தமிழ்த் திரை இசையின் பிதா மகர்கள் - 12" - A M ராஜா
தென்றல் உறங்கியபோதும், திங்கள் உறங்கியபோதும் இவரது குரலினிமை உறங்கவில்லை..தென்றலில் தவழ்ந்தும, திங்களில் ஒளிர்ந்தும் நம்மை மகிழ்வித்தது.
A M ராஜா பிறந்தது ஆந்திரப் பிரதேசத்தின் தென் மாவட்டமான சித்தூர். ஒரு மாதக் குழந்தையாக இருந்தபோதே தந்தையை இழந்தவர் ராஜா.
ரேணுகாபுரத்தில் ராஜாவின் பள்ளி நாட்கள் தொடங்கின
படிப்பு நன்றாக வந்தது.பாட்டும்நன்றாக வந்தது. எங்கு சென்றாலும் அவனைப் பாட சொல்வார்கள் என்று ராஜாவின் தமக்கை நாகம்மா கூறுகிறார்.
பள்ளியிறுதி முடித்து இண்டர்மீடியட் படிக்க, வேலூரில் உள்ள ஊரீஸ் கல்லூரியில் சேர்ந்தார். பின்னர் பட்டப் படிப்பிற்காக சென்னை வந்தார். பச்சையப்பன் கல்லூரியில் பி ஏ படித்து வந்தார்.அப்போது கல்லூரி இசைப்போட்டியில் வென்ற ராஜாவின் குரலை பதிவு செய்ய விரும்பியது HMV நிறுவனம். "ஓ ஹ்ருதய ராணி" "எந்த தூரம் ஈ பயணம்" என்று தாய்மொழி தெலுங்கில் ராஜா எழுதி மெட்டமைத்துப் பாடிய பாடல்கள் பதிவாயின
இந்த காலக்கட்டத்தில் சம்சாரம் என்ற படத்தை எடுத்துக் கொண்டிருந்தார் எஸ்எஸ் வாசன். கண்டசாலாவின் தமிழ் உச்சரிப்பு அவ்வளவாக திருப்தி தராததால் "ஓ ஹ்ருதயஹ்ருதய ராணி" பாடலைக் கேட்ட அவர் A M ராஜாவை பாட வைக்க விரும்பினார். "சம்சாரம், சம்சாரம், சகல தர்மசாரம், சுக ஜீவனாதரம்" என்ற பாடல் அவர் பாடி புகழ் பெற்றது..பின்னர் அவர்அவர் இயக்குனர் ஸ்ரீதரை சந்திக்கும் வரை பாடல்கள்தான் பாடி வந்தார்.
மகேஸ்வரி என்ற படத்தின் "அழகுநிலாவின் பவனியிலே" என்ற பாடல் பதிவின்போது ஜிக்கியிடம் அவரை விரும்புவதாகவும் அவரை மணக்க ஆசைப்படுவதாகவும் தனது உள்ளக் கிடக்கையை வெளியிட்டார் ராஜா. பின்னர் இருவரும் முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.
ஒரு ரயில் பயணத்தின் போது கதாசிரியரும் வசனகர்த்தாவுமான ஸ்ரீதருடன் ராஜா பயணம் செய்ய நேர்ந்தது.. இருவரும் மாடர்ன் தியேட்டர்சுக்கு வாய்ப்புக்காக சென்று கொண்டிருந்தனர். அப்போது ஸ்ரீதர் படம் இயக்கினால் தனக்கு இசையமைக்க வாய்ப்பு தர வேண்டும் என்று ராஜா கேட்டுக் கொண்டார். ஸ்ரீதரும் சம்மதித்தார்.
ஸ்ரீதருக்கு வாய்ப்பும் கிடைத்தது.வாக்கும் காப்பாற்றப்பட்டது.தமிழ்த் திரையுலகிற்கு ஒரு புதிய திருப்பம் கிடைத்தது.- படம் கல்யாணப் பரிசு.
ராஜாவின் இசையில். ராஜா. சுசீலா, ஜிக்கி ஆகியோரின் குரலில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பாடல்கள் பெரும் வெற்றி பெற்றன. "துள்ளாத மனமும் துள்ளும், வாடிக்கை மறந்ததும் ஏனோ, ஆசையினாலே மனம், காதலிலே தோல்வியுற்றான் ஒருவன்" என்று அனைத்துப் பாடல்களுமே வெற்றி. "உன்னைக் கண்டு நான் ஆட" பாடல் 50 ஆண்டுகளைக் கடந்தும் இன்றும் தீப ஒளி வீசிக் கொண்டிருக்கிறது.

பிறகு இவர் விடிவெள்ளி, தேன் நிலவு போன்ற படங்களுக்கு இசையமைத்தார். விடிவெள்ளி படத்தில் "இடை கையிரண்டில் ஆடும்" என்று சிவாஜி கனேசனுக்காக இவர் பாடிய பாடல், "கொடுத்துப் பார் பார் உண்மை அன்பைஅன்பை" "பண்ணோடுபண்ணோடு பிறந்தது தாளம்" "எந்நாளும் வாழ்விலே" போன்ற பாடல்கள் பிரபலமாயின. தேன் நிலவு படத்தில் "பாட்டுப் பாடவா" என்ற ஜனரஞ்சக பாடல் ரசிகர்களிடையே பெருத்த வரவேற்பைப் பெற்றது. "காலையும் நீயே, மாலையும் நீயே" பாடல் பசந்த் பஹார், பந்துவராளி, ஹம்சானந்தி ஆகிய ராகங்கள் அடங்கிய ராகமாலிகையில் அமைந்து இசை விரும்பிகளின் உள்ளங்களை கொள்ளை கொண்டது. மேலும் " சின்னக் சின்னக் கண்ணிலே" "ஓஹோ எந்தன் பேபி" "ஊரெங்கும் தேடினேன்" மலரே மலரே தெரியாதோதெரியாதோ" போன்ற பாடல்களும் பெரும் வரவேற்பைப் பெற்றன. பாடல்கள் வெற்றி பெற்றாலும் படம் தோல்வி அடைந்தது.
ஏதோ ஒரு காரணத்தால் ஸ்ரீதருடனான ராஜாவின் உறவு இப்படத்துடன் முறிந்தது இப்படத்திற்கு பின்னணி இசை அமைக்கவே ராஜா மறுத்து விட்டார். பிறகு எம் ஜி ஆர் போன்றோரின் தலையீட்டினால் செய்து முடித்தார். நெஞ்சில் ஓர் ஆலயத்திற்கு இசையமைக்க வாங்கியிருந்த காசோலையையும் திருப்பிக் கொடுத்து விட்டார்.
அதன் பிறகு இவர் இசையமைத்த படங்கள், ஆடிப்பெருக்கு, அன்புக்கோர் அண்ணி, வீட்டு மாப்பிள்ளை, எனக்கொரு மகன் பிறப்பான் ஆகியவை.
A M ராஜா இசையமைத்த படங்கள்:
கல்யாணைப் பரிசு (1950)
விடிவெள்ளி (1960)
தேன்நிலவு (1961)
ஆடிப்பெருக்கு (1962)
அன்புக்கோர் அண்ணி (1960)
வீட்டு மாப்பிள்ளை (1972)
எனக்கொரு மகன் பிறப்பான் (1975)
இசையமைக்குமுன் பிறர் இசையமைப்பில் ராஜா பாடிய சில பாடல்கள்:
சம்சாரம், சம்சாரம் (சம்சாரம்)
ஏதுக்கு அழைத்தாய் ஏதுக்கு (பெற்ற தாய் - பி சுசீலாவுடன்-பி சுசீலாவின் முதல் பாடல் இது)
பேசும் யாழே பெண் மானே - நாம்
சின்ன சின்ன வீடு கட்டி - மருமகள்
நான் ஏன் வர வேண்டும் ஏதுக்க்காகவோ - பூங்கோதை
துள்ளியே ஓடுமே வாழ்வுமே - வஞ்சம்
மின்னல் போலாகும் இந்த வாழ்க்கையே - அவன்
அன்பே வா, அழைக்கின்றதெந்தன் மூச்சே - அவன்
சிற்பி செதுக்காத -பொற்சிலையே எதிர்பாராது
சிங்காரப் பைங்கிளியே பேசு - மனோகரா
இவரது இசையமைப்பில் சில வெற்றிப் பாடல்கள்:
உன்னைக் கண்டு நான் ஆட - கல்யாணப் பரிசு
ஆசையினாலே மனம் - கல்யாணப் பரிசு
வாடிக்கை மறந்ததும் ஏனோ - கல்யாணப் பரிசு
துள்ளாத மனமும் துள்ளும் - கல்யாணப் பரிசு
காதலிலே தோல்வியுற்றான் - கல்யாணப் பரிசு
கொடுத்துப் பார் பார் பார் உண்மை அன்பை - விடிவெள்ளி
இடை கையிரண்டில் - ஆடும் - விடிவெள்ளி
பண்ணோடு பிறந்தது தாளம் - விடிவெள்ளி
பாட்டுப் -பாடவா- தேன் நிலவு
ஓஹோ எந்தன் பேபி - தேன் நிலவு
நிலவும் மலரும் பாடுது - தேன் நிலவு
சின்ன சின்னக் கண்ணிலே - தேன் நிலவு
காலையும் நீயே மாலையும் நீயே - தேன் நிலவு
மலரே மலரே தெரியாதோ - தேன் நிலவு
ஊரெங்கும் தேடினேன் -தேன் நிலவு
கண்ணிழந்த மனிதர் முன்னே - ஆடிப்பெருக்கு
அன்னையின் அருளே வா வா - ஆடிப்பெருக்கு
தனிமையிலே இனிமை காண முடியுமா - ஆடிப்பெருக்கு
காவேரி ஓரம் கவி சொன்ன காதல் ஆடிப்பெருக்கு
ராசி நல்ல ராசி - வீட்டு மாப்பிள்ளை
மலரே நீ என் மலரல்ல - வீட்டு மாப்பிள்ளை
தனது இனிய இசையாலும், காந்தக் குரலாலும் ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்ட A M ராஜா,ஒரு இசைக் கச்சேரி செய்ய பயணம் செய்தபோது, ரயில் பிளாட்ஃபாரத்தின் இடையில் சிக்கிக் கொண்டு உயிரிழந்தார். எதிர்பாராத இந்த மரணம் தமிழ்த் திரையுலகிற்கு பேரிழப்பாகும். இன்றும் ரசிகர்களின் நெஞ்சங்களில் அவர் வாழ்கின்றார் என்றால் அது பொய்யல்ல. மறக்க முடியாத ஒரு பண்பான மனிதர் திரு A M ராஜா.
(நன்றி: திரு வாமனன் அவர்கள்)
No comments:
Post a Comment