Wednesday, July 19, 2017

ஆர் சுதர்சனம்

தமிழ்த் திரை இசையின் பிதா மகர்கள் - 10 ஆர் சுதர்சனம்.

ஏ.வி.எம் என்ற சாம்ராஜ்யத்தில் ஐக்கியமானவர் சுதர்சனம். அவரது பேரைச் சொல்லிக்கொண்டிருக்கும் பாடல்கள் ஏராளம். அவரது இசையில் உருவான பாடல்களையும் அவரது வாழ்க்கைக் குறிப்பும் இன்று காண்போம்.

சுதர்சனம் 1914ல் ராமகிருஷ்ண செட்டியாரின் ஐந்து பிள்ளைகளில் மூத்தவராக பிறந்தார். சுதர்சனத்திடம் இயல்பாக இசைத்திறமை இருந்தது. மெய்யப்ப செட்டியார் பங்கு வகித்த சரஸ்வதி ஸ்டோர்ஸ், நான்கு நாடகங்களை கிராமபோன் இசைத்தட்டுக்களாக தயாரிக்கும்போது அவற்றிற்கு ஹார்மோனியம் வாசிக்க சுதர்சனம் அமர்த்தப்பட்டார். பின்னர் அங்கேயே 60 ரூபாய் மாதச் சம்பளத்திற்கு கம்பெனியின் கலைஞராக நியமிக்கப்பட்டார்.

இவரது முதல்பட வாய்ப்பு பாகவதர் நடித்த திருநீலகண்டர் என்று தெரிகிறது. டி ஏ கல்யாணமும் சுதர்சனமும் சேர்ந்து இப்படத்திற்கு இசையமைத்தனர்.

கல்கத்தா, பூனா ஆகிய இடங்களுக்கு சென்று படப்பிடிப்பு நடத்தி நஷ்டம் அடைந்த மெய்யப்ப செட்டியார், சிலரது கூட்டணியுடன் சென்னையிலேயே பிரகதி என்ற ஸ்டூடியோ துவங்கினார். இதில் மாதச் சம்பளத்தில் இசை அமைப்பாளராக சேர சுதர்சனத்திற்கு அழைப்பு வந்தது. வாயாடி போலி (1940), பூகைலாஸ்(தெலுங்கு) கரிச்சந்திரா (கன்னடத்திலிருந்து தமிழாக்கம்) போன்ற படங்களுக்கு செட்டியாரின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப இசையமைத்து அவரை கவர்ந்தார் சுதர்சனம்.

சரஸ்வதி ஸ்டோர்ஸில் பணியாற்றி வந்த துறையூர் ராஜகோபால சர்மாவின் பங்களிப்பும் இப்படங்களில் சமமாக இருந்தது. ஆனால் இப்படங்களில் இசையமைப்பாளர்களின் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை. பின்னணி சங்கீதம் - சரஸ்வதி ஸ்டோர்ஸ் ஆர்கெஸ்டிரா என்று மட்டுமே பாட்டுப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது, சபாபதி படத்திலும், சங்கீதம் - சரஸ்வதி ஸ்டோர்ஸ் ஆர்கெஸ்டிரா என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. 

முதன் முதலாக இசையமைப்பாளர்களின் பெயர் குறிப்பிடப்பட்டு மாபெரும் வெற்றியடைந்த படம் ஏ வி எம்மின் ஸ்ரீ வள்ளி. இதில் முதலில் துறையூர் ராஜகோபால சர்மாவின் பெயரும் அடுத்து சுதர்சனத்தின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளன. இதன் பின் துறையூர் ராஜகோபால சர்மா ருக்மிணி அவர்கள் நடத்திய கலாக்ஷேத்திராவில் இணைந்தபடியால், சுதர்சனம் ஏ வி எம்மின் ஆஸ்தான இசையமைப்பாளரானார்.

நாம் இருவர், வேதாள உலகம், ஓர் இரவு ஆகிய படங்கள் சுதர்சனத்தின் பன்முக ஆற்றலை வெளிப்படுத்தின. ஆனால் ஏ வி எம்மிற்கு புது வாழ்வு தந்த படம் 1949ல் வெளியான வாழ்க்கை ஆகும். இப்படத்தில் செட்டியாரின் விருப்பத்திற்கேற்ப ஹிந்தியிலிருந்து இரவல் மெட்டுக்கள் இருந்தாலும் (ட ட டா ட ட டா, எண்ணி எண்ணி பார்க்க மனம்) வைஜயந்தி மாலாவின் மார்வாரி பாணியில் அமைந்த, "கோபாலனோடு நான் ஆடுவேனே" என்ற பாடல் மிகவும் பெயர் பெற்றது.

சுதர்சனத்தின் முழுத்திறமையைக் காட்டிய படம் "பராசக்தி" இதில் அவரது இசையில் பல வெற்றிப் பாடல்கள் அமைந்தன. "கா கா கா, ஒ ரசிக்கும் சீமானே, இல்வாழ்வினிலே ஒளியேற்றும் தீபம் என் இதயராணி ரூபம், பூமாலை நீயே, புது பெண்ணின் மனசைத் தொட்டு, தேசம் ஞானம் கல்வி, கொஞ்சும் மொழி சொல்லும் கிளியே" போன்ற பாடல்கள் அனைத்தும் ரசிகர்களால் பெரிதும் விரும்பப்பட்டு இன்றளவும் ரசிக்கும்படி அமைந்தன.

இசை மேதை ஜி ராமநாதன், கே வி மகாதேவன், விஸ்வநாதன்-ராமமூர்த்தி ஆகியோரைப் போல் இவரும் தனித்தன்மை வாய்ந்த இசையமைப்பாளராக விளங்கினார். பெண் படத்தில் "சொன்ன சொல்லை மறந்திடலாமோ வா வா வா", "உல்லாசமாகவே உலகத்தில் வாழவே" குலதெய்வம் படத்தில் "வெட்கமில்லை வெட்கமில்லை" மாமியார் மெச்சிய மருமகள் படத்தில் "மனமோகனா என்னைப் பாரடா" ஆகிய பாடல்கள் இவர் இரவல் மெட்டுக்களை மட்டுமே நம்பியிருக்கவில்லை என்று நிரூபிக்கின்றன.

60 களில் திரையுலகில் இசையமைப்பில் மாறுதல் வந்தபோது தன்னையும் அதற்கேற்றவாறு மாற்றிக் கொண்டார் சுதர்சனம். 1960 "அன்பாலே தேடிய அறிவுச் செல்வம் தங்கம்" தந்த அதே ஆண்டில் களத்தூர் கண்ணம்மாவில் "ஆடாத மனமும் ஆடுதே, கண்களின் வார்த்தைகள் புரியாதோ" போன்ற பாடல்களை அளித்துள்ளார். புதிய கருவிகள் இசையுலகில் அறிமுகப்படுத்தப்படும்போது அவற்றை பயன்படுத்த இவர் தயங்கியதில்லை, உதாரணம் செல்லப்பிள்ளையில் வரும் "மதனா, எழில் ராஜா என்ற பாடலில் மாண்டலின் இசைக்கருவியை பயன்படுத்தியிருப்பார்.

பாடலின் கவிதை நயத்தை சிதைக்காமல் இருக்கத்தான் இசை என்ற கருத்தில் உறுதியாக இருந்ததால்தான் இவரால் அன்னை,நானும் ஒரு பெண் ஆகிய படங்களில் இனிமையான இசை வழங்க முடிந்தது. இவர் என்றுமே சுத்தமான கர்நாடக இசையின் அடிப்படையில் இசையமைத்ததில்லை. மெல்லிசையுடன் இருந்தால்தான் சிறிது இசை நுணுக்கங்களும் இருந்தால்தான் மக்கள் ரசிப்பார்கள் என்பது இவரது கருத்து.

ஏ வி எம்மின் கூட்டுத் தயாரிப்பில் உருவான, பாவமன்னிப்பு, பார்த்தால் பசி தீரும் ஆகிய படங்களில் இசையமைத்த விஸ்வநாதன்-ராமமூர்த்தியின் அலையில் வசீகரிக்கப்பட்ட செட்டியாரின் வாரிசுகள் மெல்லிசை மன்னர்களை தங்களது அடுத்த தயாரிப்புகளுக்கு நாடியபோது செட்டியாரால் கூட சுதர்சனத்திற்கு அரணாக விளங்க முடியவில்லை. 1959ல் செட்டியார் தனது சொந்த செலவில் சுதர்சனத்திற்கு வீடு கட்டித் தந்திருந்தார். அவரை பாதி சம்பளத்தில் தொடர்ந்து ஏ வி எம் நிறுவனத்திலேயே பணிபுரியுமாறு கேட்டுக் கொண்டார். ஆனால் சுதர்சனம் "நான் இருந்த இடத்தில் இன்னொருவரைப் பார்க்க முடியாது" என்று கூறி, வீட்டையும், நிறுவனத்தையும் விட்டு வெளியேறினார்.

ஏ வி எம்மை விட்டு வெளியே வந்த பிறகும் பூம்புகார், பூமாலை, அன்புக்கரங்கள், கார்த்திகை தீபம், மணிமகுடம், வாலிப விருந்து போன்ற படங்களுக்கு இசையமைத்தார். ஸ்ரீவல்லியில் "காயாத கானகத்தே" என்று பாடலை வழங்கியவர், 20 ஆண்டுகள் ஆகியும், "உன்னை முதன் முதலாக பார்த்தபோது, எண்ணப் பறவை சிறகடித்து, இரவு முடிந்து விடும்" போன்ற பாடல்களை நமக்கு அளித்தார் என்றால் அவரது திறமையைக் குறைவாக எடை போட முடியாது. 1966ல் இவர் இசையமைத்த மணிமகுடம் படத்தின் பாடல்கள் சொல்லும்படி இல்லை, கடைசியாக இவர் வாலிப விருந்து என்ற படத்திற்கு 1967ல் இசையமைத்தார். 

மொத்தமாக இவர் இசையமைத்த படங்கள் "பூகைலாஸ்" என்ற தெலுங்குப் படத்தையும் சேர்த்து 27. படங்கள் இல்லாபோதும் இவருக்கு எவ்வித வருத்தமும் இல்லை. பொழுதுபோக்காக சிலருக்கு வீணை கற்றுக் கொடுத்தார்.

நெடுநாளைய வெற்றிலை-புகையிலைப் பழக்கம், 1990ல் இவரது கல்லீரலைப் பாதித்தது. அறுவை சிகிச்சைக்கு பிறகு ஆறு மாதம் கழித்து 1991 ல் இவர் காலமானார்.

தமிழ்த் திரையுலகில் "மாஸ்டர்" என்று அழைக்கப்பட்ட ஒரே இசையமைப்பாளர், இது யாரும் வழங்கிய விருது அல்ல, திரையுலகினரும் ரசிகர்களும் அன்போடு அவருக்கு அளித்த விருது.

நன்றி: திரு வாமனன் அவர்கள்.

No comments:

Post a Comment

குன்னக்குடி வைத்தியநாதன்.

தமிழ்த் திரை இசையின் பிதா மகர்கள் - 16 : குன்னக்குடி வைத்தியநாதன். குன்னக்குடி வைத்யநாதனைப் பற்றி கூற வேண்டுமெனில்; "யாரையும் எ...