Tuesday, June 20, 2017

சி.ஆர். சுப்பராமன்

#தமிழ்த்_திரை_இசையின்_பிதா_மகர்கள்# – 5 சி.ஆர். சுப்பராமன்.

மெல்லிசை மன்னர் எம் எஸ் விஸ்வநாதன் 
மெல்லிசை மன்னர் டி கே ராமமூர்த்தி 
இசையமைப்பாளர் டி ஜி லிங்கப்பா 
இசையமைப்பாளர் எம் எஸ் தக்ஷிணாமூர்த்தி 
இசையமைப்பாளர் ஆர் கோவர்தனம்
இசையமைப்பாளர் ஜி கே வெங்கடேஷ் 
தெலுங்கில் இசையமைப்பாளராக திரு மாண்டலின் ராஜு
தெலுங்கில் முடிசூடா மன்னராக விளங்கிய திரு கண்டாசாலா 
இவர்கள் அனைவரையும் அறிமுகப்படுத்திய பெருமை மறைந்த இசை மேதை திரு சி ஆர் சுப்பாராமன் அவர்களையே சாரும்.

1940களில் தமிழ் திரையிசையில் மேற்கத்திய இசையின் தாக்கத்திற்கு பதியம் போட்டவர் சி.ஆர். சுப்பராமன்.
எம்.எஸ்.விஸ்வநாதன், ராமமூர்ததி, டி.ஜி.லிங்கப்பா, கண்டசாலா, கோவர்த்தனம் போன்றவர்களின் குரு இவர்.
கர்நாடக இசை, இந்துஸ்தானி, மேலை நாட்டிசை, நாட்டுப்புற இசை என்று அனைத்திலும் தேர்ச்சி பெற்றிருந்த இவர், அந்தக் காலத்தில் ஆரம்பித்து வைத்த போக்குதான் இந்தக் காலத்திலும் தொடர்கிறது..அந்தக் காலத்திலேயே இவர் துணிந்து லத்தீன் அமெரிக்க இசையை புகுத்தி இசையமைப்பில் சில மாறுதல்களை கொண்டு வந்தார்.

தனது 16ஆம் வயதில் ஜி ராமனாதனின் சகோதரர். சுப்பைய்யா பாகவதரின் சிபாரிசில் சுப்பராமன் HMV நிறுவனத்தில் ஹார்மோனியம் வாசிப்பவராக வேலையிலமர்ந்தார். இசையின் மீது இவருக்கிருந்த ஈடுபாடும், பக்தியும் விரைவிலேயே இவரை HMVயில் துணை இசை அமைப்பாளராக உயர்த்தின

இரவுகளில் சுப்பராமன், பணி முடிந்ததும், ஒரு இளைஞரை வயலின் வாசிக்க சொல்லிவிட்டு கீர்த்தனைகளை பாடுவார். அந்த இளைஞர் வேறு யாருமல்ல. T K ராமமுர்த்தி அவர்கள்தான். அவரை HMV யில் நிரந்த வேலைக்கு அமர்த்திவிட்டு தனது உதவியாளராகவும் நியமித்தார்..
Image may contain: 1 person, closeup
.
தனது 10 ஆண்டு திரை வாழ்க்கையில் இவர் இசை அமைத்த பாடல்கள் அனைத்தும் சாகா வரம் பெற்றவையாக அமைந்தன. தேவதாஸ், லைலா மஜ்னு போன்ற புகழ் பெற்ற படங்கள் இவர் இசையமைப்பில் வெளியாயின.

இவர் இசையமைப்பில் பாடிய பாடக நடிகர்கள்:
M K தியாகராஜ பாகவதர், P U சின்னப்பா, C S R ஆஞ்சநேயலு, U R ஜீவரத்தினம், T R ராஜகுமாரி, K. R. ராமசாமி, V. நாகையா, P பானுமதி, N S கிருஷ்ணன், T A மதுரம், S வரலக்ஷ்மி போன்றோர்.

இவர் இசையமைப்பில் பாடிய பின்னணி பாடகர்கள்:
கண்டசாலா, A M ராஜா, திருச்சி லோகநாதன், V N சுந்தரம், T. A மோதி, M L வசந்தகுமாரி P A பெரியநாயகி, P லீலா, T V ரத்தினம், R பாலசரஸ்வதி தேவி, A P கோமளா, K ஜமுனா ராணி, K V ராணி ஆகியோர்

இவர் இசையமைப்பில் வெளிவந்த சில படங்கள்:
அபிமன்யு, ராஜ முக்தி, ரத்ன குமார், லைலா மஜ்னு, வேலைக்காரி, நல்ல தம்பி, கன்னியின் காதலி, ஸ்வப்ன சுந்தரி, மர்மயோகி, மணமகள், மருமகள், சண்டிராணி, தேவதாஸ் போன்றவை .

இவரது வெற்றி பாடல்கள் சில:
உனையல்லால் ஒரு துரும்பசையுமோ - பாகவதர் - ராஜமுக்தி 
ஓரிடந்தனிலே நிலையில்லா உலகினிலே - வேலைக்காரி 
வான்மீதிலே இன்பத்தேன் மாறி பெய்யுதே - சண்டிராணி 
எனது உயிர் உருகும் நிலை சொல்லுவாய் நீ வான்மதி - லைலா மஜ்னு 
எல்லாம் இன்பமயம் - மணமகள் 
சின்னஞ்சிறு கிளியே - மணமகள் 
தேவதாஸின் அனைத்துப் பாடல்களும் 

உலகே மாயம், சின்னஞ்சிறு கிளியே, துன்பம் நேர்கையில் போன்ற அழியாப் பாடல்களைத் தந்த சி.ஆர். சுப்பராமன் 28 வயதிலேயே இவ்வுலகை விட்டு நீங்கினார். இவரது மறைவு தமிழ் திரையுலகுக்கு ஒரு பேரிழப்பாகும்

இவரது புதல்வர் திரு Kannan Latha AravindKanna Composer திருச்சியில் இசைப்பள்ளி வைத்து லண்டனிலுள்ள ட்ரினிட்டி காலேஜ் ஆஃப் ம்யூசிக், தேர்வுகளுக்கு மாணவர்களுக்கு பயிற்சிளிக்கிறார்.

Wednesday, June 14, 2017

ஜி ராமநாதன்

#தமிழ்த்_திரை_இசையின்_பிதா_மகர்கள்# – 4. – G ராமநாதன்

ஜி. ராமநாதன் தமிழ்நாட்டில் திருச்சிக்கு அருகிலுள்ள பிச்சாண்டார் கோயில் என்ற இடத்தில் பிறந்தவர். ராமநாதன் ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். தனது 18-வது வயதில் பாரத கான சபா என்கிற நாடகக் குழுவில் ஆர்மோனியம் வாசிப்பவராக சேர்ந்தார். அதன் பிறகு புகழ்பெற்ற வி. ஏ. செல்லப்பா நாடகக் குழுவில் ஆர்மோனியம் வாசிப்புடன் பின்னணிப் பாடகராகவும் சேர்ந்தார். 1932-ல் கல்கத்தாவில் தயாரிக்கப்பட்ட காலவரிஷி என்கிற தமிழ்படத்தில் முதன்முதலாக ஒரு இசைக்கருவியை இசைத்தார்.

1938-ல் எம். கே. தியாகராஜ பாகவதர் தயாரித்த சத்தியசீலன் என்கிற படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார். ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி என்கிற படத்தில் சன்னியாசி வேடத்தில் நடித்துள்ளார்.

இசை வாழ்க்கை
ஜி. ராமநாதன் அவர்கள் முறையாக கர்நாடக இசை பயின்றதில்லை ஆனாலும் கேள்வி ஞானத்தாலும், கர்நாடக இசையின் மீதிருந்த ஆர்வத்தாலுமே கற்றுக்கொண்டு இசையமைக்க ஆரம்பித்தார். இவர் இசையமைக்கத் தொடங்கிய 1940-களில் தமிழ்நாட்டில் திரைப்படத்தைப் போலவே நாடகங்களும் பிரபலமாயிருந்தன, ஆகையால் இரண்டையும் கையாளவேண்டியிருந்தது.

இவர் இசையமைத்த காலகட்டங்களில் கர்நாடக இசையை அடிப்படையாகக் கொண்டே திரையிசையும் இருந்தது. ஆனாலும், திரையிசை, கர்நாடக இசைக்கு சமமாக கருதப்படவோ, ஏற்றுக்கொள்ளப்படவோ இல்லை. இதைத் தவறு என நிருபிக்கும் வகையில் இருந்தது எம். கே. தியாகராஜ பாகவதரின் ஹரிதாஸ் திரைப்படத்தில் மன்மதலீலையை வென்றார் உண்டோ என்கிற பாடலுக்கு இவர் அமைத்த இசை. இவர் கர்நாடக இசையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படும் இசையே நிலைத்திருக்கும் என்பதில் மிகுந்த நம்பிக்கை உடையவராயிருந்தார். இதற்கேற்றார்போல இவர் இசையமைத்த பாடல்கள் Semi-Classic என்னும் கர்நாடக இசையின் வகையிலேயே இருந்தன..

ஜி. என். பாலசுப்பிரமணியம், எம். எல். வசந்தகுமாரி, மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர் போன்றோரின் குரல்களின் மீதும், இந்தி திரைப்பட இசையமைப்பாளர் நௌஷத்தின் இசை மீதும் ஒரு தனி விருப்பம் கொண்டிருந்தார். இவருடைய இசையில் பாடியதில் எஸ். வரலட்சுமி மற்றம் ஜிக்கி ஆகியோரின் குரல் இவருக்கு மிகவும் விருப்பமானது. எம். கே. தியாகராஜ பாகவதரின் குரலின் மீது மிகப்பெரிய விருப்பம் கொண்டிருந்தார்; ஒரு பாடகரிடம் என்ன எதிர்பார்க்கிறோமோ அதை எம்கேடியால்தான் தரமுடியும் என்பார் ஜி ஆர், அவரே ஒரு நல்ல பாடகர், தன்னுடைய இசையில் பொன்முடி திரைப்படத்திலும், கே. வி. மகாதேவன் இசையில் வந்த அல்லி பெற்ற பிள்ளை ஆகிய படங்களிலும் பாடியுள்ளார். எப்பொழுதும் பாடகரின் முழுத்திறமையையும் வெளிக்கொண்டுவர முயற்சிப்பார். பாடகர் டி. எம். சௌந்தரராஜன், ஜிஆரின் இசையில் அவருக்குத் திருப்தி அளிக்கும் வகையில் ஒரு பாடகரால் பாடமுடியும் என்றால், அந்தப் பாடகர் வேறு எந்த இசையமைப்பாளரின் இசையிலும், உலகின் எந்த மூலையிலும் எளிதாக பாடலாம் என்று கூறியுள்ளார்..
Image may contain: 1 person, closeup

தன்னுடைய இசையில் பாடலை பதிவுசெய்யும் முன் பாடகர்கள் எப்படி பாட வேண்டும் என்பதையும் விளக்கிப் பாடிக் காட்டுவார். புதுயுகம் என்கிற திரைப்படத்தையும் தயாரித்துள்ளார். இவரின் கடைசி படம் தெய்வத்தின் தெய்வம். அருணகிரிநாதர் திரைப்படத்திற்கு இசையமைத்துக் கொண்டிருந்த போது மாரைடைப்பால் இறந்தார் பிறகு இசையமைப்பாளர் டி. ஆர். பாப்பா அதை பூர்த்தி செய்தார்.

இவர் இசையில் பாடிய பாடக நடிகர்கள்:
M K தியாகராஜ பாகவதர்,M M தண்டபாணி தேசிகர், கொத்தமங்கலம் சீனு, M S சுப்புலக்ஷ்மி, D K பட்டம்மாள், M L வசந்தகுமாரி, P U சின்னப்பா, U R ஜீவரத்தினம், N C வசந்தகோகிலம், T R மகாலிங்கம், T R ராஜகுமாரி, K R ராமசாமி, சித்தூர் V நாகையா, P பானுமதி, N S கிருஷ்ணன், T A மதுரம், T S துரைராஜ், J P சந்திரபாபு ஆகியோர்

இவர் இசையில் பாடிய பின்னணி பாடகர்கள்:
T M சௌந்தரராஜன், A M ராஜா, சீர்காழி கோவிந்தரராஜன், திருச்சி லோகநாதன், C S ஜெயராமன், V N சுந்தரம், T A மோதி,
P B ஸ்ரீனிவாஸ், P லீலா, A P கோமளா, R பாலசரஸ்வதி தேவி,
T V ரத்தினம், ராதா ஜெயலக்ஷ்மி, M S ராஜேஸ்வரி ,T S பகவதி, ஜமுனா ராணி, P சுசீலா, A V ரத்தினமாலா, N L ஞானசௌந்தரி,, K ராணி, K V ஜானகி, சூலமங்கலம் ராஜலக்ஷ்மி, சூலமங்கலம் ஜெயலக்ஷ்மி, S ஜானகி, L R ஈஸ்வரி போன்றோர்

இவரது புகழ் பெற்ற சில பாடல்களும் அவற்றின் படங்களும்:
ஸ்வப்பன வாழ்வில் மகிழ்ந்து - சிவகவி
மன்மத லீலையை வென்றார் உண்டோ, கிருஷ்ணா முகுந்தா முராரே, அம்மையப்பா உங்கள் அன்பை மறந்தேன் - ஹரிதாஸ்
சின்னப் பெண்ணான போதிலே - ஆரவல்லி
வாராய், நீ வாராய், உலவும் தென்றல் காற்றினிலே -
மந்திரி குமாரி
ஜீவபிரியே ஷ்யாமளா என் ஜீவபிரியே ஷ்யாமளா - ஷ்யாமளா
சுந்தரி சௌந்தரி நிரந்தரியே, குரங்கிலிருந்து பிறந்தவன், ஏறாத மலைதனிலே - தூக்கு தூக்கி
மல்லிகப் பூ ஜாதி ரோஜா - கோமதியின் காதலன் 
ஆடல் காணீரோ, நாடகமெல்லாம் கண்டேன் - மதுரை வீரன்
வாழ்ந்தாலும் ஏசும் - நான் பெற்ற செல்வம்
சிந்தனை செய் மனமே, மாசிலா நிலவே நம் - அம்பிகாபதி
ஒம்காரமாய் விளங்கும் நாதம் - வணங்காமுடி
முல்லைமலர் மேலே, யாரடி நீ மோகனி - உத்தம புத்திரன்
சிங்காரக் கண்ணே, இன்பம் பொங்கும் வெண்ணிலா - வீரபாண்டிய கட்டபொம்மன்
கப்பலோட்டிய தமிழன் (அனைத்து பாரதியார் பாடல்களும்)
போன்ற சில.

இவரது பாடல்கள் பட்டியல் மிக நீண்டது. அவற்றில் சில மட்டுமே இங்கு தர முடிந்தது. கர்நாடக இசையின் அடிப்படையில் இவர் இசையமைத்ததினால் இவரது அனைத்துப் பாடல்களும் சிறந்து விளங்கின.

Tuesday, June 13, 2017

பாபநாசம் சிவன்

தமிழ்த் திரை இசையின் பிதா மகர்கள் – 3. - பாபநாசம் சிவன்

தமிழ் தந்த தியாகராஜர் என்று அழைக்கப படும் பாபநாசம் சிவன் 26-09-1890ல் தஞ்சைக்கு அருகில் உள்ள போலகம் என்னும் சிறு கிராமத்தில் ராமாமிருத ஐயருக்கும் யோகாம்பாளுக்கும் மகனாகப் பிறந்தவர். அவரது இயற்பெயர் ராமையா. சிறு வயதுப் பிராயத்தில் தந்தையை இழந்த ராமையா, தன் தாயார் மற்றும் மூத்த சகோதரருடன் 1898லிருந்து 1910 வரை இரண்டு வருடங்கள் திருவனந்தபுரத்துக்குக் குடி பெயர்ந்திருக்கிறார். திருவனந்தபுரத்து அரசருடைய ஊட்டுப்புறையின் ஆதரவில் வாழ்க்கை நடத்தியிருக்கிறார்கள். . திருவனந்தபுரத்தில் இருந்த இரு ஆண்டுகளில் மகாராஜா சம்ஸ்கிருதக் கல்லூரியில் உபாத்யாயர் பட்டம் பெற்றார். இதைத் தவிர முறையான கல்வி எதையும் சிவன் பின்னாளில் பெறவில்லை. அவருக்கு மரபின் அடிப்படையிலான இசைப்பயிற்சியோ பாக்களை இயற்றும் பயிற்சியோ வாய்த்திருக்கிவில்லை. ஆனால் கேள்வி ஞானத்தில் தன்னுடைய இசை வளமையைப் பெருக்கிக் கொண்டிருக்கிறார் சிவன். சிவனுடைய தாயார் மிகவும் அற்புதமான குரல் வளம் வாய்ந்தவராக இருந்திருக்கிறார். சுமார் 600 கீர்த்தனைகளுக்கு மேல் முறையாகப் பாடக் கற்றுக்கொண்டாராம் அந்த அம்மையார். சிவனின் தாய்வழிப் பாட்டனாரும் அந்தக் காலத்தில் மிகப்பெரும் இசை வல்லுநராக இருந்திருக்கிறார். இவ்விருவரின் தாக்கத்தில் இசையின் மேல் மாளாத காதலைக் கொண்டு வளர்ந்திருக்கிறார் சிவன். வளர்ந்த பிறகு கோனேரிராஜபுரம் வைத்தியநாதய்யர் போன்ற இசை வல்லுநர்கள் அவருடைய இசை வளமையினை செம்மைப்படுத்தியும் பெரும் ஆதரவும் அளித்து இருக்கிறார்கள்.

1910ல் அன்னையை இழந்த சிவன், திருவனந்தபுரத்தை விட்டு நீங்கி பாபநாசத்துக்கு வந்திருக்கிறார். தஞ்சை மாவட்டம் முழுதும் தன்னுடைய சகோதரருடன் நடைப்பயணமாகவே சென்று பல லயங்களில் திருவிழாக்களின்போது பஜனை உற்சவத்தை நடத்தியிருக்கிறார். அந்த பஜனை உற்சவங்களின்போது அவரே இயற்றிய பாடல்களை அவர் கணீரென்ற குரலில் பாடி மிகப்பெரும் கூட்டத்தை ஈர்த்து இருக்கிறார். திருவையாற்றில் சப்த ஸ்தானத் திருவிழாவிலும் சிவன் பாடலைக் கேட்க பெரும் திரளான மக்கள் கூடியிருக்கிறார்கள். 1912லிருந்து 1959 வரை அவர் இடைவிடாது சப்த ஸ்தான வைபவத்தில் கலந்து கொண்டு இருந்திருக்கிறார்.

அந்நாளில் இறையிசையில் தன்னைக் கரைத்துக் கொண்டவர்களை சிவன் என்று அன்புடன் அழைக்கும் மரபு இருந்திருக்கிறது. அந்த மரபில் ராமையா 'பாபநாசம் சிவன்' ஆக தஞ்சை கணபதி அக்கிரகாரத்தின் இசைப்பிரியர்களால் அன்புடன் பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.

1930ல் சென்னைக்குக் குடி பெயர்ந்தார் சிவன். அன்றிலிருந்து அவர் காலமாவதற்கு ஓராண்டுக்கு முன் அதாவது 1972 வரை மார்கழி மாதங்களில் மயிலையின் நான்கு மாடவீதிகளையும் சுற்றி வந்து அவர் நடத்திய கிரி பிரதட்சணமும் மார்கழி மாத விடியற்காலை பஜனைகளும் மிகவும் பிரசித்தமானவை. (கல்கி, விகடன் தீபாவளி மலர்கள்) 60களில் திராவிடர் கழகம் லய வழிபாட்டுக்கு எதிரான போராட்டங்களை வீதிகளுக்கு எடுத்து வந்த நேரம். சில இடங்களில் வன்முறை சம்பவங்களும் நிகழ்ந்தன.

பின்னாட்களில் அவரை மிகவும் அதிகமாகப் பாதித்தவர்கள் கோபாலகிருஷ்ண பாரதியும், நீலகண்ட சிவனும். இவ்விருவரின் பாடல்களில் மனம் கரைந்திருக்கிறார் சிவன்.

இசையும் கலையும் வசமானவர்களுக்கு இயற்கையாகவே சமூகம் குறித்த அக்கறையும் உள்ளீடாக உறைந்து கொண்டே இருக்கும். சிவனுக்கும் இருந்தது. துவக்க காலத்தில் இந்திய சுதந்திரப் போரில் நேரிடையாகப் பங்கு கொள்ளவில்லை என்றாலும் அதன் மீது பெரும் அக்கறை கொண்டு இருந்திருக்கிறார். பல தேசியப் பாடல்களை இயற்றத் தொடங்கினார் சிவன். அவை அக்காலத்தில் பெரும் புகழ் பெறவில்லை என்றாலும் பலருடைய கவனத்தை வெகுவாக ஈர்த்து இருக்கிறது. சிவன் இயற்றிக் கொடுத்த பாடல்களை நாடகக் கலைஞர்கள் தங்கள் நாடகங்களில் கையாளத் துவங்கினார்கள்.

ஒரு சாகித்ய கர்த்தாவாக சிவன் சங்கீத மும்மூர்த்திகளின் வரிசையைப் பின் தொடர்ந்து வந்திருக்கிறார். அவருடைய சாகித்யங்களில் வார்த்தைகள் அவருக்காகத் தவம் இருந்திருக்கின்றன. வார்த்தைகளுக்காக அவர் எந்த அகராதியையோ சூத்திர நூல்களையோ பயன்படுத்தவில்லை. தாளக்கட்டுக்களும் சொற்களும் அவர் வாயிலில் தவமிருந்து காத்து சேவகம் புரிந்திருக்கின்றன. அரியக்குடி ராமானுஜ அய்யங்கார், மகாராஜபுரம் விசுவநாத ஐயர், செம்பை வைத்தியநாத பாகவதர், முசிரி சுப்பிரமணிய அய்யர், செம்மங்குடி சீனிவாச ஐயர் போன்ற அக்காலத்தின் பிரசித்த பெற்ற இசைக்கலைஞர்கள் சிவனின் சாகித்யத்தைப் பாடி பிரபலப்படுத்தினார்கள். பிரபலம் அடைந்தார்கள். சிவனுடைய சாகித்யங்கள் கீர்த்தனைகள், வர்ணங்கள், ஓபரா என்று சொல்லப்படும் இசைநாடகங்களுக்கான பதங்கள் மற்றும் ஜாவளிகளைக் கொண்டு மிளிர்ந்து துலங்கின. இவற்றை அவருடைய குமாரத்தி டாக்டர் ருக்மணி ரமணி அவர்கள் ஆறு தொகுதிகளாக வெளியிட்டு இருக்கிறார். அவற்றில் இரு தொகுதிகள் தமிழ்ச் சங்க நூலகத்தில் இருக்கின்றன.

பத்து ஆண்டுகளுக்கும் மேலான ஆய்வு மற்றும் கடுமையான உழைப்புக்குப் பிறகு சிவன், சம்ஸ்கிருத பாஷா சப்த சமுத்ரஹ (வடமொழி சொற்கடல்) என்னும் சமஸ்கிருத அகராதி ஒன்றைத் தொகுத்து இருக்கிறார். அந்திம காலத்தில் ஸ்ரீராம சரித கீதம், (ராமாயணத்தை 24 பத்திகளில் 24 ராகங்களின் அடிப்படையில் அமைத்திருப்பார்) மற்றும் காரைக்கால் அம்மையார் சரித்திரம் போன்ற நூல்களை இயற்றினார். இவையும் நூல் வடிவம் பெற்றிருக்கின்றன.

சென்னை நாட்களில் அவர் திரைத் துறைக்கு அறிமுகம் ஆனார்.. பக்த குசேலா, பக்த சேதா, தியாகபூமி மற்றும் குபேர குசேலா கிய படங்களில் முக்கியப் பாத்திரமேற்று நடித்துள்ளார்சிவனுடைய திரைப்பாடல்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. பக்தி, தேசியம், சமூக விழிப்புணர்வு போன்றவை கலந்து மிக அருமையான சொற்கோவைகளில் அரிதான தாளக்கட்டுக்களில் அமைந்து அனைவரின் மனங்களையும் அந்நாளில் மட்டுமல்லாது இந்நாளிலும் கவரும் இசைச் சொற்சித்திரங்கள் அவை. அவருடைய பாடல்களால் வெற்றியடைந்த திரைப்படங்கள் கணக்கற்றவை.
Image may contain: 1 person

சிவனுடைய புரவலர்கள் என்று சொல்லவேண்டும் என்றால் கலாட்சேத்திராவின் திருமதி ருக்மணி அருண்டேல், அந்நாளைய திரைப்பட இயக்குநர்கள் கே.சுப்பிரமணியம், எஸ்.எஸ்.வாசன், கல்கி சதாசிவம், எம்.எஸ்.சுப்புலட்சுமி, முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரன், இயல், இசை நாடக மன்றம், சங்கீத் நாடக அகாதமி போன்ற நிறுவனங்கள் சிவனை வெகுவாக ஆதரித்தன.மிகவும் எளிமையான ஆன்மீக வாழ்க்கையை வாழ்ந்தவர் சிவன் அவர்கள். தன்னை அவர் என்றுமே எங்குமே முன் நிறுத்திக் கொண்டவர் இல்லை.

சுமார் 2500 பாடல்களை பல ராகங்களில் இயற்றியிருக்கிறார். பல நாடகங்களுக்கும் திரைப்படங்களுக்கும் பாடல்கள் இயற்றியிருக்கிறார். 1934லிருந்து 1939 வரை அவர் கலாட்சேத்ராவில் இசைஆசிரியராகப் பணி புரிந்து இருக்கிறார். திரைப்படப் பாடல்களுக்குப் பாடல் எழுதவேண்டி கலாட்சேத்திராவில் ஆசிரியர் தொழிலைத் துறந்தார்.

தியாகைய்யருக்கு ஒரு ராமர் என்றால் நம் சிவனுக்கு மயிலை கபாலீஸ்வரர் நவரச கானடாவில் நானொரு விளையாட்டுப் பொம்மையா, மோகனத்தில் கபாலி, மத்யமாவதியில் கற்பகமே போன்ற பாடல்கள் இறவா வரம் பெற்றவை.

சேவா சதனம், அம்பிகாபதி, நந்தனார், சகுந்தலை, சாவித்ரி, சிவகவி, தியாகபூமி போன்ற இறவா வரம் பெற்ற படங்களில் அவருடைய பாடல்கள் இடம் பெற்றன

அவர் இசையமைத்த படங்கள் சில:
சத்யசீலன், சிவகவி, ஹரிதாஸ், ஆகிய படங்களை, ஜி ராமனாதனுடனும், வால்மீகி என்ற படத்திற்கு S V வெகட்ராமனுடனும் சேர்ந்து இசையமைத்திருக்கிறார்.
.
இவர் இயற்றிய பிரபல பாடல்களில் சில:

அசோக்குமார் - தியானமே எனது மனது நிறைந்தது சந்திர பிம்ப வதனம், மனமே நீ ஈசன் நாமத்தை வாழ்த்துவாய், பூமியில் மானிட ஜென்மம் அடைந்தும் ஓர் புண்ணியம் இன்றி விலங்குகள் போல், சத்துவ குணபோதன்...
திருநீலகண்டர் - உன்னைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ, தீன கருணாகரனே நடராஜா நீலகண்டனே...மறைவாய்ப் புதைத்த ஓடு, பவளமால் மாலையை
ஹரிதாஸ் - என்னுடல்தனில் ஒரு ஈ மொய்த்தபோது, , மன்மத லீலையை வென்றார் உண்டோ
நந்தனார் - பிறவா வரம் தாரும்

இவரது பிரபல பக்திப் பாடல்கள் சில:
அம்பா நீ இரங்காயெனில் புகலேது, (அடாணா), நேவி நீயே துணை (கீரவாணி) காணக் கண் கோடி வேண்டும் (காம்போதி) கா வா வா கந்தா வா வா (வராளி), கண்ணன் மதுர இதழை (பீம்ப்ளாஸ்), கபாலி (மோகனம்), கற்பகமே (மத்யமாவதி), மா ரமணன்(ஹிந்தோளம்), நான் ஒரு விளையாட்டு பொம்மையா (நவரச கானடா), பிறவா வரம் தாரும் (லதாங்கி) சாமஜ வர கமனா (மத்யமாவதி), ஸ்வாமிக்கி சரி எவரே (கேதாரகௌளை) தத்வமரிய தரமா (ரீதி கௌளை) போன்றவை.

எனது நினைவுக்கடல் என்னும் பெயரில் ஒரு சிறிய சுயசரிதையை எழுதியிருக்கிறார் சிவன். 1968ல் சிவன் அவர்கள் தினமணி கதிருக்காக தொடராக எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். தன்னுடைய இளமைப்பருவ நினைவுகளில் தொடங்கி 1921ல் தன்னுடைய சென்னை வருகை வரை பதிவு செய்திருப்பார் சிவன். துரதிருஷ்டவசமாக சிவனின் உடல்நிலை காரணம் கொண்டு இத்தொடர் 1968ல் நிறுத்தப்பட்டது அக்டோபர் 10, 1973 அன்று தமிழ்த் தியாகய்யர் காலமானார்.

Sunday, June 11, 2017

S M சுப்பையா நாயுடு

#தமிழ்த்_திரை_இசையின்_பிதா_மகர்கள்# - 2. S M சுப்பையா நாயுடு.

முதல் முதலில் பின்னணியில் பாடுவதை தமிழ்த் திரையில் அறிமுகப்படுத்தியவர், டி எம் எஸ் பாடிய முதல் திரைப்பாடலுக்கு இசையமைத்தவர், எம் ஜி ஆரின் முதல் கொள்கைப்பாடலுக்கு இசையமைத்தவர், கண்ணதாசனின் முதல் பாடலுக்கு இசையமைத்தவர், எம் எஸ் விஸ்வநாதன் இசை அமைத்த முதல் பாடலை திரையில் ஒலிக்க செய்தவர் - இத்தனை சிறப்புகளையும் ஒருங்கே அமையப் பெற்றயவர் - தென்னிந்திய திரை இசை உலகில் "சங்கீதையா" என்று அன்புடன் அழைக்கப்பட்ட திரு எஸ் எம சுப்பையா நாயுடு. 

காவல்துறையில் இருந்த தந்தையின் கண்டிப்பு பொறுக்காமல் வீட்டை விட்டு ஓடி வந்தவர் திரு எஸ் எம் எஸ். சிங்கப்பூர் சென்று பிழைக்க எண்ணி நாகப்பட்டினம் வந்தார், கப்பலேற. உடனடியாக செல்ல இயலவில்லை. இன்னும் சில நாட்கள் ஆகும்போலிருந்ததால் தஞ்சாவூருக்கு சென்றார். அங்கு ஜெகந்நாத ஐயர் நடத்தி வந்த நாடகக் கம்பெனியில் சேர்ந்து சிறு சிறு வேடங்களில் நடிக்கத் துவங்கினார். அவர் நடித்த கபீர்தாஸ் நாடகத்தில் கபீர்தாஸாக நடித்தவர் பின்னாளில் புகழ்பெற்று விளங்கிய இசையமைப்பாளர் திரு எஸ் வி வெங்கட்ராமன்.

நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை ஜகந்நாத ஐயரிடமிருந்து பிரிந்து தனியாக நாடகக் குழு துவங்கியபோது அவரிடம் சேர்ந்து ஹார்மோனியம் பயின்றார். அப்போது பிரதான ஹார்மோனியக் கலைஞராக இருந்த ராஜகோபால் அய்யங்கார் நோய்வாய்ப்பட்டு சொந்த ஊருக்கு சென்றுவிடவே அங்கு நாடகங்களுக்கு ஹார்மோனியம் வாசிக்கத் துவங்கினார். பிறகு நவாப் நடித்த பக்த ராமதாஸ் திரைப்படமாக வந்தபோது அதில் ஹார்மோனியம் வாசித்தார். பிறகு பல படங்களில் ஹார்மோனியக் கலைஞராக பணியாற்றினார். அப்போது இசையமைப்பாளர் என்ற பொறுப்பு எவருக்கும் அளிக்கப்படவில்லை. அப்படிப்பட்ட சூழ்நிலையிலும் படிப்படியாக முன்னேறி இசையமைப்பாளரானார்.

முதல் முதலில் பின்னணியில் பாடுவதை தமிழ்த் திரையில் அறிமுகப்படுத்தியவர் இவர்தான். ராஜகுமாரி என்ற படத்தில் M N நம்பியாருக்காக திருச்சி லோகநாதன் பாடிய காசினி மேல் நாங்கள் என்ற பாடல்.

இவரது இசையில்தான் கவியரசு கண்ணதாசன் எழுதிய முதல் பாடலான கலங்காதிரு மனமே என்ற பாடல் 1949ல் வெளியான கன்னியின் காதலி என்ற படத்தில் K V ஜானகி பாடியது.

ஜூபிடரின் அபிமன்யு படத்திற்கு ஒரு பாடல் காட்சிக்கான மெட்டு சரியாக அமையவில்லை. தனது உதவியாளனாக இருந்த ஒரு இளைஞன் போட்ட மேட்டை கேட்ட எஸ் எம் எஸ் அதையே பயன்படுத்திக் கொண்டார். அந்த பாடல் புது வசந்தமாமே வாழ்விலே என்ற பாடல். யூ ஆர் ஜீவரத்தினம், திருச்சி லோகநாதன் பாடிய பாடல். பின்னாளில் ஜூபிடர் நிறுவனம் கோவையிலிருந்து சென்னைக்கு மாறியபோது தனது உதவியாளன்தான் அந்தப் பாடலுக்கு இசையமைத்தாகவும் அவனையும் சென்னைக்கு அழைத்து சென்று விடும்படியும் வேண்டிக் கொண்டார் எஸ் எம் எஸ். அந்த உதவியாளன்தான் மெல்லிசை மன்னர் திரு எம் எஸ் விஸ்வநாதன்.

எம் ஜி யாருக்காக மலைக்கள்ளன் படத்தில் இவர் இசையமைத்த "எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்" என்ற பாடல் பெரும்புகழ் பெற்றது. இப்பாடல் எம் ஜி ஆருக்கு திரையுலகில் ஒரு பெரிய திருப்புமுனையைத் தந்தது என்றால் மிகையாகாது.

கண்டசாலா, M S விஸ்வநாதன், T K ராமமூர்த்தி, G K வெங்கடேஷ், சூலமங்கலம் ராஜலக்ஷ்மி போன்றோர் இவரிடம் உதவியாளர்களாக இருந்தது குறிப்பிடத் தக்கது
Image may contain: 1 person

இவர் ஒரு சிறந்த இசை அமைப்பாளர் மட்டுமல்ல, ஒரு சிறந்த MUSIC CONDUCTORம் கூட. இவரது மெட்டுக்கள் அனைத்தும் உடனடி HITS ஆக விளங்கின. J P சந்திரபாபுவை குங்குமப்பூவே பாடலின் மூலம் ஒரு சிறந்த பாடகராக உருவாக்கினார். இவரது இசையமைப்பை ஒரு சிலர் எல்லி நகையாடியபோதும் மனம் தளராது தன் கடமையை செய்து வந்தார். அவர்களுக்கு பதில் கூறும் வகையில் இவர் இசையமைத்த பாடல்தான் எஸ் ஜானகி பாடிய சிங்கார வேலனே தேவா பாடல். பெரும் புகழ் பெற்ற பாடல். இன்றும் ஜானகி அவர்கள் இந்தப் பாடலைத்தான் தனது தலைசிறந்த பாடலாக குறிப்பிடுகிறார். 

இவரது இசையில் பாடிய பாடக நடிகர்கள்:

P U சின்னப்பா, C ஹொன்னப்ப பாகவதர், N C வசந்தகோகிலம், U R ஜீவரத்தினம், T R ராஜகுமாரி, K R ராமசாமி, சித்தூர் V நாகைய்யா, N S கிருஷ்ணன், T A மதுரம், P பானுமதி, S வரலக்ஷ்மி, J P சந்திரபாபு ஆகியோர்.

இவரது இசையில் பாடிய பிரபல பாடகர்கள்:

C S ஜெயராமன்,T M சௌந்தரராஜன், கண்டசாலா,A M ராஜா, சீர்காழி கோவிந்தரராஜன், திருச்சி லோகநாதன், V N சுந்தரம், T A மோதி, P B ஸ்ரீனிவாஸ், S C கிருஷ்ணன், A L ராகவன், M L வசந்த குமாரி, P A பெரியநாயகி, P லீலா, ஜிக்கி, T V ரத்தினம், A P கோமளா , ராதா ஜெயலக்ஷ்மி, சூலமங்கலம் ராஜலக்ஷ்மி, ஜமுனா ராணி, P சுசீலா, K V ஜானகி, S ஜானகி,, L R ஈஸ்வரி போன்றோர்.

இவரது சில பிரபல பாடல்கள்:

திருடாதே பாப்பா திருடாதே - திருடாதே.
எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே - மலைக்கள்ளன்,
தூங்காதே தம்பி தூங்காதே - நாடோடி மன்னன்,
சிங்கார வேலனே தேவா - கொஞ்சும் சலங்கை,
நீ எங்கே என் நினைவுகள் அங்கே - மன்னிப்பு,
மாலை மயங்குகிற நேரம், பச்சை மலை அருவியோரம் - மரகதம்,
அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை - அன்னையின் ஆணை,
எத்தனை செல்வங்கள் வந்தாலுமே - தாயின் மடியில்,
கண்ணில் வந்து மின்னல் போல் - நாடோடி மன்னன், 
காசேதான் கடவுளப்பா - சக்கரம்.ஆகிய சில.

இவர் இசையமைத்த படங்கள் சில:

மனோன்மணி, ஸ்ரீ முருகன், வால்மீகி, ராஜகுமாரி, அபிமன்யு, கன்னியின் காதலி, வேலைக்காரி, ஏழை படும் பாடு, திகம்பர சாமியார், மர்மயோகி, மலைக்கள்ளன், வாழ்விலே ஒரு நாள், நாடோடி மன்னன், அன்னையின் ஆணை, திருமணம், மரகதம், அதிசயப் பெண், திருடாதே, கொஞ்சும் சலங்கை, கல்யாணியின் கணவன், தாயின் மடியில், ஆசை முகம், நாம் மூவர், நாலும் தெரிந்தவன், பணக்காரப் பிள்ளை, ஐந்து லட்சம், மன்னிப்பு, தலைவன், இலங்கேஸ்வரன் போன்றவை.

Friday, June 9, 2017

எஸ் வி வெங்கட்ராமன்

அனைவருக்கும் வணக்கம்.
ஒரு புதிய தொடர் - தமிழ்த் திரை இசையின் பிதா மகர்கள். தமிழ்த் திரையிசைக்கு அரும்பணி ஆற்றிய இசையமைப்பாளர்களைப் பற்றி எழுதவிருக்கிறேன். 

1: S V வெங்கட்ராமன் 
சிறுவயதில் தந்தையை இழந்த இவர், முதலில் நாடங்களில் நடித்தும், பாடியும், ஹார்மோனியம் வாசித்தும் வந்தார். பிறகு திரைப் படங்களில் நடிக்கத் துவங்கினார். ஒரு படப்பிடிப்பின் சண்டைக் காட்சியின்போது இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதால், ஓய்விலிருந்த இவரை பெங்களூர் கப்பன் பார்க்கில் பார்த்த திரு A V மெய்யப்ப செட்டியார், சென்னை அழைத்து வந்து தனது நந்தகுமார் என்ற படத்திற்கு இசை அமைக்கும் பொறுப்பை ஒப்படைத்தார்.

இவர் இசை அமைத்த திரைப்படங்கள் சில:
நந்தகுமார், சகுந்தலை, கண்ணகி, ஹரிச்சந்திரா, மீரா (தமிழ், ஹிந்தி) ஸ்ரீ முருகன், ஸ்ரீ கிருஷ்ண விஜயம், ஞான சௌந்தரி, வனசுந்தரி, பணக்காரி, மனோகரா (தமிழ், தெலுங்கு, ஹிந்தி) மாமன் மகள், பானை பிடித்தவள் பாக்யசாலி, இரும்புத்திரை, மருத நாட்டு வீரன், அக்பர் (தமிழ்) அறிவாளி போன்றவை.





இவர் இசையில் பாடிய பாடக நடிகர்கள்:
M M தண்டபாணி தேசிகர், G N பாலசுப்ரமணியம், M S சுப்புலக்ஷ்மி, D K பட்டம்மாள், P U சின்னப்பா, U R ஜீவரத்தினம், N C வசந்தகோகிலம், T R மகாலிங்கம், T R ராஜகுமாரி, சித்தூர் V நாகையா, N S கிருஷ்ணன், T A மதுரம், T S துரைராஜ், J P சந்திரபாபு போன்றோர்.

இவர் இசையில் பாடிய பின்னணி பாடகர்கள்:
T M சௌந்தரராஜன், A M ராஜா, சீர்காழி கோவிந்தரராஜன், திருச்சி லோகநாதன், V N சுந்தரம், T A மோதி, M L வசந்த குமாரி, P லீலா, ஜிக்கி, T V ரத்தினம், A P கோமள, ராதா ஜெயலக்ஷ்மி, ஜமுனா ராணி, P சுசீலா, K ராணி, L R ஈஸ்வரி போன்றோர்.

வெங்கட்ராமன், M S சுப்புலக்ஷ்மியின் புகழ்பெற்ற பஜகோவிந்தத்திற்கு இசையமைத்தவர். மேலும் அவர் பாடிய தனிப் பாடல்களான, வடவரையை மத்தாக்கி, முடி ஒன்று மூவுலகங்களையும் போன்ற பாடல்களுக்கும், மகாகவி பாரதியாரின் பாடல்கள் சிலவற்றுக்கும் இசையமைத்துள்ளார். குருவாயூர் ராமச்சந்திரன் பாடிய நாராயணீ யத்திற்கு இசையமத்தவரும் இவர்தான். மகாத்மா காந்தியின் புதல்வர் தயாரித்த VOICE OF INDIA, ஆவணப் படத்திற்கும் இவர் இசையமைத்துள்ளார்.

குன்னக்குடி வைத்தியநாதன்.

தமிழ்த் திரை இசையின் பிதா மகர்கள் - 16 : குன்னக்குடி வைத்தியநாதன். குன்னக்குடி வைத்யநாதனைப் பற்றி கூற வேண்டுமெனில்; "யாரையும் எ...