தமிழ்த் திரை இசையின் பிதாமகர்கள் - 8.
வி தக்ஷிணாமூர்த்தி - எஸ் தக்ஷிணாமூர்த்தி
தென்னியத் திரையுலகில் இரு மூர்த்திகளின் கீர்த்தியும் சிறந்து விளங்கிய காலம் அது. ஆனால் ஒருவர் இசையை மற்றவரது என்று குழப்பியும் கொள்வார்கள் பலர். இன்றும் ரசிகர்கள் சிலர் இவர்களது பாடலை மற்றவர் பெயரில் பதிவிடுகிறார்கள். இந்தக் குழப்பம் தீரவே நான் இருவரைப் பற்றியும் ஒரே கட்டுரையில் எழுதுகிறேன்.
வி தக்ஷிணாமூர்த்தி. உண்மையிலேயே பிதாமகர். "ஸ்வாமிகள்" என்றே மலையாள இசையுலகில் இவரை அழைப்பர்.
பத்து வயதாயிருந்தபோது, திருவனந்தபுரத்திலிருக்கும் வெங்கடாசலம் பொட்டி என்பவர் அவருக்கு கர்நாடக இசையில் பயிற்சி அளித்தார். இவருடைய முதல் பொது நிகழ்ச்சி 13 வயதில் அம்பலப்புழா ஸ்ரீ கிருஷ்ணன் கோவிலில் நடைபெற்றது. ஒரு நாள் நள்ளிரவில் பெருமழையில், கஞ்சிரா வித்வான் கடுவ கிருஷ்ணன் இவரது வீட்டிற்கு வந்து மறுநாள் காலையில் வைக்கத்தில் நடைபெறும் ஒரு திருமணத்தில் கச்சேரி செய்ய வேண்டும் என்று இவரை அழைத்தார். இவரது தாயார் அனுமதி தரவே இருவரும் உடனே புறப்பட்டு கால்நடையாக கருமாடி படகுத்துறை அடைந்து அங்கிருந்து மறுநாள் காலை 8 மணிக்கு வைக்கம் சென்றடைந்தனர். பின்னர் குளித்து முடித்து வைக்கத்தப்பனை தரிசித்து விட்டு கச்சேரி செய்யும் இடத்தை அடைந்து கச்சேரி செய்தனர்.
கொச்சியை சேர்ந்த தவில் வித்வான் ஒருவர் தக்ஷிணாமூர்த்தி வைக்கத்தில் தங்கி தனது உறவினர்களுக்கு கர்நாடக இசை பயிற்றுவிக்க வேண்டும் என்று விரும்பினார். ஆகையால் அவர் வைக்கத்தில் தங்கினார். தினமும் காலையிலும் மாலையிலும் அன்னதானப் பிரபு வைக்கத்தப்பாவை துதி செய்யாமல் இருந்ததில்லை.இவருடைய 42 மாத வைக்கம் வாழ்வில் தினமும் வைக்கத்தப்பன் கோவிலில் பாடியும், நிர்மால்ய தரிசனம் செய்தும் வந்தார்.
1942ல் இவர் மதராசிற்கு ஆல் இந்தியா ரேடியோவில் பாடுவதற்கு வந்தார். பிறகு அடிக்கடி மதராசிற்கு பாட வர நேர்ந்தது. 1948ல் மைலாப்பூரில் தங்கி விட்டார். பாலக்காட்டில் வசித்த 4 வருடங்களைத் தவிர, மதராஸ்தான் இவரது உறைவிடமாக இருந்தது.பிரபல கர்நாடக பாடகி திருமதி என் சி வசந்தகோகிலம் இவரது சிஷ்யையாவார்.

மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நூற்றுக்கணக்கான திரைப்படங்களுக்கு தட்சிணாமூர்த்தி இசையமைத்துள்ளார்.மொத்தத்தில் இவர் தமிழில் 9 படங்களுக்கு மட்டுமே இசையமைத்துள்ளார். அவற்றுள் சில:
நல்லதங்காள் திரைப்படம், நந்தா என் நிலா, ஆசை மகன், தேவி (மலையாளத்தில் "காவ்யமேளா"), ஒரு கோவில் இரு தீபங்கள், ஜீவநாடி, ஜெகத்குரு ஆதி சங்கரர் போன்றவை.
இவரது புகழ்பெற்ற சில பாடல்கள்.
நந்தா நீ என் நிலா - நந்தா என் நிலா
நல்ல மனம் வாழ்க - ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது.
ஆண்டவன் இல்லா உலகமிது - ஒரு ஊதாப்பூ " "
அருவிமகள் அலையோசை - ஆசைமகன்
தேவி ஸ்ரீதேவி, தேடியலைகின்றேன் - தேவி (மலையாளத்தில் "காவ்யமேளா")
முத்து முத்துப் புன்னகையே - ஒரு கோவில் இரு தீபங்கள்.
இதில் நந்தா என் நிலா என்ற பாடலுக்கு ஒரு தனிச்சிறப்பு உள்ளது. தமிழ்த் திரைப்பாடல்களியே மிக நீண்ட பல்லவியுடைய பாடல் இது ஒன்றுதான்.
இவர் பல விருதுகள் பெற்றிருந்தபோதிலும் தமிழக அரசு இவரை உரிய விதத்தில் கௌரவிக்கவில்லை என்பது ஒரு வருத்தமே.
ஆகஸ்ட் 2, 2013 அன்று தனது 94ஆவது வயதில் காலமானார். இவரது இழப்பு மலையாள திரையுலகிற்கு ஒரு பேரிழப்பாகும்.
எஸ். தக்ஷிணாமூர்த்தி.
நவம்பர் 11, 1921ஆம் ஆண்டு, ஆந்திராவிலுள்ள கிருஷ்ணா மாவட்டத்தில் ப்டீகப்பள்ளி என்ற ஊரில் பிறந்தார். இவரது பட்டனர் திரு தட்சிணாமூர்த்தி சாஸ்திரிகள், ஒரு தலைசிறந்த கர்நாடக இசை வல்லுநர். அவரிடம் இசை பயில மாணவர்கள் பல இடங்களிலிருந்தும் வருவர். அவர்களுக்கு சொல்லிக் கொடுப்பதைக் கேட்டு சிறுவன் தக்ஷிணாமூர்த்தி தனது சிறு வயதிலேயே ஒரு இசை மேதையாக விளங்கினார். 9 வயதிலேயே மசிலிபட்ணத்தில் நடைபெறும் 9 நாள் நவராத்திரி உற்சவத்திற்கு பல இசைக் கலைஞர்களுக்கு வயலின் வாசித்துள்ளார்.
1983ல் HMV நிறுவனத்தில் ஹார்மொனியக் கலைஞராக பணிபுரிந்துள்ளார். வி தட்சிணாமூர்த்தி சுவாமிகளைப் போலவே இவரும் ஆ்ல் இந்தியா ரேடியோவில் பணியாற்றியுள்ளார். டெல்லி நிலையத்தில் இவரை, தென்னிந்திய இசையின் இயக்குனராக பணியாற்றுமாறு அழைப்பு விடுத்தனர் என்றால் இவரது திறமையை நீங்கள் புரிந்து கொள்ளலாம். இவரும் மதராசில் மயிலாப்பூரில் தங்கி இருந்தார்.

முதல் முதலாக திரைப்படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு இவருக்கு சம்சாரம் என்ற படத்திற்கு கிடைத்தது. தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் தயாரிக்கப்பட்ட படம்.
இவரும் மிகக் குறைந்த அளவே தமிழ்ப் படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவர் தமிழில் இசையமைத்த படங்கள்.:
சம்சாரம் - 1950
சர்வாதிகாரி - 1951
வளையாபதி - 1952
கல்யாணி - 1952
வேலைக்காரி மகள் - 1953
மங்கையர் திலகம் - 1955
அலிபாபாவும் 40 திருடர்களும் - 1956
யார் பையன் - 1957
பாக்யவதி - 1957
பங்காளிகள் - 1961 போன்றவை. இது தவிர, லைலா மஜ்னு தெலுங்குப் படத்தில் ஒரு பாடலும் சர்வாதிகாரி படத்தில் ஒரு பாடலும் பாடியுள்ளார்.
இவர் இசையில் சில புகழ் பெற்ற பாடல்கள்:
சம்சாரம் சம்சாரம் - சம்சாரம்
சர்வாதிகாரி - கண்ணாளன் வருவான்
வளையாபதி - குலுங்கிடும் பூவிலெல்லாம் (பாரதிதாசன்)
கல்யாணி - இனி பிரிவில்லாமலே வாழ்வோம் நம் உலகிலே
மங்கையர் திலகம் - நீலவண்ணக் கண்ணா வாடா, நீ வரவில்லையெனில் ஆதரவேது
அலிபாபாவும் 40 திருடர்களும் - அனைத்துப் பாடல்களும்
யார் பையன் - சுயநலம் பெரிதா, பொது நலம் பெரிதா
பாக்யவதி - பொம்பளைங்க தெரிஞ்சு கொள்ளணும்...இந்தக்கால
பொம்பளைங்க தெரிஞ்சு கொள்ளணும்...
என் டி ராமராவிற்கு இவர் மிகவும் பிடித்தமான இசையமைப்பாளர். தனது தயாரிப்பில் "ஸ்ரீமத் விராட பருவம்" (1983), ஸ்ரீமத் பொட்டுலூரி வீரப்ரம்மேந்திர சரிதா" (1984) ஆகிய இரு படங்களுக்கும் இவரை பணியாற்ற அழைத்தார். அந்நாளில் இவ்விரு படங்களும் சிறந்த "MUSICAL HIT" ஆக விளங்கின.
இவரது திரை வாழ்க்கை இவரது உடல்நலக் குறைவினால் விரைவிலேயே பாதிக்கப்பட்டது. நீரிழிவினால், தனது கண்களின் பார்வை ஒன்றினை 1972ல் இழந்தார். அடுத்த கண் பார்வையையும் 1987ல் இழந்தார்.
இவர் தனது சென்னை இல்லத்தில் ,ஃபிப்ரவரி 9, 2012 ல், தக்ஷிணாமூர்த்தி ஸ்வாமிகள் இறப்பதற்கு ஒரு வருடத்திற்கு முன் இறந்தார். மருத்தவமனை எடுத்து செல்ல வேண்டாம், வீட்டிலியே இறக்க விரும்புகிறேன் என்ற இவரது கடைசி ஆசையின்படி ஆம்புலன்ஸ் வருவதற்கு 5 நிமிடம் முன்பே உயிர் துறந்தார்.
சமகாலத்தவரான இருவரும் தங்களது பாரம்பரிய இசையினை தக்க வைத்துக் கொண்டு, திரை இசைக்கு தொண்டாற்றினார். இவர்களது பங்களிப்பு மற்றவர்களை விட குறைவாக இருந்தாலும், தரத்திலும், அழியாப் புகழிலும் முன்னிலை வகிக்கின்றன. இவ்விருவரது இசைத் திறமைக்கும் எனது இக்கட்டுரை சமர்ப்பணம்.
புகைப்படங்கள்: 1. வி தக்ஷிணாமூர்த்தி ஸ்வாமிகள்.
2. எஸ் தக்ஷிணாமூர்த்தி அவர்கள்
No comments:
Post a Comment