Thursday, September 14, 2017

எஸ் ராஜேஸ்வரராவ்

தமிழ்த் திரை இசையின் பிதா மகர்கள் - 14. 
திரு எஸ் ராஜேஸ்வரராவ் 

ராஜேஸ்வரராவ் (இனி ராவ் என்று அழைப்போம்) விஜயநகரத்தில் 1922 ஆம் ஆண்டு பிறந்தார். இவரது தந்தை சந்நியாசி ராவ் மிருதங்க வித்வான். துவாரம் வேங்கடசாமி நாயுடுவிற்கு வாசித்து வந்தார். ராவிற்கு நான்கு வயதிலேயே ராகங்களை அடையாளம் காட்டும் திறமை வந்து விட்டது. ஏழு வயதில் ஹரிகதா காலட்சேபம் செய்ய ஆரம்பித்து விட்டார். 

1930 களில் பிரபலமாகத் தொடங்கிய கிராமபோன் கம்பெனிகள் நல்ல குரல்களை பதிவு செய்ய தகுதியான ஆட்களை அமர்த்தினர். அப்படி ஹட்சின்ஸ் (HUTCHINS) கம்பெனியால் அடையாளம் காணப்பட்டவர் ராவ். அவரது குரலில் "பகவத் கீதை" கிராமபோன் இசைத்தட்டு வெளிவந்தது.

பேசும்படங்கள் வெளிவரத்துவங்கிய காலம் அது. இசைத்தட்டுக்களில் பாடிய இளைஞர்கள் மீது தயாரிப்பாளர்களின் கவனம் திரும்பியது. வேல் பிக்சர்சின் தெலுங்குப் படமான "ஸ்ரீ கிருஷ்ண லீலாலு" படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட்டார். உடன் நடித்தவர் திரு வி என் சுந்தரம். "ஸ்ரீ கிருஷ்ணா லீலா (1935), மாயா பஜார் (1936) ஆகிய படங்களில் பாடி நடித்து வந்த ராவ், "கீசக வதம்" என்ற படத்தில் நடிக்க கல்கத்தா பயணமானார். அப்போது நியூ தியேட்டர்ஸ் சைகலை வைத்து "தேவதாஸ்" படத்தை எடுத்து பெரும் வெற்றி பெற்றிருந்தது. கீசக வதத்தில் நடித்ததுடன், சைகலிடம் சுமார் ஒன்றரை ஆண்டுகள் ஹிந்துஸ்தானி சங்கீதம் பயின்றார் ராவ். நியூ தியேட்டர்ஸ் கலைஞர்களான ஆர் சி போரால், பங்கஜ் மல்லிக் இவர்கள் மூலம் ஹிந்தி வங்காளப் பாடல்களின் மெல்லிசையையும் அறிந்து கொண்டார். சைகலிடம் ஒரு ஹார்மோனியம் பரிசாகப் பெற்றார் ராவ்.

1938 ல் சென்னை திரும்பிய அவர், சிதார், கரபஹார், ஹார்மோனியம், மிருதங்கம், டோலக், தப்லா ஆகியவற்றை வாசிக்கும் திறமை பெற்றிருந்தார். "விஷ்ணு லீலா" (1938) என்ற தமிழ்ப் படத்தில் உதவி இசையமைப்பாளராக பணியாற்றினார். அதற்கடுத்து "இல்லாளு" என்ற தெலுங்குப் படத்தில் இசையமைத்து நடித்தார். இந்தப் படத்துடன் இவரது நடிப்பு முடிவுக்கு வந்தது.

தென்னிந்தியாவின் மிகப் பெரிய தயாரிப்பு நிறுவனமான ஜெமினி ஸ்டுடியோவில் 1940ல் வேலைக்கு சேர்ந்தார். அங்கு "மங்கம்மா சபதம் (1943), தாசி அபரஞ்சி (1944) சந்திரலேகா (1948), அபூர்வ சகோதரர்கள் (1949) ஆகிய தமிழ்ப் படங்களுக்கு இசையமைத்தார். மங்கம்மா சபதத்தில் சில மேற்கத்திய மெட்டுக்களை தமிழ் ரசிகர்கள் விரும்பும் வண்ணம் இசையமைத்திருந்தார். I, I, I, I LIKE YOU VERY MUCH என்ற பாடல் "ஐயய்ய்யய்யே சொல்ல வெட்கம் ஆகுதே" என்ற பாடல், வசுந்தராதேவி அவர்களால் பாடி ஆடப் பட்டு பல ரசிகர்களின் உள்ளங்கள் கிறுகிறுத்துப் போனது.

சந்திரலேகாவிலும் உலக இசை தொடர்ந்தது. அயல்நாட்டு மெட்டுக்களை நல்ல மேற்கத்திய வாத்தியங்களுடன் கொடுத்து வெற்றி அடைந்தார் ராவ். "ஐலோ பக்கிரியாமா" என்ற பாடலில் வரும் உளறல்கள் FIREFLY என்ற படத்தில் வரும் DONKEY SERENADE பகுதியைத் தழுவியது. இப்பாடல் ஒரு உக்ரேனியன் பாடல் என்று கூறப்படுகிறது. உச்சக்கட்டக் காட்சியில் வரும் ட்ரம் டான்ஸில் கதகளி, கண்டி ஆகிய நடன அசைவுகள் உண்டு. இப்படத்தில் வாசனின் விருப்பத்திற்கேற்ப நல்ல இசையை உள்வாங்கிக்கொண்டு நமது ரசிகர்களுக்கேற்ப அளிக்கும் கடமையை மட்டுமே செய்தார் ராவ்.

அபூர்வ சகோதரர்களில் இவர் சற்று சுதந்திரமாக செயல்பட முடிந்தது. இப்படத்தில் பானுமதி பாடும் " லட்டு வேணுமா" என்ற கலகலப்பூட்டும் பாடல், "ஓடக்காரா, ஓடக்காரா, ஓடத்தில் ஏற்றியே செல்வாய்" என்று அமைதியாகப் பாடும் ஓடப் பாட்டு (இப்பாட்டின் துவக்கம் நினைவில் இல்லை), மானும் மயிலும் ஆடும் சோலை" என்ற காதல் ரசம் ததும்பும் பாடல் ஆகியவை இவரது இசையில் பெரும் வெற்றி பெற்றன. இப்படத்துடன் ஜெமினியில் இவரது சகாப்தம் முடிவடைந்தது.
Image may contain: 1 person, eyeglasses and text

50களில் 10 தமிழ்ப்படங்களுக்கு இசையமைத்துள்ளார் ராவ். மிஸ்ஸியம்மாவில் (1955) பாடல்கள் அனைத்துமே கர்நாடக இசையின் அடிப்படையில் அமைக்கப்பட்டு ரசிகர்களின் இதயங்களின் தென்றலாகத் தவழ்ந்தது. பிருந்தாவனமும் நந்தகுமாரனும்" "அறியாப்பருவமடா, மலர் அம்பையே வீசாதடா, மதனா" பழகத் தெரிய வேணும்" "மாயமே நானறியேன்" "எனையாளும் மேரி மாதா" "முடியுமென்றால் படியாது, படியும் என்றால் முடியாது" "வாராயோ வெண்ணிலாவே" போன்ற பாடல்கள் இன்றளவும் சாகா வரம் பெற்று விளங்குகின்றன.

அடுத்து வந்த மாதர் குல மாணிக்கத்தில் பாடல்கள் ஒன்றும் பிரகாசிக்கவில்லை. பிரேமபாசம்(1956) ல், வீசும் தென்றலிலே, பேசும் வெண்ணிலவே" "முரளீதரா, ஹரே மோகனக்ருஷ்ணா" என்று இரு அருமையான பாடல்கள். அலாவுதீனும் அற்புத விளக்கும் என்ற படத்தில் வெவ்வேறு நாட்டு இசை வடிவங்களைத் தொடும் வாய்ப்பு என்று நல்ல மெட்டுக்கள் ராவின் கைவண்ணத்தில் வந்தவண்ணம் இருந்தது."தாயே உன் செயலல்லவோ" (இரு சகோதரிகள்) "போதும் உந்தன் ஜாலமே" (கடன் வாங்கிக் கல்யாணம்), நாராயண மந்த்ரம் (பக்தப் பிரகலாதா) என்று இவரது வெற்றி வரிசை நீள்கிறது.

மாயபாஜாரில், "நீதானா என்னை அழைத்தது" "ஆஹா இன்ப நிலாவினிலே" ஆகிய இரு பாடல்களும் ராவ் இசையமைத்தவை, மற்ற பாடல்களுக்கு திரு கண்டசாலா இசையமைத்தார். பானை பிடித்தவள் பாக்கியசாலியில் ஒலிக்கும் "புருஷன் வீட்டில் வாழப்போகும்" பாடலுக்கு இசை ராவ்தான். பிறகு இப்படத்தின் மற்ற பாடல்களுக்கு எஸ் வி வெங்கட்ராமன் இசையமைத்தார்.

தன்னைப்புரிந்து கொள்ளாத இயக்குனராக இருந்தால் விலகிவிடுவார் ராவ். அப்படி பல படங்களிலிருந்து இவர் விலகியதுண்டு. வேகமாக இசையமைக்க வேண்டும்,பாட்டு உடனே வேண்டும் என்றால் அவர் சம்மதிக்க மாட்டார்.

உலகத்தின் எந்த நாட்டிலிருந்து இசைக்குழுக்களோ, கலைஞர்களோ வந்தாலும் ராவ் சென்று அவர்களது இசையை ரசித்து அனுபவிப்பார். ஒரு கலைஞனுக்கு அனைத்து வகை சங்கீதமும் தெரிந்திருக்க வேண்டும் என்பதில் இவர் உறுதியாக இருந்தார்.

தெலுங்கில் நூறு படங்களுக்கு மேல் இசை அமைத்தவர் ராவ். ஆந்திரப் பல்கலைக் கழத்தால் டாக்டர் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டவர். தமிழக அரசு கலைமாமணி பட்டம் வழங்கியது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் இவரை ஆஸ்தான வித்வானாக ஆக்கியது.

இவர் தமிழில் இசையமைத்த படங்கள்"
மங்கம்மா சபதம் - 1943
தாசி அபரஞ்சி -1944
சந்திரலேகா - 1948
அபூர்வ சகோதரர்கள் - 1949
வாழப்பிறந்தவள் - 1953 (ஜி ராமநாதனுடன்)
மிஸ்ஸியம்மா - 1955
மாதர்குல மாணிக்கம் - 1956
பிரேமபாசம் - 1956
கடன் வாங்கிக் கல்யாணம் - 1958
அவள் யார் 1959
பெற்றமனம் - 1960
விக்கிரமாதித்தன் - 1962 
பக்தப் பிரகலாதா - 1967
தசாவதாரம் - 1976

இவர் சில பாடல்களுக்கு மட்டும் இசையமைத்த படங்கள்:
மாயா பஜார் - 1957, பானை பிடித்தவள் பாக்கியசாலி - 1958

இவரது இசையில் பிரபலமான சில பாடல்கள்:
ஐயய்ய்யய்யே சொல்ல வெட்கம் ஆகுதே - மங்கம்மா சபதம் 
லட்டு வேணுமா லட்டு வேணுமா - அபூர்வ சகோதரர்கள் 
மானும் மயிலும் ஆடும் சோலை - அபூர்வ சகோதரர்கள்.
நாட்டியக் குதிரை நாட்டியக் குதிரை - சந்திரலேகா 
ஆஈளோ பக்கிரியாமா - சந்திரலேகா 
பாண்டுரங்கா பாண்டுரங்கா - சக்ரதாரி 
உனக்கும் எனக்கும் - சக்ரதாரி 
முடியும் என்றால் படியாது - மிஸ்ஸியம்மா 
அறியாப் பருவமடா - மிஸ்ஸியம்மா 
தெரிந்து கொள்ளனும் பெண்ணே - மிஸ்ஸியம்மா 
பழகத் தெரிய வேணும் - மிஸ்ஸியம்மா 
பிருந்தாவனமும் நந்தகுமாரனும் - மிஸ்ஸியம்மா 
வாராயோ வெண்ணிலாவே - மிஸ்ஸியம்மா 
எனையாளும் மேரி மாதா - மிஸ்ஸியம்மா 
வீசும் தென்றலிலே - பிரேம பாசம் 
தாயே உன் செயலல்லவோ - இரு சகோதரிகள் 
எங்கிருந்து வீசுதோ இனிதாகவே தென்றல் - கடன் வாங்கிக் கல்யாணம் 
போதும் உந்தன் ஜாலமே - கடன் வாங்கிக் கல்யாணம் 
நீதானா எனை அழைத்தது - மாயா பஜார் 
ஆஹா இன்ப நிலாவினிலே - மாயா பஜார் 
புருஷன் வீட்டில் வாழப் -போகும் பானை பிடித்தவள் பாக்கியசாலி 

ராகதேவனாகவே வாழ்ந்து, நாதத்தில் 1999 ல் சங்கமித்தார். இன்றளவும் இவரது பாடல்கள் இவர் பெயர் பாடிக் கொண்டிருக்கின்றன. என்றும் பாடும்.

(நன்றி: எழுத்தாளர் திரு வாமனன் அவர்கள்)

No comments:

Post a Comment

குன்னக்குடி வைத்தியநாதன்.

தமிழ்த் திரை இசையின் பிதா மகர்கள் - 16 : குன்னக்குடி வைத்தியநாதன். குன்னக்குடி வைத்யநாதனைப் பற்றி கூற வேண்டுமெனில்; "யாரையும் எ...