவிகளுடன், ஏ எம் ராஜா - பி சுசீலாவின் குரல்களும் இழையும்போது தேனின் இனிமையை நாம் அனுபவிக்கிறோம். கவிஞர் காமாட்சி சுந்தரத்தின் இனிமையான வரிகளில் இன்றும் நம் காதுகளில் ரீங்கரித்துக் கொண்டிருக்கிறது இந்த "தேன் உண்ணும் வண்டு"

"ஜாலிலோ ஜிம்கானா" என்று ஜாலியாக பாடல் ஆரம்பித்தாலும் அப்பாடலிலும் ஒரு தத்துவத்தை புகுத்தியிருக்கிறார் கவிஞர் தஞ்சை ராமையாதாஸ். பாடலின் இறுதியில் வரும் இரண்டு வரிகள்."வாழ்விலும் தாழ்விலும் காணும் ஆனந்தமே, வானவில்லாய் மறைந்தாலும் ஜாலிலோ ஜிம்கானா" இப்பாடல் வெறும் அர்த்தமற்ற பாடல் என்று கூறிவிட முடியாது. பாடலின் மெட்டு அது வரை கேட்டிராதது. இதுவும் இன்றளவும் ரசிக்கப்படும் பாடல். 

ஜிக்கியின் குரலில் துள்ளலான "பச்சைக்கிளி பாடுது" மென்மையான "துன்பம் சூழும் நேரம், என்னைக் கொஞ்சம் பாரும்" பாடல்கள்.

அமரதீபத்திற்கு பின் அவர் இசையமைத்த படம் "கூடி வாழ்ந்தால் கோடி நன்மை" இந்தப் படத்தில் மொத்தம் ஏழு பாடல்கள். ஆனால் அனைத்தும் சுமார் ரகம் என்று விமர்சிக்கப்பட்டது. பாடல்களும் தற்போது கிடைக்கவில்லை.

ஆனால் அமரதீபத்தின் வெற்றியில் சலபதிராவுக்கு இருந்த பெரும்பங்கை ஸ்ரீதர் நினைவில் வைத்திருந்தார். "மீண்ட சொர்க்கம்" என்ற ஒரு உன்னத காதல் காவியத்தை அவர் இயக்க நினைத்தபோது சலபதிராவுக்கே வாய்ப்பளித்தார். இப்படம் 

"துயிலாத பெண்ணொன்று கண்டேன்" என்று தென்னஞ்சோலையிலிருந்து வீசும் இளம்தென்றல் போன்று ஏ எம் ராஜாவின் குரலில் ஒரு பாடல். பின்னர் பாகேஸ்ரீ ராகத்தின் அடிப்படையில் அமைந்த "கலைஏ என் வாழ்க்கையின் திசை மாற்றினாய்" ஏ எம் ராஜா, பி சுசீலா இருவரது பாடல் வடிவங்களும் மிக மிக இனிமை. அதிலும் சுசீலாவின் குரலில் பாடலின் இறுதியில் உச்சத்தைத் தொடும்போது என்ன ஒரு பாவம்! ஏ எம் ராஜாவோ தனது தேன் குரலாலேயே நம்மை மயக்கிவிடுகிறார். இவரது குரல் மிகவும் மென்மையாகத் தோன்றினாலும் மிக அனாயாசமாக உச்சத்தைத் தொடுகிறார்.

அடுத்து "மன நாட்டிய மேடையில் ஆடினேன்" என்ற பி சுசீலாவின் பாடல். பல்லவி முடிந்ததும் இடையிசையாக விறுவிறுப்புடன் ஒலிக்கும் வயலின்கள், பின் அந்த இசை அப்படியே இறங்கிவந்து நீரூற்று போன்ற சிதார் இசை - இங்கு இயக்குனரைப் பாராட்ட வேண்டும், இவ்விடத்தில் நாயகி போல பொலவென கண்ணீர் உகுப்பதைக் காட்டியிருப்பார் - எல்லாம் முடிந்ததும் அமைதியாக "புவி வாழ்வினில் காதல் இன்பம், அதில் ஏழையின் காதல் துன்பம்" என்று உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொண்டு சுசீலா பாடும் விதம், "உயிர்க் காதலிலே, உடல் மேடையிலே, இந்த வாழ்க்கையின் முடிவெங்கே" என்ற வரிகள் கதையின் முடிச்சை உணர்த்துகின்றன. இறுதியில் மன நாட்டிய மேடையில் ஆடினேன் என்று சுசீலா விசும்பலுடன் பாடலை நிறைவு செய்வது "TOP CLASS". இந்தப் பாடலில் சலபதிராவின் முழுத் திறமையும் வெளிப்படுகிறது. நாயகியின் உணர்வுகளுக்கேற்ப இசையை நன்கு வளைத்து, அவளது சங்கடத்தை ஒவ்வொரு திருப்பத்திலும் வெளிப்படுமாறு இசையமைத்திருக்கிறார். கவியரசர் ஒரு கவிக்காவியமே புனைந்திருக்கிறார் இப்பாடலில். "ஆடும் அருள்ஜோதி" என்றொரு நாட்டிய பாடல், சீர்காழி கோவிந்தராஜன் - எம் எல் வசந்தகுமாரி இருவரது குரலில். இதுவும் இன்றளவும் ரசிக்கப்படும் பாடலே.

அடுத்து மீண்டும் ஸ்ரீதர் படத்தில் இசையமைக்கும் வாய்ப்பு - புனர் ஜென்மம். இதில் தீம் பாடலான "என்றும் துன்பமில்லை ஒரு சோகமில்லை" என்ற பாடல் மூன்று முறை ஒலிக்கிறது. டி எம் எஸ், சுசீலா, பி பி எஸ் ஆகியோரது குரல்களில். மூன்றும் முறையே உத்வேகம், நிராசை, உளைச்சல் என்ற உணர்வுகளை வெளிப்படுத்துகின்றன. மூன்றுமே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது சலபதிராவின் திறமையைக் காட்டுகிறது. "உள்ளங்கள் ஒன்றாகித் துள்ளும்போதிலே" என்ற பாடல் ஒன்றான உள்ளங்கள் சந்தோஷ வானில் சிறகடித்துப் பறப்பதை நன்கு உணர்த்துகிறது. 
Image may contain: 1 person, sunglasses, eyeglasses and closeup

அடுத்து உத்தமி பெற்ற ரத்தினம் என்ற படத்திற்கு இசையமைத்தார் சலபதிராவ். இதில் வரும் "தேடிடுதே வானமிங்கே" என்ற பி பி எஸ் குரலில் ஒலிக்கும் பாடல் இலங்கை வானொலியில் மிகவும் பிரபலமான பாடல். 1983 வரை அடிக்கடி நான் கேட்டிருக்கிறேன் அதில். பிறகு வான வெளியில் தொலைந்தே போயிற்று இந்தப் பாடல். பாடலை இயற்றியவர் அ மருதகாசி. இத்தனை சிறப்புகள் பெற்றிருந்தும் இப்பாடல் காற்றில் கரைந்ததேனென்று தெரியவில்லை.

சலபதிராவ் கடைசியாக தமிழில் இசையமைத்த படம் மாடி வீட்டு மாப்பிள்ளை."அதில் வரும் கேட்டுப் பாரு கேள்விகள் நூறு" என்ற பாடல் மிகவும் பிரபலம். "வைகை பெருகிவர, வண்ண மணல் ஊர்ந்து வர" என்ற ஜெயலலிதா பாடும் பாடல் சுமார் ரகம்.

ஒருமுறை உங்களுக்கு பிடித்த இசையமைப்பாளர் யார் என்று கேட்டதற்கு ஜெயலலிதா "சலபதிராவ்" என்று சொன்னார். தமிழிலும் தெலுங்கிலும் அவர் இசையமைத்த படங்களில் நடித்த அவருக்கு சலபதிராவின் பெருமை நன்கு தெரிந்திருக்கிறது.

யாருக்கும் வளைந்து தரமாட்டார் சலபதி ராவ். தன்மானத்தை இழந்து வாய்ப்புகளை பெற்று எந்தப் பயனும் இல்லை என்பது அவரது கொள்கை. அதனால் அவர் இழந்த வாய்ப்புகள் ஏராளம். எண்ணிக்கையில் மிகை குறைந்த பாடல்களே அளித்திருந்தாலும் அத்தனையும் சொக்கத்தங்கம். எல்லாத் தரப்பினராலும் ரசிக்கப்படும் இசையை நமக்கு அளித்திருக்கிறார் சலபதி ராவ். 

நலிந்த இசைக்கலைஞர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்து வந்தார். மருத்துவரான தனது மனைவி டாக்டர் ஜமுனா குமாரியிடம், ஏழைகளுக்கு இலவசமாக மருத்துவம் செய் என்று கூறி வந்தார். இவ்வாறு ஒரு நிறைவான வாழ்வை வாழ்ந்து வந்த சலபதிராவ், 1994லில் தனது 74ஆம் வயதில் காலமானார். இவர் காலமானாலும் இவரது இசை இன்றும் நம்மை மகிழ்வித்துக் கொண்டிருக்கிறது.

COURTESY: MR Vamanan Narasimhan

1 comment:

குன்னக்குடி வைத்தியநாதன்.

தமிழ்த் திரை இசையின் பிதா மகர்கள் - 16 : குன்னக்குடி வைத்தியநாதன். குன்னக்குடி வைத்யநாதனைப் பற்றி கூற வேண்டுமெனில்; "யாரையும் எ...