தமிழ்த் திரை இசையின் பிதா மகர்கள் - 16 : குன்னக்குடி வைத்தியநாதன்.
குன்னக்குடி வைத்யநாதனைப் பற்றி கூற வேண்டுமெனில்;
"யாரையும் எளிதில் ஏற்காத கர்நாடக இசை உலகில் தனக்கென்று ஒரு பாணியை ஏற்படுத்திக் கொண்டு அதில் வெற்றியும் கண்டார்.
வலையப்பட்டி சுப்பிமரமணியத்தின் தவிலுடன் வயலின் கச்சேரிகள்.
வயலினில் திரை இசை. உரையாடல் போன்றவை
திரை இசை அமைப்பு"என்றுதான் வரையறுக்க வேண்டும்.
திரையிசையில் இவர் இசை அமைத்த காதல் பாடல்களை விட பக்தி பாடல்களே பிரபலம். பக்தி பாடல்கள் பாமரரையும் சென்றடையும் அளவிற்கு இவரது இசை அமைந்தது.
குன்னக்குடி வைத்யநாதனின் தந்தையார் பெயர் குன்னக்குடி ராமசாமி சாஸ்திரிகள். தாயார் - மீனாக்ஷி அம்மாள். தந்தையார் ஹரிகதா காலக்ஷேபம் செய்பவர். "சங்கீத சாகித்ய ஹரிகதா பிரவீன் குன்னக்குடி ராமசாமி சாஸ்திரிகள்" என்று அழைக்கப்பட்டார். குன்னக்குடியின் சகோதரர் கணபதி சுப்பிரமணியம் மிருதங்கம் வாசிப்பவர். தமக்கைகள் சுப்புலக்ஷ்மி-சுந்தரலக்ஷ்மி, குன்னக்குடி சகோதரிகள் என்ற பெயரில் கர்நாடக சங்கீத கச்சேரிகள் செய்து வந்தனர். குன்னக்குடி வைத்தியநாதன் பள்ளி ஏதும் செல்லாமல் அதிகாலையில் நீராடி சந்தியாவந்தனம் முடித்து தந்தையின் பூஜைக்கு தேவையான புஷ்பங்கள் கொணர்ந்து தந்து விட்டு. குன்றின் மேல் காட்சி தரும் ஷண்முகநாதனின் சந்நிதிலேயே பழியை இருப்பார். அங்கு கிடைக்கும் அரை பட்டை சாதம், அரை வடை, அரையணா இவற்றை கொண்டு வந்து தாயிடம் கொடுப்பதுதான் அவரது அன்றாட பணி. இதில் அவரது தாய்க்கு சற்று கவலையே. தன கணவரிடம் இவரை எப்படியாவது கரை தேற்றி விடுங்கள் என்று சொல்லுவார்;
குன்னக்குடி சகோதரிகளின் ஒரு கச்சேரிக்கு வயலின் பக்க வாத்தியம் வாசித்து வந்த திருப்பத்தூர் ராமச்சந்திரச்சார் என்பவர் வரவில்லை. வயலின் இல்லாமலேயே கச்சேரி முடிந்தது. மறுநாள் வந்த அவரை குன்னக்குடியின் தந்தை இப்படி கடைசி நேரத்தில் கழுத்தறுத்து விட்டீரே என்று கேட்டதற்கு. வரமுடியாமல் போச்சு என்று அலட்சியமாக கூறியதுடன், "பொண்ணுங்களை பாட வெச்சுட்டே, பையன் மிருதங்கம், ஆனா வயலினுக்கு என்னைத்தானே எதிர்பார்த்திருக்கே" என்று கேலியாகக் கூறினார். இந்த கேலி பொறுக்காமல் அப்போது அங்கு வந்த சிறுவன் வைத்தியின் கையைப் பிடித்து "இவனைப் பெரிய வயலின் விதவானாக்குகிறேன் என்று சவால் விட்டார். அனைவரும் சிரித்து விட்டனர்.
அவரிடமிருந்து வயலினை குன்னக்குடி வாங்கிய நேரம் அவரது வாழ்வின் ஒரு திருப்புமுனை என்றே கூறலாம். அசுர சாதகம் செய்து ஒரு வருடத்திற்குள்ளாகவே தனது சகோதரிகளின் கச்சேரியில் தனது சகோதரன் மிருதங்கம் வாசிக்க இவரது வயலின் அரங்கேற்றம் நிகழ்ந்தது. பின்னர் பதினோரு வயதிலேயே, காரைக்குடி கிருஷ்ணன் கோயிலில், அரியக்குடி ராமானுஜ ஐயங்காரின் கச்சேரிக்கு வயலின் வாசிக்க வாய்ப்பு கிடைத்தது. பின்னர் ஓரிரு ஆண்டிலேயே, மகாராஜபுரம் விஸ்வநாத அய்யர், செம்மங்குடி ஸ்ரீனிவாச அய்யர் போன்ற பல முன்னணி விதவான்களுக்கு குன்னக்குடி அவர்கள் வயலின் வாசித்திருக்கிறார்.
இவ்வாறு மேடைகளில் பல வித்வான்களுக்கு பக்க வாத்தியம் வாசித்து வந்த குன்னக்குடியின் கவனம் சினிமா இசையின் மீது திரும்பியது. ஜலதரங்கம் வெங்கட்ராம ராவ் என்பவற்றின் சிபாரிசில் மாடர்ன் தியேட்டர்ஸில் மாதச் சம்பளத்தில் வேலை கிடைத்தது. ராமநாத அய்யர், எஸ் எம் சுப்பையா நாயுடு போன்ற இசை மேதைகளுடன் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது.
வாய்ப்புக்களை பெருக்கிக் கொள்ள, 1952ல் சென்னை வந்தார் குன்னக்குடி. திரை இசைக் கலைஞராகவும், சூலமங்கலம் சகோதரிகள் போன்றோருக்கு பக்க வாத்தியம் வாசிப்பவராகவும் தனது இசைப்பயணத்தைத் தொடர்ந்த அவர், 1960லிருந்து தனிக் கச்சேரிகள் வழங்கத் தொடங்கினார்.
அப்போது ஹெச் எம் வி நிருவனத்தில் பக்திப் பாடல் இசை அமைக்கும் வாய்ப்பு வந்தது. ஏ வி எம்மின் கொலம்பியா நிறுவனத்திற்கும் நூற்றுக்கான பக்திப் பாடல்கள் இசைமைத்து, அவை தமிழ் நாட்டின் மூலை முடுக்குகளிலெல்லாம் பரவத் தொடங்கின. அவற்றில் ஒன்றுதான் "திருப்பங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா" என்ற சூலமங்கலம் சகோதரிகளின் புகழ் பெற்ற பாடல்.
இப்பாடலை தனது கந்தன் கருணையில் சேர்த்துக் கொள்ள விரும்பினார் திரு ஏ பி நாகராஜன். திரு மகாதேவன் அவர்கள் இதற்கு சம்மதிப்பாரா என்ற குன்னக்குடியின் ஐயத்திற்கு "மகாதேவனிடம் நாங்கள் சொல்லிவிட்டோம், இதற்கு நீங்கள் சம்மதித்தால் வளர்ந்து வரும் ஒரு கலைஞருக்கு நீங்கள் வழி காட்டியது போல் இருக்கும் என்றோம். அவரும் சம்மதித்து விட்டார்" என்று கூறினார் ஏ பி என். அப்படத்தில் இந்தப் பாடல் மட்டும்தான் இடம் பெற்றது, குன்னக்குடியின் பெயர் இடம் பெறவில்லை.
ஆனாலும் குன்னக்குடி மனம் தளரவில்லை. மீண்டும் இயக்குனர் ஏ பி என், குன்னக்குடியை அழைத்து, தனது வா ராஜா வா படத்திற்கு இசை அமைக்கும் பொறுப்பை அளித்தார். டி எம் எஸ், பி சுசீலா, கண்ணதாசன், வாலி என்ற ஜாம்பவான்கள் யாரும் இல்லாத ஒரு சூழ்நிலை. படத்தின் பட்ஜெட் அப்படி. இப்படத்திற்கு குன்னக்குடி 5 பாடல்கள் போட்டார். ஐந்துமே சூப்பர் ஹிட்.
முதல் பாடலாக ஆபேரி ராகத்தில் "இறைவன் படைத்த உலகில் எல்லாம் மனிதன் வாழுகின்றான்" என்ற பாடகி. பூவை செங்குட்டுவனின் வரிகளுக்கு, சீர்காழியின் குரலில் பாடலைக் கேட்கும்போதே மனம் இசையில் லயித்துப் போகின்றது. அடுத்து மஹாபலிபுரத்தின் சிற்பக்க கலையை விளக்கும், "கல்லெல்லாம் சிலை செஞ்சான் பல்லவ ராஜா" சிறுவர் முதல் பெரியோர் வரை விரும்பிக் கேட்ட பாடல் இது.
அடுத்து இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஏ பின் எடுத்த படம் "திருமலைத் தென்குமரி".. இதில் "மதுரை அரசாளும் மீனாக்ஷி" பாடலில் காபி ராகத்தின் சொரூபத்தைக் காட்டி, கானடா, பீம்பிளாஸ், கல்யாணி, குந்தளவராளி ஆகியவற்றை தொடும் அரிய பாடல் இது "திருப்பதி மலை வாழும் வெங்கடேசா" பாடலில் சுப்ரபாதத்தை இணைத்து ஒரு தெய்வீக உணர்வை ஏற்படுத்தி விட்டார் என்றால் அது மிகையாகாது. ஜனரஞ்சகமாக பல மொழிப்பாடல் ஒன்றும் உண்டு. அதுவும் எல்லோராலும் வெகுவாக ரசிக்கப்பட்டது.
அடுத்து ஜி என் வேலுமணி தயாரித்து இயக்கிய "நம்ம வீட்டு தெய்வம்". கே ஆர் விஜயா முதல் முதலில் தெய்வ வேடம் ஏற்ற படம். இதில் தமிழ் அறிஞர் திரு கி வா ஜெகந்நாதனை பாடல் எழுத அணுகினார். குன்னக்குடி. இசை அமைப்பாளர்கள் போடும் ச(ந்)த்தத்திற்கெல்லாம் பாட்டெழுத முடியாது என்றார் கி வா ஜெ முதலில். பின்பு குன்னக்குடியின் வற்புறுத்தலின் பேரில் எழுத வந்தவர், மெட்டு என்ன என்று வினவினார். உங்கள் தமிழ் தங்கு தடையில்லாமல் அருவி போல் பெருக்கெடுத்து வர வேண்டுமென்பதால் நீங்கள் எழுதும் சந்ததிற்கு நான் மெட்டமைக்கிறேன் என்றார் குன்னக்குடி. எங்கே இந்த வரிக்கு ஒரு மெட்டுப் போடுங்கள் பார்க்கலாம் என்று "உலகமெல்லாம் படைச்சவளே ஓங்காரி" என்ற வரிக்கு குன்னக்குடியின் வயலின் வாசிப்பைக் கேட்டு மகிழ்ந்த திரு கி வா ஜெ, இரண்டாவது வரியிலிருந்து நீங்கள் போடும் மெட்டுக்கே பாடல் எழுதுகிறேன் என்றார். இரண்டாவது வரியிலிருந்து திஸ்ர நடையை சதுஸ்ரமாக்கி கொடுக்க அதற்கும் "உன்னை நம்பி வந்தோமம்மா வா என்று எழுதினார். டி எம் எஸ், பி சுசீலா இருவரது குரல்களில் இப்பாடல் பெரிய வெற்றிப் பாடலாக அமைந்தது. பின்னர் அன்னை அபிராமி என்ற படத்திலும், "இல்லை என்பான் யாரடா", "மாகாளி, மகமாயி, சாமுண்டி" என்று இரண்டு பாடல்களை திரு கி வா ஜெ எழுதினார்.

அடுத்து ஏ பி என் இயக்கிய கண்காட்சியில் அவரது விருப்பத்திற்கேற்ப பீம்பிளாஸ் இராகத்தில் புதுமையாக ஒரு டூயட் கேட்டார் ஏ பி என். சற்று யோசித்த குன்னக்குடி, இது வரையில் ஏழு அட்சரங்கள் கொண்ட மிஸ்ர நடையில் எவரும் அமைத்திராத காதல் டூயட் ஒன்று அமைத்தார். "தனன்ன தன்னன தன்ன என்று தொடங்கி குன்னக்குடி சொன்ன தத்தகாரத்தை, கவிஞர் கே டி சந்தானம்
"அனங்கன் அங்கஜன் அன்பன்
வசந்தன் மன்மதன் என்றும்
வணங்கும் என் உயிர் மன்னவா" என்று எழுதினர்.
அடுத்து சீர்காழி பிரதான பாத்திரத்தில் நடித்த அகத்தியர். இதில் சீர்காழியும், நாரதராக வந்த டி ஆர் மகாலிங்கமும் இணைந்து பாடும் "இசையாய் தமிழாய் இருப்பவனே" என்ற பாடலைக் கேட்ட திரு மகாராஜபுரம் சந்தானம் அவர்கள், "கரஹரப்பிரியாவின் அனைத்து சஞ்சாரங்களையும் ஒரே பாடலில் திரட்டித் தந்து விட்டீர்களே" என்று பாராட்டினார்.
இதே படத்தில் நடந்தாய் வாழி காவிரி, மலை நின்ற திருக்குமரா மால் மருகா, வென்றிடுவேன், நாட்டையும் நாததால் வென்றிடுவேன்" என்று வரிக்கு வரி ராகம் மாறி வரும் ராகமாலிகையாக டி எம் எஸ்-சீர்காழி பாடும் போட்டிப் பாடல் என்று ஒரு இசை விருந்தையே படைத்து விட்டார். சிறுவர்களுக்காக தாயிற் சிறந்த கோயிலும் இல்லை என்ற பாடல் வேறு.
இவரது பெரிய வெற்றிபப் படம் என்று சொன்னால் "தேவரின் தெய்வம்" தான். இதில் கர்நாடக இசையில் புகழ் பெற்றிருந்த கலைஞர்களையும், பக்திப் பாடல்கலில் புகழ் பெற்றவர்களையும் பாட வைக்க விரும்பினார் குன்னக்குடி. மதுரை சோமு ஏற்கெனவே திரைக்குப் பொருத்தம் இல்லை என்று நிராகரிக்கப் பட்டவர், பாடுவதற்கு தயங்கிய அவரை பலவாறு எடுத்து சொல்லி சம்மதிக்க வைத்து "மருத மலை மாமணியே" பாடலை பாட வைத்தார். பெரும் புகழ் அடைந்த பாடலாயிற்று அது. ராதா ஜெயலக்ஷ்மி அவர்கள் பாடிய "வருவாண்டி தருவாண்டி மலையாண்டி" பித்துக்குளி முருகதாஸ் அவர்கள் பாடிய" நாடறியும் நூறு மலை", பெங்களூர் ரமணி அம்மாள் பாடிய "குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்" டி எம் எஸ்-சீர்காழி இணைந்து பாடிய "திருச்செந்தூரின் கடலோரத்தில்" ஆகிய அனைத்துப் பாடல்களுமே பெரும் வெற்றி பெற்றன.
பிறகு ராஜ ராஜ சோழன், குமாஸ்தாவின் மகள் என்று சில தோல்விப் பாடல்கள். ஆயினும் இவரது இசை அதில் சோடை போகவில்லை. அடுத்து சிவாஜி கணேசனின் மனிதனும் தெய்வமாகலாம் - இதில் வாதாபி கணபதிம் பஜே வை மெல்லிசையாக்கி இவர் போட்ட காதல் டூயட் தான், பால் பொங்கும் பருவம். கவியரசரையும் நடிகர் திலகத்தையும் அசர வாய்த்த மெட்டு அது.
அதன் பின் தேவரின் திருவருள், மேல் நாட்டு மருமகள் போன்ற படங்களில் இவரது பாடல்கள் வெற்றி பெற்றன.
பிறகு இவர் தயாரிப்பில் உருவான கந்தரலங்காரம், சேலம் ராமச்சந்திரனின் தயாரிப்பில் ராக பந்தங்கள் என்று இவர் இசையமைப்பு தொடர்ந்தது, இதில் ராக பந்தங்கள் படத்தில் வாணி ஜெயராம் குரலில் "சரிகமபதநி என்னும் சப்தஸ்வர ஜாலம் என்ற பாடல் சொல்லும்படி அமைந்திருந்தது.
அடுத்து மீண்டும் இவரது தயாரிப்பில் "தோடி ராகம்" டி என் சேஷகோபாலன் கதாநாயகன், இதில் தோடியில் பாடுகின்றேன் என்று தோடி ராகத்தில் அமைந்த பாடல் பிரசித்தம். குன்னக்குடியின் குரலில் "கொட்டாம்பட்டி ரோட்டிலே" என்று ஒரு நாட்டுப்புறப்(!) பாடல். இதற்குப் பிறகு குன்னக்குடி இரு படங்கள் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். இரண்டும் நிறைவேறவில்லை. அதன் பின்னர் அவர் திரைத்துறையில் ஈடுபட்டதாகத் தெரியவில்லை.
திரையிசையில் பக்திப் பாடல்களில் பெருமளவு வெற்றி பெற்றவர் என்ற பெருமை இவருக்கு எப்போதும் உண்டு.
(நன்றி: திரு வாமனன் அவர்கள்)
No comments:
Post a Comment