Friday, July 21, 2017

வேதா

#தமிழ்த்_திரை_இசையின்_பிதா_மகர்கள்# - 11 - வேதா 

முழுப் பெயர் வேதாசலம். வேதாவின் பெற்றோர்கள் தென் ஆப்பிரிக்காவில் இருந்தார்கள். இந்தியாவிலேயே தன் மாமாவின் வீட்டில் தங்கிப் படித்து வந்தார் வேதா. சிறுவயதிலேயே இசையின் மீது ஈடுபாடு உண்டாயிற்று. வேதாவின் மாமாவிற்கு இசையில் மிகுந்த ஆர்வம் இருந்தது. அவர் வேதாவிற்கு கர்நாடக சங்கீதம் சொல்லிக் கொடுத்தார்.

ஒரு நாள் ப்ரொபஸர் காப்ரியல் அவர்களின் இசை நிகழ்ச்சியைக் காண நேர்ந்தது. அவரது இசையினால் பெரிதும் கவரப்பட்ட வேதா, தானும் ஒரு இசையமைப்பாளராக வேண்டும் என்று உறுதி பூண்டார். தன்னை காப்ரியலிடம் அறிமுகப் படுத்திக்கொண்டு அவரிடம் ஹிந்துதானி இசை பயில ஆரம்பித்தார். ஏற்கெனவே வேதாவிற்கு பங்கஜ் மல்லிக், சைகல் போன்றோரின் பாடல்களில் மிகுந்த ஈடுபாடு உண்டு.

அந்நாளில் வெங்கடாசலம் என்பவரது வீட்டில் கலைஞர்கள் ஒன்று கூடி இசை நிகழ்ச்சிகள் நடத்துவது வ ழக்கம். இது போன்ற ஒரு நிகழ்ச்சியில் வெங்கடாச்சலத்தின் நண்பரான இசை அமைப்பாளர் சி பாண்டுரங்கனை வேதா சந்தித்தார். அவருடன் சில காலம் பணி புரிந்தார். போதிய அளவு வாய்ப்புகளும் வருமானமும் இல்லாமல் போகவே அவரிடமிருந்து விலகினார். நடிகை வைஜயந்திமாலா நடத்திவந்த நாடகக் குழுவில் சில காலம் ஹார்மோனியம் வாசித்து வந்தார்.

50களில் சில படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து வந்தவர் நடிகர் ஸ்ரீராம். அவர் மூலம் சிங்களப் படத் தயாரிப்பாளர்களான ஜெயமனே சகோதரர்களின் அறிமுகம் வேதாவிற்கு கிடைத்தது. "மாறும் விதி என்ற சிங்களப் படத்திற்கு வேதா இசை அமைத்தார். அந்தப் படம் வேதாவின் வாழ்க்கையையே மாற்றிவிட்டது.
அந்தப் படம் மகத்தான வெற்றி கண்டது. பின்னர் ஜெயமனே சகோதரர்கள் தயாரித்த பத்து படங்களுக்கு வரிசையாக வேதான் இசை அமைப்பாளர். இதில் ஒரு படம் இலங்கையில் வெள்ளிவிழா கண்டது.

வேதாவிற்கு தமிழில் வந்த முதல் வாய்ப்பு, ஜூபிலி ஃபிலிம்ஸின் "மர்ம வீரன்". இதுவும் நடிகர் ஸ்ரீராமின் உதவியால் வந்த வாய்ப்பு ஆகும். இப்படத்தில் ஸ்ரீராமும் வைஜயந்திமாலாவும் இணைந்து நடித்திருந்தனர். இப்படத்தில் 10 பாடல்கள் இடம் பெற்றன. சந்திரபாபுவும் ஒரு பாடல் பாடியுள்ளார்.

அடுத்து எஸ் எஸ் ராஜேந்திரன், பண்டரிபாய், டி ஆர் ராமச்சந்திரன், பாலாஜி, எஸ் வி ரங்காராவ், தேவிகா ஆகியோர் நடித்த அன்பு எங்கே படத்திற்கு இசை அமைத்தார் வேதா. இதில் சிங்கள பைலா பாணியில் இவர் இசையமைத்த "டிங்கிரி டிங்காலே மீனாக்ஷி டிங்கிரி டிங்காலே என்ற பாடல் மிகவும் புகழ் பெற்றது. இதே படத்தில் கவ்வாலி பாணியில் "நயா தௌர்" என்ற படத்தில் இடம் பெற்ற பிரபல ஹிந்திப் பாடலான "ரேஷ்மி சல்வார் குர்தா ஜாலி கா" என்ற பாடலின் மெட்டில் "அமிர்த யோகம் வெள்ளிக்கிழமை கண்ணாளா" என்ற பாடலும் பெருத்த வரவேற்பை பெற்றது.

அடுத்து நடிகர் ஸ்ரீராம் ஜெமினி சாவித்திரி இவர்களை வைத்து தயாரித்த "மணமாலை" படத்திற்கு இசையமைத்தார் வேதா. இப்படத்தின் P B ஸ்ரீனிவாஸ் குரலில் "நெஞ்சம் அலைமோதவே, கண்ணும் குளமாகவே கொஞ்சும் கண்ணைப் பிரிந்தே போகிறாள், ராதை கண்ணனைப் பிரிந்தே போகிறாள்போகிறாள்" என்ற பாடல் மிகவும் பிரபலம்.

அடுத்து "மின்னல் வீரன்" என்ற படம். ஏ எல் நாராயணன் கதை வசனம் எழுதி நான்கு பாடல்களையும் எழுதியிருந்தார். சில தோல்விப் படங்களின் பாடல்களும் காணாது போய்விடுவதுபோல் இப்படத்தின் பாடல்களும் காணாது போயின. "கனியே, கண்ணான செல்வமே, தாலேலோ" என்று P B ஸ்ரீனிவாஸ் பாடிய பாடலும் அது போல காணாது ,போய்விட்டது. "காலையிலே வலைஎடுத்து கால் வாயிற்று கஞ்சிக்காக நாள் நாள் முழுதும் பாடுபடும் தொழிலாளி" என்ற பாடலும் அவ்வாறேதான். கரைமேல் பிறக்க வைத்தான் என்பது போல் இதுவும் ஒரு மீனவப் பாடல்தான். இன்னொரு பாடல் "கண்ணோடு கண்ணினை நோக்கின்" என்ற ஜெயலக்ஷ்மி (ராதா) பாடும் பாடல். சுத்தமான கரகரப்பிரியா இராகத்தில் அமைந்தது. ஏ எல் நாராயணின் இலக்கிய மணம் மிக்க வரிகளுக்கு ஏற்றதொரு இசையை வழங்கியிருந்தார் வேதா 

(நான் இவ்வளவு விரிவாக எழுதுவதற்கு காரணம், வேதா என்றாலே ஹிந்திப் பட மெட்டுக்களை காப்பி அடிப்பவர் என்ற ஒரு கருத்து நிலவுவதுதான். அவர் தயாரிப்பாளர்களின் நிர்ப்பந்தால்தான் அவ்வாறு செய்ய நேர்ந்தது - குறிப்பாக மாடர்ன் தியேட்டார்ஸ் சுந்தரம். வேதா அனைத்து இசை வடிவங்களிலும் தேர்ச்சி பெற்றவர்.)

வேதாவின் CLASSICAL பரிமாணத்தை காட்ட வந்த படம் பார்த்திபன் கனவு. கல்கி அவர்களின் சரித்திர நவீனத்திற்கு உயிரோட்டம் அளிப்பதுபோல் அமைந்தது வேதாவின் இசை. "கண்ணாலே நான் கண்ட கணமே (மருதகாசி), பழகும் தமிழே பார்த்திபன் மகனே (கவியரசர்) இதயவானின் உதய நிலவே (விந்தன்), போன்ற மனதை மயக்கும் மெல்லிசைப் பாடல்கள் , பின்பு அந்தி மயங்குதடி என்று கல்யாணி ராகத்தில் பாரம்பரிய இசை (எம் எல் வசந்தகுமாரி) என்று ஒரு இசை விருந்தே படைத்திருப்பார் வேதா. அந்தி மயங்குதடியில் இராகத்தின் விலாசங்களைக் காட்ட சிதார் சதிராடும். இதய வானின் பாடலில் வயலின்களின் மேற்கத்திய தாக்கத்தை நாம் உணரலாம். இப்படத்தின் பாடல்கள் சாகாவரம் பெற்றவை.

1963ல் வேதாவிற்கு மாடர்ன் தியேட்டர்ஸின் அறிமுகம் கிடைத்தது. மனோரமா கதாநாயகியாக நடித்த கொஞ்சும் குமரி என்ற படத்திற்கு இசையமைத்தார். ஏசுதாஸ் முதல் முதலில் பாடிய படம் இதுதான், "ஆசை வந்த பின்னே, அருகில் வந்த கண்ணே" என்ற பாடலை பாடினர் (எஸ் பாலசந்தர் இசையில் பொம்மை படத்தில் இவர் பாடிய நீயும் பொம்மை 1964 ஆம் வெளி வந்தது)

அடுத்து இவர் இசை அமைத்த படம் "பாசமும் நேசமும்" என்ற ஜெமினிகணேசன், சரோஜா தேவி நடித்த படம், ஹிந்திப் படம் அனாரியின் தழுவல் இது.

அடுத்து வீராங்கனை, சித்ராங்கி படங்களுக்கு இசையமைத்தார். வீராங்கனையில் ஜேசுதாசிற்கு மூன்று பாடல்கள்.இதில் "நீலவண்ணக் கண்களிரண்டில்" என்ற பாடல் இன்றும் பிரபலம். சித்ராங்கி படத்தில் "நெஞ்சினிலே நினைவு முகம்" "இன்று வந்த சொந்தமா" போன்ற பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன.

பாடல்கள் பிரபலமானாலும் படங்கள் வெற்றியடைந்தால்தான் அடுத்தடுத்து வாய்ப்புகள் குவியும். சில படங்கள் வெற்றி பெறாததால் இவர் மாடர்ன் தியேட்டர்சுக்கு ஹிந்திப் படங்களின் ரீமேக்குக்கு போய்விட்டார். இவர் ஹிநதிப் பாடல்களைத் தழுவி மெட்டமைத்தாலும் பாடல்வரிகள் ஏனோ தானோ என்று இல்லாமல் பார்த்துக் கொண்டார். இவரது பாடல்கள் அனைத்தும் புகழ்பெற்ற பாடல் ஆசிரியர்கள் எழுதியதாகவே இருந்தது,உதாரணம் கண்ணதாசன். (நூறு முறை பிறந்தாலும்).

இந்த ஹிந்திப் பாடல் வரிசைப் படங்கள் வருமுன் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த ஒரு படம் அம்மா எங்கே (1964) அதில் "பாப்பா பாப்பா கதை கேளு" என்று காக்கா நரியின் கதையை அழகான ஆங்கில மெட்டில் நமக்கு அளித்திருந்தார் வேதா 

அடுத்து சரசா பி ஏ என்றொரு படம். P B ஸ்ரீனிவாசின் குரலில் "இரவின் மடியில் உலகம் உறங்கும்" என்று நிமதியின்மையை மௌனமாகப் பொழியும் பாடல். பானுமதி பாடும் "மனதில் மனதை வைத்த பின்னாலே" என்ற பாடல் எடுத்த எடுப்பிலேயே மனத்தைக் கவர்ந்து விடுகிறது.

வல்லவன் வரிசை: ஹிந்தியில் வந்த உஸ்தாத் படங்கள் மாடர்ன் தியேட்டர்ஸில் வல்லவன் வரிசை என்றானது.

"நூறு முறை பிறந்தாலும் நூறு முறை இறந்தாலும் 
உனைப் பிரிந்து ஒரு நாளும் போவதில்லை"

"சௌ பார் ஜனம் லேங்கே, சௌ பார் ஃபனா ஹோங்கே" என்ற வரிகளை தமிழில் கவியரசர் இவ்வாறு எழுதினார். இந்தப் பாடல் பெரிய வெற்றியைப் பெற்றது, இந்தப் பாடல் மட்டுமல்ல, இப்படத்தின் பாடல்கள் அனைத்துமே பெரு வெற்றியைப் பெற்றன. "மனம் என்னும் மேடை மேலே" "பாரடி கண்ணே கொஞ்சம்" என்ற கவ்வாலி வகைப் பாடல், "கண்டாலும் கண்டேனே உன் போலே" "நெஞ்சுக்கு நிம்மதி"ஆகிய பாடல்கள்.

அடுத்து வல்லவன் ஒருவன். "பளிங்கினால் ஒரு மாளிகை" "தொட்டு தொட்டுப் பாடவா" "காவிரிக் கரையின் தோட்டத்திலே" ஆகிய பாடல்கள் பெரும் வெற்றி. - வேதா கவியரசர் கூட்டணி நன்முத்துகளை அளித்தது. 

அடுத்து நானே வருவேன் - இதைப் பற்றி சொல்ல வேண்டிய அவசியமில்லை. ஹிந்தியில் "ரிம் ஜிம் ரிம் ஜிம்" என்று வந்ததை கவியரசர், சிறிதும் யோசிக்காமல், இங்கும் அங்கும் என்று அதைப் போன்றே ஒலிக்குமாறு எழுதினார். ஒரு திகில் பாடலான இது பெரும் வெற்றி ,பெற்றது. இப்படத்தின் மற்ற பாடல்களும் பிரபலம். "உன் வேதனையில் என் கண்ணிரண்டும் உன்னோடு மயங்குவதேன் கண்ணா" இசையும், பாடல் .வரிகளும் மிகவும் அற்புதம்.

அடுத்து எதிரிகள், ஜாக்கிரதை - நேருக்கு நேர் நின்று பாருங்கள் போதும்
காதலித்தால் போதுமா - கொஞ்சம் நில்லடி என் கண்ணே
சி ஐ டி சங்கர் - நாணத்தாலே கண்கள் மின்ன மின்ன
ஜஸ்டிஸ் விஸ்வநாதன் - இது நீரோடு செல்கின்ற ஓடம், சிலை, செய்ய கைகள் உண்டு, கண்வழியே கண்வழியே போனது கிளியே 
என்று வெற்றிப் பாடல்கள் தந்தார்.

நேரமும் தக்க சுதந்திரமும் இருந்தால் அட்டகாசமான துள்ளல் பாடல்களை தன்னாலும் அளிக்க முடியும் என்று இவர் நிரூபித்த படம் அதே கண்கள். இந்தப் படத்தில் "பூம் பூம் மாட்டுக்காரன் தெருவில் வராண்டி" "லவ், லவ் எத்தனை அழகு இருபது வயதினிலே" என்று கலக்கல் பாடல்கள் தந்தார். இது ஒரு மர்மங்கள் நிறைந்த திகில் படம். அதற்கேற்ப "வா அருகில் வா, தா உயிரைத் தா" என்றொரு பாடலும் வடித்தார்.

சின்னஞ்சிறு உலகம் என்றொரு படம்,நாகேஷ் கதாநாயகன். "இவ்வளவுதான் உலகம் இவ்வளவுதான்" "ஊத்திக் கொடுத்தாண்டி ஒரு ரவுண்டு" என்ற பாடல்களை அளித்தார். சினிமாவை கேலி செய்யும் விதமாக எடுக்கப்பட்ட "நான்கு கில்லாடிகள்" படத்தில், செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம்" என்றொரு மெலடி, நெஞ்சுக்கு நிம்மதி ஆண்டவன் சன்னதி என்றொரு அமைதிப் பாடல் ஆகியவற்றை வழங்கினார்.

காப்பி அடிப்பதற்கென்றே ஒரு இசையமைப்பாளர் என்ற பெயர் வேதாவிற்கு ஏற்ப்பட்டது துர்பாக்கியமே. ஆனால் அதையும் ஒரு கடமையாக செய்து வந்தார். இவரது திறமைக்கு பார்த்திபன் கனவு ஒன்றே போதும். ஹிந்திப் படங்களின் பாடல்களை தமிழில் வெற்றிகரமாக உலவ விடுவதில் தான் வல்லவனுக்கு வல்லவன் என்று காட்டினார். "ஓராயிரம் பார்வையிலே" "நாணத்தாலே கண்கள் மின்ன மின்ன" பாடல்கள் இரவல் மெட்டுக்கள் போன்றா தோன்றுகின்றன?

இவர் இசையமைத்த கடைசிப் படம் "ஜஸ்டிஸ் விஸ்வநாத்" 1971. 

மிக இளவயதிலேயே மரணமடைந்தார். ஆனாலும் அவர் விட்டுச்சென்ற பாடல்கள் இன்றளவும் நம் மனதை மகிழ்வித்துக் கொண்டிருக்கின்றன 

(நன்றி: திரு வாமனன் அவர்கள்)

Wednesday, July 19, 2017

ஆர் சுதர்சனம்

தமிழ்த் திரை இசையின் பிதா மகர்கள் - 10 ஆர் சுதர்சனம்.

ஏ.வி.எம் என்ற சாம்ராஜ்யத்தில் ஐக்கியமானவர் சுதர்சனம். அவரது பேரைச் சொல்லிக்கொண்டிருக்கும் பாடல்கள் ஏராளம். அவரது இசையில் உருவான பாடல்களையும் அவரது வாழ்க்கைக் குறிப்பும் இன்று காண்போம்.

சுதர்சனம் 1914ல் ராமகிருஷ்ண செட்டியாரின் ஐந்து பிள்ளைகளில் மூத்தவராக பிறந்தார். சுதர்சனத்திடம் இயல்பாக இசைத்திறமை இருந்தது. மெய்யப்ப செட்டியார் பங்கு வகித்த சரஸ்வதி ஸ்டோர்ஸ், நான்கு நாடகங்களை கிராமபோன் இசைத்தட்டுக்களாக தயாரிக்கும்போது அவற்றிற்கு ஹார்மோனியம் வாசிக்க சுதர்சனம் அமர்த்தப்பட்டார். பின்னர் அங்கேயே 60 ரூபாய் மாதச் சம்பளத்திற்கு கம்பெனியின் கலைஞராக நியமிக்கப்பட்டார்.

இவரது முதல்பட வாய்ப்பு பாகவதர் நடித்த திருநீலகண்டர் என்று தெரிகிறது. டி ஏ கல்யாணமும் சுதர்சனமும் சேர்ந்து இப்படத்திற்கு இசையமைத்தனர்.

கல்கத்தா, பூனா ஆகிய இடங்களுக்கு சென்று படப்பிடிப்பு நடத்தி நஷ்டம் அடைந்த மெய்யப்ப செட்டியார், சிலரது கூட்டணியுடன் சென்னையிலேயே பிரகதி என்ற ஸ்டூடியோ துவங்கினார். இதில் மாதச் சம்பளத்தில் இசை அமைப்பாளராக சேர சுதர்சனத்திற்கு அழைப்பு வந்தது. வாயாடி போலி (1940), பூகைலாஸ்(தெலுங்கு) கரிச்சந்திரா (கன்னடத்திலிருந்து தமிழாக்கம்) போன்ற படங்களுக்கு செட்டியாரின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப இசையமைத்து அவரை கவர்ந்தார் சுதர்சனம்.

சரஸ்வதி ஸ்டோர்ஸில் பணியாற்றி வந்த துறையூர் ராஜகோபால சர்மாவின் பங்களிப்பும் இப்படங்களில் சமமாக இருந்தது. ஆனால் இப்படங்களில் இசையமைப்பாளர்களின் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை. பின்னணி சங்கீதம் - சரஸ்வதி ஸ்டோர்ஸ் ஆர்கெஸ்டிரா என்று மட்டுமே பாட்டுப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது, சபாபதி படத்திலும், சங்கீதம் - சரஸ்வதி ஸ்டோர்ஸ் ஆர்கெஸ்டிரா என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. 

முதன் முதலாக இசையமைப்பாளர்களின் பெயர் குறிப்பிடப்பட்டு மாபெரும் வெற்றியடைந்த படம் ஏ வி எம்மின் ஸ்ரீ வள்ளி. இதில் முதலில் துறையூர் ராஜகோபால சர்மாவின் பெயரும் அடுத்து சுதர்சனத்தின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளன. இதன் பின் துறையூர் ராஜகோபால சர்மா ருக்மிணி அவர்கள் நடத்திய கலாக்ஷேத்திராவில் இணைந்தபடியால், சுதர்சனம் ஏ வி எம்மின் ஆஸ்தான இசையமைப்பாளரானார்.

நாம் இருவர், வேதாள உலகம், ஓர் இரவு ஆகிய படங்கள் சுதர்சனத்தின் பன்முக ஆற்றலை வெளிப்படுத்தின. ஆனால் ஏ வி எம்மிற்கு புது வாழ்வு தந்த படம் 1949ல் வெளியான வாழ்க்கை ஆகும். இப்படத்தில் செட்டியாரின் விருப்பத்திற்கேற்ப ஹிந்தியிலிருந்து இரவல் மெட்டுக்கள் இருந்தாலும் (ட ட டா ட ட டா, எண்ணி எண்ணி பார்க்க மனம்) வைஜயந்தி மாலாவின் மார்வாரி பாணியில் அமைந்த, "கோபாலனோடு நான் ஆடுவேனே" என்ற பாடல் மிகவும் பெயர் பெற்றது.

சுதர்சனத்தின் முழுத்திறமையைக் காட்டிய படம் "பராசக்தி" இதில் அவரது இசையில் பல வெற்றிப் பாடல்கள் அமைந்தன. "கா கா கா, ஒ ரசிக்கும் சீமானே, இல்வாழ்வினிலே ஒளியேற்றும் தீபம் என் இதயராணி ரூபம், பூமாலை நீயே, புது பெண்ணின் மனசைத் தொட்டு, தேசம் ஞானம் கல்வி, கொஞ்சும் மொழி சொல்லும் கிளியே" போன்ற பாடல்கள் அனைத்தும் ரசிகர்களால் பெரிதும் விரும்பப்பட்டு இன்றளவும் ரசிக்கும்படி அமைந்தன.

இசை மேதை ஜி ராமநாதன், கே வி மகாதேவன், விஸ்வநாதன்-ராமமூர்த்தி ஆகியோரைப் போல் இவரும் தனித்தன்மை வாய்ந்த இசையமைப்பாளராக விளங்கினார். பெண் படத்தில் "சொன்ன சொல்லை மறந்திடலாமோ வா வா வா", "உல்லாசமாகவே உலகத்தில் வாழவே" குலதெய்வம் படத்தில் "வெட்கமில்லை வெட்கமில்லை" மாமியார் மெச்சிய மருமகள் படத்தில் "மனமோகனா என்னைப் பாரடா" ஆகிய பாடல்கள் இவர் இரவல் மெட்டுக்களை மட்டுமே நம்பியிருக்கவில்லை என்று நிரூபிக்கின்றன.

60 களில் திரையுலகில் இசையமைப்பில் மாறுதல் வந்தபோது தன்னையும் அதற்கேற்றவாறு மாற்றிக் கொண்டார் சுதர்சனம். 1960 "அன்பாலே தேடிய அறிவுச் செல்வம் தங்கம்" தந்த அதே ஆண்டில் களத்தூர் கண்ணம்மாவில் "ஆடாத மனமும் ஆடுதே, கண்களின் வார்த்தைகள் புரியாதோ" போன்ற பாடல்களை அளித்துள்ளார். புதிய கருவிகள் இசையுலகில் அறிமுகப்படுத்தப்படும்போது அவற்றை பயன்படுத்த இவர் தயங்கியதில்லை, உதாரணம் செல்லப்பிள்ளையில் வரும் "மதனா, எழில் ராஜா என்ற பாடலில் மாண்டலின் இசைக்கருவியை பயன்படுத்தியிருப்பார்.

பாடலின் கவிதை நயத்தை சிதைக்காமல் இருக்கத்தான் இசை என்ற கருத்தில் உறுதியாக இருந்ததால்தான் இவரால் அன்னை,நானும் ஒரு பெண் ஆகிய படங்களில் இனிமையான இசை வழங்க முடிந்தது. இவர் என்றுமே சுத்தமான கர்நாடக இசையின் அடிப்படையில் இசையமைத்ததில்லை. மெல்லிசையுடன் இருந்தால்தான் சிறிது இசை நுணுக்கங்களும் இருந்தால்தான் மக்கள் ரசிப்பார்கள் என்பது இவரது கருத்து.

ஏ வி எம்மின் கூட்டுத் தயாரிப்பில் உருவான, பாவமன்னிப்பு, பார்த்தால் பசி தீரும் ஆகிய படங்களில் இசையமைத்த விஸ்வநாதன்-ராமமூர்த்தியின் அலையில் வசீகரிக்கப்பட்ட செட்டியாரின் வாரிசுகள் மெல்லிசை மன்னர்களை தங்களது அடுத்த தயாரிப்புகளுக்கு நாடியபோது செட்டியாரால் கூட சுதர்சனத்திற்கு அரணாக விளங்க முடியவில்லை. 1959ல் செட்டியார் தனது சொந்த செலவில் சுதர்சனத்திற்கு வீடு கட்டித் தந்திருந்தார். அவரை பாதி சம்பளத்தில் தொடர்ந்து ஏ வி எம் நிறுவனத்திலேயே பணிபுரியுமாறு கேட்டுக் கொண்டார். ஆனால் சுதர்சனம் "நான் இருந்த இடத்தில் இன்னொருவரைப் பார்க்க முடியாது" என்று கூறி, வீட்டையும், நிறுவனத்தையும் விட்டு வெளியேறினார்.

ஏ வி எம்மை விட்டு வெளியே வந்த பிறகும் பூம்புகார், பூமாலை, அன்புக்கரங்கள், கார்த்திகை தீபம், மணிமகுடம், வாலிப விருந்து போன்ற படங்களுக்கு இசையமைத்தார். ஸ்ரீவல்லியில் "காயாத கானகத்தே" என்று பாடலை வழங்கியவர், 20 ஆண்டுகள் ஆகியும், "உன்னை முதன் முதலாக பார்த்தபோது, எண்ணப் பறவை சிறகடித்து, இரவு முடிந்து விடும்" போன்ற பாடல்களை நமக்கு அளித்தார் என்றால் அவரது திறமையைக் குறைவாக எடை போட முடியாது. 1966ல் இவர் இசையமைத்த மணிமகுடம் படத்தின் பாடல்கள் சொல்லும்படி இல்லை, கடைசியாக இவர் வாலிப விருந்து என்ற படத்திற்கு 1967ல் இசையமைத்தார். 

மொத்தமாக இவர் இசையமைத்த படங்கள் "பூகைலாஸ்" என்ற தெலுங்குப் படத்தையும் சேர்த்து 27. படங்கள் இல்லாபோதும் இவருக்கு எவ்வித வருத்தமும் இல்லை. பொழுதுபோக்காக சிலருக்கு வீணை கற்றுக் கொடுத்தார்.

நெடுநாளைய வெற்றிலை-புகையிலைப் பழக்கம், 1990ல் இவரது கல்லீரலைப் பாதித்தது. அறுவை சிகிச்சைக்கு பிறகு ஆறு மாதம் கழித்து 1991 ல் இவர் காலமானார்.

தமிழ்த் திரையுலகில் "மாஸ்டர்" என்று அழைக்கப்பட்ட ஒரே இசையமைப்பாளர், இது யாரும் வழங்கிய விருது அல்ல, திரையுலகினரும் ரசிகர்களும் அன்போடு அவருக்கு அளித்த விருது.

நன்றி: திரு வாமனன் அவர்கள்.

Sunday, July 16, 2017

டி ஜி லிங்கப்பா

தமிழ்த் திரை இசையின் பிதா மகர்கள் – 9. டி ஜி லிங்கப்பா

டி ஜி லிங்கப்பா, 1927 ஆகஸ்ட் 22 அன்று பிறந்தவர். திருச்சியை சேர்ந்தவர்.இவரது தந்தை திரு கோவிந்தராஜுலு நாயுடு ஒரு சங்கீத வித்வான்.அவரது வீட்டிற்கு பாட வரும் எம் கே தியாகராஜ பாகவதரை தனது பிள்ளைகளுக்கு கோவிந்தராஜுலு நாயுடு அறிமுகம் செய்து வைத்தார். நாடகங்களில் ஹார்மோனியம் வாசித்து வந்த அவர், திருமதி கே பி சுந்தராம்பாள் அவர்களின் குருவும் ஆவார்.

1940ல் அவர்களது குடும்பம் சென்னைக்கு குடி பெயர்ந்தது. 14 வயதில் லிங்கப்பா, காமதேனு என்ற திரைப்படத்தில் நடிக்க அதன் தயாரிப்பாளரான விஸ்வநாதன் என்பவரை அணுகினார்.அதற்கு அவர் அந்தப் படத்தில் பாடும்படும்படியும்,தன் கூடவே இருக்கும்படியும் கூறி விட்டார்.இதில் ஏதும் பலனில்லாமல் போகவே சிறிது காலம் கழித்து அவரிடமிருந்து வெளியேறி மயூரா ஆர்கெஸ்ட்ரா என்ற திரைப்படங்களுக்கு வாசிக்கும் இசைக்குழுவில், ஹார்மோனியம்,மாண்டலின் கிடார் ஆகியவை வாசித்து வந்தார். இவர் அசோக் குமார் என்ற படத்தில் வாத்தியக் கலைஞராக பணிபுரிந்துள்ளார்.

அதே வருடம், லிங்கப்பா ஜெமினி ஸ்டுடியோவை வாய்ப்புக்காக அணுகினார். அப்போது சி ராமச்சந்திரா அங்கு இருந்தார். ஆனால் லிங்கப்பா வயதில் மிகவும் இளையவராக இருந்ததால் நிராகரிக்கப்பட்டார். பிறகு சேலம் சென்று மாடர்ன் தியேட்டர்ஸில் வாய்ப்பு தேடினார். அங்குதான் அவர் கே வி மகாதேவன், டி ஆர் பாப்பா போன்றோரை சந்தித்தார்.

1947ல் காரைக்குடி சென்று நாம் இருவர் படத்திற்கு வாசித்தார். பின்னர் 1948 ல் சென்னை திரும்பி சி ஆர் சுப்பராமன் அவர்களிடம் உதவியாளராக பணி புரிந்தார். இவ்வாறு பலதரப்பட்ட இசையமைப்பாளர்களுடன் பணி புரிந்த அனுபவும் இவருக்கு ஃப்ரீலேன்ஸ் இசையமைப்பாளராக பணிபுரியும் எண்ணத்தை அளித்தது. இவர் லண்டன் சென்று நவீன இசைக்கருவிகளை வாங்கி வருவார். அவ்வாறு வாங்கி வந்த எலெக்ட்ரிக் கிடாரை இவர் ஜி ராமநாதன், எஸ் வி வெங்கட்ராமன், கே வி மகாதேவன் போன்றோரின் இசையில் வாசித்துள்ளார்.

டி ஆர் மகாலிங்கம் தனது சொந்தத் தயாரிப்பில் மச்சரேகை என்ற படம் தயாரித்தார். இதன் இசையமைப்பாளர் திரு சி ஆர் சுப்பராமன். இவர் திடீரென்று இறந்து விடவே, தனது இரண்டாம் படமான மோகனசுந்தரம் என்ற படத்தில் டி ஜி லிங்கப்பாவை அறிமுகப் படுத்தினார். இருவருக்கும் நாம் இருவர் படத்திலிருந்தே நெருக்கமானநட்பு இருந்து வந்தது. இப்படத்தில் 10 பாடல்கள் இடம்பெற்றன. இப்படத்தில்தான் சந்திரபாபு முதலில் "ஹலோ மை டியர் டார்லிங், ஹலோ மை ரோஸ் சார்மிங்" என்ற பாடலைப் பாடினார். இப்படம் வெளி வரவில்லை. டி ஆர் மகாலிங்கமும், லிங்கப்பாவும் ஆழ்ந்த கர்நாடக இசையறிவு கொண்டிருந்ததால் ஒருவரை ஒருவர் அனுசரித்து, இசையைப் பற்றி கலந்துரையாடி பாடல்களை அமைத்தனர். தனது அடுத்த இரண்டு படங்களான, சின்னதுரை, விளையாட்டு பொம்மை ஆகிய படங்களுக்கும் மகாலிங்கம் இவருக்கே வாய்ப்பளித்தார்.

பி ஆர் பந்துலு டி ஆர் மகாலிங்கத்திடம் உதவியாளராக இருந்தார். அவரிடமிருந்து பிரிந்து சென்று அவர் தனது முதல் படமான கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி தயாரித்தபோது திரு டி ஜி லிங்கப்பாவையே இசையமைப்பாளராக நியமித்தார். ப நீலகண்டன் இயக்கத்தில் உருவான இப்படத்தில், "வெண்ணிலாவும் வானும் போலே" என்ற பாராதிதாசன் பாடல் இடம் பெற்றது. இந்தப் பாடலுக்கு முதலில் இசை வடிவம் அளித்தவர் திரு எம் எம் தண்டபாணி தேசிகர். அவரிடம் லிங்கப்பா அவர்கள் அனுமதி பெற்று, பிறகு திரு பாரதிதாசனிடமும் இப்பாடலை போட்டுக் காட்டி அவர் ஒப்புதல் அளித்த பின்னரே, சிறு மாற்றங்களுடன் இப்படத்தில் சேர்த்தார். இப்படத்தில் சிவாஜி கணேசனுக்காக "ஜாலி லைஃப், ஜாலி லைஃப்" என்ற பாடலை சந்திரபாபு பாடியுள்ளார். இப்படத்தின் பாடல்கள் வெற்றியடையவே, பந்துலு லிங்கப்பாவை தனது அடுத்த படமான முதல் தேதிக்கும் இசையமைப்பாளராக நியமித்தார் 
Image may contain: 1 person

அடுத்து இவருக்கு பெர்யர் வாங்கித் தந்த படம் "தங்கமலை ரகசியம்". இப்படத்தில் வரும் "அமுதைப் பொழியும் நிலவே" பாடல் பி சுசீலா அவர்களை புகழின் உச்சிக்கே கொண்டு ,சென்றது. இதன் ஹிந்தி மொழியாக்கத்திலும் இப்பாடலுக்கு இதே மெட்டு பயன்படுத்தப்பட்டு, ஹிந்தி திரையுலகில் பெரும்பெயர் பெற்றது.

லிங்கப்பா தொடர்ந்து, சபாஷ் மீனா, எங்கள் குடும்பம் பெருசு, குழந்தைகள் கண்ட குடியரசு ஆகிய படங்களுக்கு இசையமைத்தார். பின்னர் கன்னடப் படங்களுக்கு இசையமைக்க சென்று விட்டார். மறுபடியும் 1964ல் பி ஆர் பந்துலு இவரை முரடன் முத்து படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பளித்தார். (இதுதான் சிவாஜி-பந்துலு இணைந்து பணிபுரிந்த கடைசி படம். எதற்காகப் பிரிந்தார்கள் என்று தெரியவில்லை. முரடன் முத்து நவராத்திரி - எது 100 ஆவது படம் என்ற பிரச்சினையினாலா?) அடுத்து இவர் தாயின் மேல் ஆணை (1966), தங்கமலர் (1969), கடவுள் மாமா (1974) ஆகிய தமிழ்ப் படங்களுக்கு இசையமைத்தார். கடவுள் மாமா படம்தான் இவர் கடைசியாக பணியாற்றிய தமிழ்ப் படம்.

இவரது இசையில் பாடிய பாடகர்-நடிகர்கள்:
எம் எம் தண்டபாணி தேசிகர், டி ஆர் மகாலிங்கம், கே ஆர் ராமசாமி, யூ ஆர் ஜீவரத்தினம், என் எஸ் கிருஷ்ணன், டி ஏ மதுரம், ஜே பி சந்திரபாபு போன்றோர்.

இவரது இசையில் பாடிய பின்னணிப் பாடகர்கள்:
டி எம் சௌந்தரராஜன், ஏ எம் ராஜா, சீர்காழி கோவிந்தராஜன், வி என் சுந்தரம், எஸ் சி கிருஷ்ணன், எம் எல் வசந்தகுமாரி, பி லீலா, ஜிக்கி, டி வி ரத்தினம், ஏ பி கோமளா, ராதா ஜெயலக்ஷ்மி, சூலமங்கலம் ராஜலக்ஷ்மி, கே ஜமுனாராணி, பி சுசீலா, கே ராணி, எஸ் ஜானகி போன்றோர்.

இவரது இசையமைப்பில் சில பிரபல பாடல்கள்:
ஓ, ஜெகமத்தில் இன்பம் - மோகனசுந்தரம் (டி ஆர் மகாலிங்கம் , எஸ் வரலக்ஷ்மி)
பாட்டு வேணுமா - மோகனசுந்தரம் (டி ஆர் மகாலிங்கம்)
அமுதைப் பொழியும் நிலவே - தங்கமலை ரகசியம் (பி சுசீலா)
தென்றலே வாராயோ, இன்ப சுகம் தாராயோ- வாழ்விலே ஒரு நாள் (டி எம் சௌந்தரராஜன், யூ ஆர் ஜீவரத்தினம்)
ஒண்ணிலே இருந்து இருபது வரைக்கும் - முதல் தேதி (என் எஸ் கிருஷ்ணன்)
வெண்ணிலாவும் வானும் போலே - கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி (ராதா ஜெயலக்ஷ்மி)
அதிமதுரா அனுராகா - எங்கள் குடும்பம் பெருசு (ஏ எம் ராஜா, கே ஜமுனாராணி)
ராதா மாதவ வினோத ராதா - எங்கள் குடும்பம் பெருசு (டி எம் சௌந்தரராஜன், பி சுசீலா)
சித்திரம் பேசுதடி - சபாஷ் மீனா (TMS, சூலமங்கலம் ராஜலக்ஷ்மி இருவர் குரலிலும்)
கானா இன்பம் கனிந்ததேனோ - சபாஷ் மீனா (டி ஏ மோதி - பி சுசீலா)
என் அருமை காதலிக்கு வெண்ணிலாவே - எல்லோரும் இந்நாட்டு மன்னர் (TMS)

குங்குமப் பூவே கொஞ்சும் புறாவே என்ற பாடலை இவர் இசையமைக்க சந்திரபாபு இவரிடம் அதைக் கற்றுக் கொண்டு பிறகு மரகதம் படத்தில் பாடியதாகவும், புத்தம்புது மேனி என்ற பால முரளி கிருஷ்ணா - பி சுசீலா பாடலும் இவர் இசையமைப்பில் உருவாகி பின்னர் சுபதினம் படத்தில் இடம் பெற்றதாகவும் கூறுவார்கள்.

இவர் 5 ஃபிப்ரவரி 2000, அன்று இயற்கை எய்தினார்.

குறைந்த அளவே தமிழ்ப் படங்களுக்கு இவர் இசையமைத்திருந்தாலும் அத்தனையும் நன்முத்துக்கள்.

Thursday, July 13, 2017

வி தக்ஷிணாமூர்த்தி - எஸ் தக்ஷிணாமூர்த்தி

தமிழ்த் திரை இசையின் பிதாமகர்கள் - 8.
வி தக்ஷிணாமூர்த்தி - எஸ் தக்ஷிணாமூர்த்தி 

தென்னியத் திரையுலகில் இரு மூர்த்திகளின் கீர்த்தியும் சிறந்து விளங்கிய காலம் அது. ஆனால் ஒருவர் இசையை மற்றவரது என்று குழப்பியும் கொள்வார்கள் பலர். இன்றும் ரசிகர்கள் சிலர் இவர்களது பாடலை மற்றவர் பெயரில் பதிவிடுகிறார்கள். இந்தக் குழப்பம் தீரவே நான் இருவரைப் பற்றியும் ஒரே கட்டுரையில் எழுதுகிறேன்.

வி தக்ஷிணாமூர்த்தி. உண்மையிலேயே பிதாமகர். "ஸ்வாமிகள்" என்றே மலையாள இசையுலகில் இவரை அழைப்பர்.

பத்து வயதாயிருந்தபோது, திருவனந்தபுரத்திலிருக்கும் வெங்கடாசலம் பொட்டி என்பவர் அவருக்கு கர்நாடக இசையில் பயிற்சி அளித்தார். இவருடைய முதல் பொது நிகழ்ச்சி 13 வயதில் அம்பலப்புழா ஸ்ரீ கிருஷ்ணன் கோவிலில் நடைபெற்றது. ஒரு நாள் நள்ளிரவில் பெருமழையில், கஞ்சிரா வித்வான் கடுவ கிருஷ்ணன் இவரது வீட்டிற்கு வந்து மறுநாள் காலையில் வைக்கத்தில் நடைபெறும் ஒரு திருமணத்தில் கச்சேரி செய்ய வேண்டும் என்று இவரை அழைத்தார். இவரது தாயார் அனுமதி தரவே இருவரும் உடனே புறப்பட்டு கால்நடையாக கருமாடி படகுத்துறை அடைந்து அங்கிருந்து மறுநாள் காலை 8 மணிக்கு வைக்கம் சென்றடைந்தனர். பின்னர் குளித்து முடித்து வைக்கத்தப்பனை தரிசித்து விட்டு கச்சேரி செய்யும் இடத்தை அடைந்து கச்சேரி செய்தனர்.

கொச்சியை சேர்ந்த தவில் வித்வான் ஒருவர் தக்ஷிணாமூர்த்தி வைக்கத்தில் தங்கி தனது உறவினர்களுக்கு கர்நாடக இசை பயிற்றுவிக்க வேண்டும் என்று விரும்பினார். ஆகையால் அவர் வைக்கத்தில் தங்கினார். தினமும் காலையிலும் மாலையிலும் அன்னதானப் பிரபு வைக்கத்தப்பாவை துதி செய்யாமல் இருந்ததில்லை.இவருடைய 42 மாத வைக்கம் வாழ்வில் தினமும் வைக்கத்தப்பன் கோவிலில் பாடியும், நிர்மால்ய தரிசனம் செய்தும் வந்தார். 

1942ல் இவர் மதராசிற்கு ஆல் இந்தியா ரேடியோவில் பாடுவதற்கு வந்தார். பிறகு அடிக்கடி மதராசிற்கு பாட வர நேர்ந்தது. 1948ல் மைலாப்பூரில் தங்கி விட்டார். பாலக்காட்டில் வசித்த 4 வருடங்களைத் தவிர, மதராஸ்தான் இவரது உறைவிடமாக இருந்தது.பிரபல கர்நாடக பாடகி திருமதி என் சி வசந்தகோகிலம் இவரது சிஷ்யையாவார்.

மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நூற்றுக்கணக்கான திரைப்படங்களுக்கு தட்சிணாமூர்த்தி இசையமைத்துள்ளார்.மொத்தத்தில் இவர் தமிழில் 9 படங்களுக்கு மட்டுமே இசையமைத்துள்ளார். அவற்றுள் சில:

நல்லதங்காள் திரைப்படம், நந்தா என் நிலா, ஆசை மகன், தேவி (மலையாளத்தில் "காவ்யமேளா"), ஒரு கோவில் இரு தீபங்கள், ஜீவநாடி, ஜெகத்குரு ஆதி சங்கரர் போன்றவை.

இவரது புகழ்பெற்ற சில பாடல்கள்.
நந்தா நீ என் நிலா - நந்தா என் நிலா 
நல்ல மனம் வாழ்க - ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது.
ஆண்டவன் இல்லா உலகமிது - ஒரு ஊதாப்பூ " "
அருவிமகள் அலையோசை - ஆசைமகன் 
தேவி ஸ்ரீதேவி, தேடியலைகின்றேன் - தேவி (மலையாளத்தில் "காவ்யமேளா")
முத்து முத்துப் புன்னகையே - ஒரு கோவில் இரு தீபங்கள்.

இதில் நந்தா என் நிலா என்ற பாடலுக்கு ஒரு தனிச்சிறப்பு உள்ளது. தமிழ்த் திரைப்பாடல்களியே மிக நீண்ட பல்லவியுடைய பாடல் இது ஒன்றுதான்.

இவர் பல விருதுகள் பெற்றிருந்தபோதிலும் தமிழக அரசு இவரை உரிய விதத்தில் கௌரவிக்கவில்லை என்பது ஒரு வருத்தமே.

ஆகஸ்ட் 2, 2013 அன்று தனது 94ஆவது வயதில் காலமானார். இவரது இழப்பு மலையாள திரையுலகிற்கு ஒரு பேரிழப்பாகும்.


எஸ். தக்ஷிணாமூர்த்தி.

நவம்பர் 11, 1921ஆம் ஆண்டு, ஆந்திராவிலுள்ள கிருஷ்ணா மாவட்டத்தில் ப்டீகப்பள்ளி என்ற ஊரில் பிறந்தார். இவரது பட்டனர் திரு தட்சிணாமூர்த்தி சாஸ்திரிகள், ஒரு தலைசிறந்த கர்நாடக இசை வல்லுநர். அவரிடம் இசை பயில மாணவர்கள் பல இடங்களிலிருந்தும் வருவர். அவர்களுக்கு சொல்லிக் கொடுப்பதைக் கேட்டு சிறுவன் தக்ஷிணாமூர்த்தி தனது சிறு வயதிலேயே ஒரு இசை மேதையாக விளங்கினார். 9 வயதிலேயே மசிலிபட்ணத்தில் நடைபெறும் 9 நாள் நவராத்திரி உற்சவத்திற்கு பல இசைக் கலைஞர்களுக்கு வயலின் வாசித்துள்ளார்.

1983ல் HMV நிறுவனத்தில் ஹார்மொனியக் கலைஞராக பணிபுரிந்துள்ளார். வி தட்சிணாமூர்த்தி சுவாமிகளைப் போலவே இவரும் ஆ்ல் இந்தியா ரேடியோவில் பணியாற்றியுள்ளார். டெல்லி நிலையத்தில் இவரை, தென்னிந்திய இசையின் இயக்குனராக பணியாற்றுமாறு அழைப்பு விடுத்தனர் என்றால் இவரது திறமையை நீங்கள் புரிந்து கொள்ளலாம். இவரும் மதராசில் மயிலாப்பூரில் தங்கி இருந்தார்.
Image may contain: 1 person, sitting

முதல் முதலாக திரைப்படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு இவருக்கு சம்சாரம் என்ற படத்திற்கு கிடைத்தது. தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் தயாரிக்கப்பட்ட படம். 

இவரும் மிகக் குறைந்த அளவே தமிழ்ப் படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவர் தமிழில் இசையமைத்த படங்கள்.:
சம்சாரம் - 1950
சர்வாதிகாரி - 1951
வளையாபதி - 1952
கல்யாணி - 1952
வேலைக்காரி மகள் - 1953
மங்கையர் திலகம் - 1955
அலிபாபாவும் 40 திருடர்களும் - 1956
யார் பையன் - 1957
பாக்யவதி - 1957
பங்காளிகள் - 1961 போன்றவை. இது தவிர, லைலா மஜ்னு தெலுங்குப் படத்தில் ஒரு பாடலும் சர்வாதிகாரி படத்தில் ஒரு பாடலும் பாடியுள்ளார்.

இவர் இசையில் சில புகழ் பெற்ற பாடல்கள்:
சம்சாரம் சம்சாரம் - சம்சாரம் 
சர்வாதிகாரி - கண்ணாளன் வருவான் 
வளையாபதி - குலுங்கிடும் பூவிலெல்லாம் (பாரதிதாசன்)
கல்யாணி - இனி பிரிவில்லாமலே வாழ்வோம் நம் உலகிலே 
மங்கையர் திலகம் - நீலவண்ணக் கண்ணா வாடா, நீ வரவில்லையெனில் ஆதரவேது 
அலிபாபாவும் 40 திருடர்களும் - அனைத்துப் பாடல்களும் 
யார் பையன் - சுயநலம் பெரிதா, பொது நலம் பெரிதா 
பாக்யவதி - பொம்பளைங்க தெரிஞ்சு கொள்ளணும்...இந்தக்கால 
பொம்பளைங்க தெரிஞ்சு கொள்ளணும்... 

என் டி ராமராவிற்கு இவர் மிகவும் பிடித்தமான இசையமைப்பாளர். தனது தயாரிப்பில் "ஸ்ரீமத் விராட பருவம்" (1983), ஸ்ரீமத் பொட்டுலூரி வீரப்ரம்மேந்திர சரிதா" (1984) ஆகிய இரு படங்களுக்கும் இவரை பணியாற்ற அழைத்தார். அந்நாளில் இவ்விரு படங்களும் சிறந்த "MUSICAL HIT" ஆக விளங்கின. 

இவரது திரை வாழ்க்கை இவரது உடல்நலக் குறைவினால் விரைவிலேயே பாதிக்கப்பட்டது. நீரிழிவினால், தனது கண்களின் பார்வை ஒன்றினை 1972ல் இழந்தார். அடுத்த கண் பார்வையையும் 1987ல் இழந்தார்.

இவர் தனது சென்னை இல்லத்தில் ,ஃபிப்ரவரி 9, 2012 ல், தக்ஷிணாமூர்த்தி ஸ்வாமிகள் இறப்பதற்கு ஒரு வருடத்திற்கு முன் இறந்தார். மருத்தவமனை எடுத்து செல்ல வேண்டாம், வீட்டிலியே இறக்க விரும்புகிறேன் என்ற இவரது கடைசி ஆசையின்படி ஆம்புலன்ஸ் வருவதற்கு 5 நிமிடம் முன்பே உயிர் துறந்தார்.

சமகாலத்தவரான இருவரும் தங்களது பாரம்பரிய இசையினை தக்க வைத்துக் கொண்டு, திரை இசைக்கு தொண்டாற்றினார். இவர்களது பங்களிப்பு மற்றவர்களை விட குறைவாக இருந்தாலும், தரத்திலும், அழியாப் புகழிலும் முன்னிலை வகிக்கின்றன. இவ்விருவரது இசைத் திறமைக்கும் எனது இக்கட்டுரை சமர்ப்பணம்.

புகைப்படங்கள்: 1. வி தக்ஷிணாமூர்த்தி ஸ்வாமிகள். 
2. எஸ் தக்ஷிணாமூர்த்தி அவர்கள்

Monday, July 10, 2017

டி ஆர் பாப்பா

#தமிழ்த்_திரை_இசையின்_பிதா_மகர்கள்#: 7

டி ஆர் பாப்பா. இவரது இயற்பெயர் சிவசங்கரன். சிறுவயதிலிருந்தே வயலினில் சிறந்த பயிற்சி பெற்றவர். தனது ஆரம்ப நாட்களில் மாடர்ன் தியெடர்ஸிலும், ஜூபிடர் பிக்சர்ஸிலும் வயலின் வாசித்து வந்தார். இவரும் திரு டி கே ராமமூர்த்தியும்தான் அந்தக் காலத்தில் அதிக ஊதியம் பெற்ற வயலின் கலைஞர்களாக இருந்தார்கள்.

1946 லிருந்து ஆல் இந்தியா ரேடியோவின் நிலைய வித்வானாக பணியாற்றினார். அக்காலத்தில் திரு சீர்காழி கோவிந்தராஜன் அவர்களுடன் நிறைய பக்திப் பாடல்களுக்கு இசையமைத்தார். அவற்றில் ஒன்று "சின்னஞ்சிறு பெண்போலே, சித்தாடை உடை உடுத்தி" என்ற பிரபலமான பாடல்.

1952 ல் முதல் முதலில் "ஆத்மசாந்தி" என்ற மலையாளப் படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பை சிட்டாடல் நிறுவனத்தைச் சேர்ந்த இயக்குனர் ஜோசப் தளியத் இவருக்கு வழங்கினார். பிறகு, அந்நிறுவனத்தின் தயாரிப்புகளான மல்லிகா, விஜயபுரி வீரன், விளக்கேற்றியவள், இரவும் பகலும், காதல் படுத்தும் பாடு ஆகிய படங்களுக்கு இசையமைத்தார்.

டி ஆர் பாப்பாவும் டி ஆர் ராமண்ணாவும் வகுப்புத் தோழர்கள். ராமண்ணா அவர்கள் அருணகிரிநாதரை இயக்கிக் கொண்டிருந்தபோது, திடீரென்று திரு ஜி ராமநாதனுக்கு உடல்நலக்குறைவு ஏற்படவே, அவர் திரு டி ஆர் பாப்பாவை மீதியுள்ள பாடல்களுக்கு இசையமைக்கக் கேட்டுக் கொண்டார். தொடர்ந்து 70 வரையில் இவர்களது கூட்டணியில் பல படங்கள் வந்தன.

தமிழ் இசை சங்கம் இவருக்கு இசைப் பேரறிஞர் என்ற பட்டத்தை வழங்கி கௌரவித்தது.
Image may contain: 1 person, eyeglasses and closeup

இவரது இசையில் வெளி வந்த சில பிரபல பாடல்களும் அவற்றின் படங்களும்.
எண்ண எண்ண இன்பமே வாழ்வினில் எந்நாளும் - அன்பு;
சமரசம் உலாவும் இடமே - ரம்பையின் காதல்
பகவானே மௌனம் ஏனோ - ரம்பையின் காதல்
வருவேன் நானுனது மாளிகையின் வாசலுக்கே - மல்லிகா
நீலவண்ணக் கண்ணனே உனது எண்ணமெல்லாம் - மல்லிகா
சின்னஞ்சிறு வயது முதல் சேர்ந்து நாம் பழகி வந்தோம் - தாய் மகளுக்கு கட்டிய தாலி
நீ சொல்லாவிடில் யார் சொல்லுவார் நிலவே - குறவஞ்சி
சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள் - நல்லவன் வாழ்வான்
உள்ளம் தேடாதே என்று சொல்லுதே - எதையும் தாங்கும் இதயம்
முத்தைத்தரு பத்தித்திரு - அருணகிரிநாதர்
ஒண்ணுமே புரியலே உலகத்திலே - குமாரராஜா
உள்ளத்தின் கதவுகள் கண்களடா - இரவும் பகலும்
ஆசை பொங்கும் அழகு ரூபம் - ஆசை
சூடிக் கொடுத்தவள் நான் தோழி - டீச்சரம்மா
தலைவாரிப் பூச்சூடி உன்னை - ரங்கோன் ராதா
இறைவன் என்றொரு கவிஞன் - ஏன்
உள்ளத்திலே உரம் வேண்டுமடா - விஜயபுரி வீரன்
வெண்ணிலா நேரத்திலே வேணுகானம் - அவசரக் கல்யாணம்.

இவர்கள் தமிழ் திரையுலகிற்கு ஆற்றிய பணி மிகவும் மகத்தானது. இவர்களது இசையில் வந்த பாடல்களை கேட்கும்போது, இவர்களையும் நன்றியுடன் நினைவு கூர்வோம்.

Wednesday, July 5, 2017

K V மகாதேவன்-

#தமிழ்த்_திரை_இசையின்_பிதா_மகர்கள்# 6: 
திரு K V மகாதேவன்-

தமிழ்நாட்டின் தென்பகுதியில் நாகர்கோவில் என்ற ஊரில் கிருஷ்ணன்கோவில் என்ற சிற்றூரில் வெங்கடாசல பாகவதர், பிச்சையம்மாள் ஆகியோருக்கு மகாதேவன் பிறந்தார். இவரது பாட்டனார் ராம பாகவதர் திருவனந்தபுரம் அரசரின் ஆஸ்தான வித்துவானாக இருந்தவர். தந்தையார் வெங்கடாசல பாகவதர் கோட்டு வாத்தியம் இசைப்பதிலும் வல்லவர். சிறு வயதிலேயே இசையில் நாட்டம் கொண்டிருந்தமையினால் மகாதேவன் பள்ளிப் படிப்பைத் தொடரவில்லை. பாலகாந்தர்வ நாடக சபையில் இணைந்து பெண் வேடம் ஏற்றுப் பாடியவாறு நடித்தார்.

பூதப்பாண்டி அருணாசலக் கவிராயரிடம் முறையாக இசை பயின்றார். முறையாக இசை பயின்ற பின்னர் அங்கரை விசுவநாத பாகவதரின் இசைக் குழுவில் இணைந்து பம்பாய் ஐதராபாத், தில்லி, நாக்பூர் ஆகிய வெளியூர்களுக்குச் சென்று கச்சேரி செய்து வந்தார்.

1942 இல் மனோன்மணி என்ற திரைப்படத்துக்கு முதன்முதலில் இசையமைத்த மகாதேவன் பின்னர் பக்த கௌரி, அக்கினி புராண மகிமை, பக்த ஹனுமான், நல்ல காலம், மதன மோகினி ஆகிய படங்களுக்கு இசை அமைத்து தமிழ்த் திரையுலகில் தனக்கென்று ஒரு நிலையான இடத்தைத் தக்க வைத்துக் கொண்டார். மதன மோகினி திரைப்படத்தில் பி. லீலாவுடன் இணைந்து பாடல் ஒன்றையும் பாடினார்.

இவருடைய படைப்புகளின் பிரதான அம்சங்கள்; பாடல் வரிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து இசையமைப்பது; எப்போதும் கர்நாடக அடிப்படையில் இசையமைப்பது; பாடகர்களுக்கும் அவரது இசைக்கலைஞர்களுக்கும் மதிப்பளித்து அவர்களை சுதந்திரமாய் செயல் பட விடுவதன் மூலம் தனது படைப்புகளுக்கு மேலும் மெருகூட்டுவது போன்றவை.

இவரது சிறந்த தமிழ்ப் படங்களுள் சில: கந்தன் கருணை, திருவருட்செல்வர், திருவிளையாடல், தில்லானா மோகனாம்பாள், படிக்காத மேதை, வசந்த மாளிகை, வானம்பாடி, முதலாளி, அடிமைப் பெண், தாய் சொல்லைத் தட்டாதே போன்றவை.

இவரது சிறந்த பாடல்களுள் ஒன்றாக திருவருட்செல்வருள் வரும் மன்னவன் வந்தானடி என்ற பாடலை கூறலாம். இந்த பாடல் ஒன்றே திரு K V மகாதேவன் அவர்களின் திறமைக்கு சான்று. இவருடைய பாடல்களை பட்டியலிட்டு மாளாது. ரசிகர்கள் அவரவர் விருப்பம் போல் அவர்களுக்குப் பிடித்த பாடலை பற்றி கருத்து தெரிவிக்கலாம்.

தெலுங்கு மொழி துளியும் அறியாத இவர் சங்கராபரணம் படத்திற்கு இசையமைத்தது மிகப் பெரிய வியப்பு. அவற்றில் வரும் அனைத்துப் பாடல்களுமே கர்னாடக இசையின் அடிப்படையிலேயே அமைந்தன. இப்படத்திற்காக இவர் ஜனாதிபதி விருதும் பெற்றார் என்பது ஒரு கூடுதல் சிறப்பு. இயக்குனர் திரு கே விஸ்வநாத் தனது பெரும்பாலான படங்களுக்கு இவரையே இசையமைக்க செய்தார்.

எம் எஸ் விஸ்வநாதன் இவரை தனது மானசீக குருவாகக் கொண்டிருந்தார். பல இசையமைப்பாளர்களுக்கும் இவர் முன்னோடியாகத் திகழ்ந்தார். இவரது பாடல்கள் அனைத்துமே இறவாப் புகழ் பெற்றவை. இவர் மறைந்தாலும் இவரது பாடல்கள் என்றும் நம் நெஞ்சை விட்டு மறையா!

குன்னக்குடி வைத்தியநாதன்.

தமிழ்த் திரை இசையின் பிதா மகர்கள் - 16 : குன்னக்குடி வைத்தியநாதன். குன்னக்குடி வைத்யநாதனைப் பற்றி கூற வேண்டுமெனில்; "யாரையும் எ...