Thursday, September 21, 2017

குன்னக்குடி வைத்தியநாதன்.

தமிழ்த் திரை இசையின் பிதா மகர்கள் - 16 : குன்னக்குடி வைத்தியநாதன்.

குன்னக்குடி வைத்யநாதனைப் பற்றி கூற வேண்டுமெனில்;
"யாரையும் எளிதில் ஏற்காத கர்நாடக இசை உலகில் தனக்கென்று ஒரு பாணியை ஏற்படுத்திக் கொண்டு அதில் வெற்றியும் கண்டார்.

வலையப்பட்டி சுப்பிமரமணியத்தின் தவிலுடன் வயலின் கச்சேரிகள்.

வயலினில் திரை இசை. உரையாடல் போன்றவை 

திரை இசை அமைப்பு"என்றுதான் வரையறுக்க வேண்டும்.

திரையிசையில் இவர் இசை அமைத்த காதல் பாடல்களை விட பக்தி பாடல்களே பிரபலம். பக்தி பாடல்கள் பாமரரையும் சென்றடையும் அளவிற்கு இவரது இசை அமைந்தது.

குன்னக்குடி வைத்யநாதனின் தந்தையார் பெயர் குன்னக்குடி ராமசாமி சாஸ்திரிகள். தாயார் - மீனாக்ஷி அம்மாள். தந்தையார் ஹரிகதா காலக்ஷேபம் செய்பவர். "சங்கீத சாகித்ய ஹரிகதா பிரவீன் குன்னக்குடி ராமசாமி சாஸ்திரிகள்" என்று அழைக்கப்பட்டார். குன்னக்குடியின் சகோதரர் கணபதி சுப்பிரமணியம் மிருதங்கம் வாசிப்பவர். தமக்கைகள் சுப்புலக்ஷ்மி-சுந்தரலக்ஷ்மி, குன்னக்குடி சகோதரிகள் என்ற பெயரில் கர்நாடக சங்கீத கச்சேரிகள் செய்து வந்தனர். குன்னக்குடி வைத்தியநாதன் பள்ளி ஏதும் செல்லாமல் அதிகாலையில் நீராடி சந்தியாவந்தனம் முடித்து தந்தையின் பூஜைக்கு தேவையான புஷ்பங்கள் கொணர்ந்து தந்து விட்டு. குன்றின் மேல் காட்சி தரும் ஷண்முகநாதனின் சந்நிதிலேயே பழியை இருப்பார். அங்கு கிடைக்கும் அரை பட்டை சாதம், அரை வடை, அரையணா இவற்றை கொண்டு வந்து தாயிடம் கொடுப்பதுதான் அவரது அன்றாட பணி. இதில் அவரது தாய்க்கு சற்று கவலையே. தன கணவரிடம் இவரை எப்படியாவது கரை தேற்றி விடுங்கள் என்று சொல்லுவார்;

குன்னக்குடி சகோதரிகளின் ஒரு கச்சேரிக்கு வயலின் பக்க வாத்தியம் வாசித்து வந்த திருப்பத்தூர் ராமச்சந்திரச்சார் என்பவர் வரவில்லை. வயலின் இல்லாமலேயே கச்சேரி முடிந்தது. மறுநாள் வந்த அவரை குன்னக்குடியின் தந்தை இப்படி கடைசி நேரத்தில் கழுத்தறுத்து விட்டீரே என்று கேட்டதற்கு. வரமுடியாமல் போச்சு என்று அலட்சியமாக கூறியதுடன், "பொண்ணுங்களை பாட வெச்சுட்டே, பையன் மிருதங்கம், ஆனா வயலினுக்கு என்னைத்தானே எதிர்பார்த்திருக்கே" என்று கேலியாகக் கூறினார். இந்த கேலி பொறுக்காமல் அப்போது அங்கு வந்த சிறுவன் வைத்தியின் கையைப் பிடித்து "இவனைப் பெரிய வயலின் விதவானாக்குகிறேன் என்று சவால் விட்டார். அனைவரும் சிரித்து விட்டனர். 

அவரிடமிருந்து வயலினை குன்னக்குடி வாங்கிய நேரம் அவரது வாழ்வின் ஒரு திருப்புமுனை என்றே கூறலாம். அசுர சாதகம் செய்து ஒரு வருடத்திற்குள்ளாகவே தனது சகோதரிகளின் கச்சேரியில் தனது சகோதரன் மிருதங்கம் வாசிக்க இவரது வயலின் அரங்கேற்றம் நிகழ்ந்தது. பின்னர் பதினோரு வயதிலேயே, காரைக்குடி கிருஷ்ணன் கோயிலில், அரியக்குடி ராமானுஜ ஐயங்காரின் கச்சேரிக்கு வயலின் வாசிக்க வாய்ப்பு கிடைத்தது. பின்னர் ஓரிரு ஆண்டிலேயே, மகாராஜபுரம் விஸ்வநாத அய்யர், செம்மங்குடி ஸ்ரீனிவாச அய்யர் போன்ற பல முன்னணி விதவான்களுக்கு குன்னக்குடி அவர்கள் வயலின் வாசித்திருக்கிறார்.

இவ்வாறு மேடைகளில் பல வித்வான்களுக்கு பக்க வாத்தியம் வாசித்து வந்த குன்னக்குடியின் கவனம் சினிமா இசையின் மீது திரும்பியது. ஜலதரங்கம் வெங்கட்ராம ராவ் என்பவற்றின் சிபாரிசில் மாடர்ன் தியேட்டர்ஸில் மாதச் சம்பளத்தில் வேலை கிடைத்தது. ராமநாத அய்யர், எஸ் எம் சுப்பையா நாயுடு போன்ற இசை மேதைகளுடன் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது.

வாய்ப்புக்களை பெருக்கிக் கொள்ள, 1952ல் சென்னை வந்தார் குன்னக்குடி. திரை இசைக் கலைஞராகவும், சூலமங்கலம் சகோதரிகள் போன்றோருக்கு பக்க வாத்தியம் வாசிப்பவராகவும் தனது இசைப்பயணத்தைத் தொடர்ந்த அவர், 1960லிருந்து தனிக் கச்சேரிகள் வழங்கத் தொடங்கினார்.

அப்போது ஹெச் எம் வி நிருவனத்தில் பக்திப் பாடல் இசை அமைக்கும் வாய்ப்பு வந்தது. ஏ வி எம்மின் கொலம்பியா நிறுவனத்திற்கும் நூற்றுக்கான பக்திப் பாடல்கள் இசைமைத்து, அவை தமிழ் நாட்டின் மூலை முடுக்குகளிலெல்லாம் பரவத் தொடங்கின. அவற்றில் ஒன்றுதான் "திருப்பங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா" என்ற சூலமங்கலம் சகோதரிகளின் புகழ் பெற்ற பாடல்.

இப்பாடலை தனது கந்தன் கருணையில் சேர்த்துக் கொள்ள விரும்பினார் திரு ஏ பி நாகராஜன். திரு மகாதேவன் அவர்கள் இதற்கு சம்மதிப்பாரா என்ற குன்னக்குடியின் ஐயத்திற்கு "மகாதேவனிடம் நாங்கள் சொல்லிவிட்டோம், இதற்கு நீங்கள் சம்மதித்தால் வளர்ந்து வரும் ஒரு கலைஞருக்கு நீங்கள் வழி காட்டியது போல் இருக்கும் என்றோம். அவரும் சம்மதித்து விட்டார்" என்று கூறினார் ஏ பி என். அப்படத்தில் இந்தப் பாடல் மட்டும்தான் இடம் பெற்றது, குன்னக்குடியின் பெயர் இடம் பெறவில்லை.

ஆனாலும் குன்னக்குடி மனம் தளரவில்லை. மீண்டும் இயக்குனர் ஏ பி என், குன்னக்குடியை அழைத்து, தனது வா ராஜா வா படத்திற்கு இசை அமைக்கும் பொறுப்பை அளித்தார். டி எம் எஸ், பி சுசீலா, கண்ணதாசன், வாலி என்ற ஜாம்பவான்கள் யாரும் இல்லாத ஒரு சூழ்நிலை. படத்தின் பட்ஜெட் அப்படி. இப்படத்திற்கு குன்னக்குடி 5 பாடல்கள் போட்டார். ஐந்துமே சூப்பர் ஹிட்.

முதல் பாடலாக ஆபேரி ராகத்தில் "இறைவன் படைத்த உலகில் எல்லாம் மனிதன் வாழுகின்றான்" என்ற பாடகி. பூவை செங்குட்டுவனின் வரிகளுக்கு, சீர்காழியின் குரலில் பாடலைக் கேட்கும்போதே மனம் இசையில் லயித்துப் போகின்றது. அடுத்து மஹாபலிபுரத்தின் சிற்பக்க கலையை விளக்கும், "கல்லெல்லாம் சிலை செஞ்சான் பல்லவ ராஜா" சிறுவர் முதல் பெரியோர் வரை விரும்பிக் கேட்ட பாடல் இது.

அடுத்து இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஏ பின் எடுத்த படம் "திருமலைத் தென்குமரி".. இதில் "மதுரை அரசாளும் மீனாக்ஷி" பாடலில் காபி ராகத்தின் சொரூபத்தைக் காட்டி, கானடா, பீம்பிளாஸ், கல்யாணி, குந்தளவராளி ஆகியவற்றை தொடும் அரிய பாடல் இது  "திருப்பதி மலை வாழும் வெங்கடேசா" பாடலில் சுப்ரபாதத்தை இணைத்து ஒரு தெய்வீக உணர்வை ஏற்படுத்தி விட்டார் என்றால் அது மிகையாகாது. ஜனரஞ்சகமாக பல மொழிப்பாடல் ஒன்றும் உண்டு. அதுவும் எல்லோராலும் வெகுவாக ரசிக்கப்பட்டது.

அடுத்து ஜி என் வேலுமணி தயாரித்து இயக்கிய "நம்ம வீட்டு தெய்வம்". கே ஆர் விஜயா முதல் முதலில் தெய்வ வேடம் ஏற்ற படம். இதில் தமிழ் அறிஞர் திரு கி வா ஜெகந்நாதனை பாடல் எழுத அணுகினார். குன்னக்குடி. இசை அமைப்பாளர்கள் போடும் ச(ந்)த்தத்திற்கெல்லாம் பாட்டெழுத முடியாது என்றார் கி வா ஜெ முதலில். பின்பு குன்னக்குடியின் வற்புறுத்தலின் பேரில் எழுத வந்தவர், மெட்டு என்ன என்று வினவினார். உங்கள் தமிழ் தங்கு தடையில்லாமல் அருவி போல் பெருக்கெடுத்து வர வேண்டுமென்பதால் நீங்கள் எழுதும் சந்ததிற்கு நான் மெட்டமைக்கிறேன் என்றார் குன்னக்குடி. எங்கே இந்த வரிக்கு ஒரு மெட்டுப் போடுங்கள் பார்க்கலாம் என்று "உலகமெல்லாம் படைச்சவளே ஓங்காரி" என்ற வரிக்கு குன்னக்குடியின் வயலின் வாசிப்பைக் கேட்டு மகிழ்ந்த திரு கி வா ஜெ, இரண்டாவது வரியிலிருந்து நீங்கள் போடும் மெட்டுக்கே பாடல் எழுதுகிறேன் என்றார். இரண்டாவது வரியிலிருந்து திஸ்ர நடையை சதுஸ்ரமாக்கி கொடுக்க அதற்கும் "உன்னை நம்பி வந்தோமம்மா வா என்று எழுதினார். டி எம் எஸ், பி சுசீலா இருவரது குரல்களில் இப்பாடல் பெரிய வெற்றிப் பாடலாக அமைந்தது. பின்னர் அன்னை அபிராமி என்ற படத்திலும், "இல்லை என்பான் யாரடா", "மாகாளி, மகமாயி, சாமுண்டி" என்று இரண்டு பாடல்களை திரு கி வா ஜெ எழுதினார்.
Image may contain: 1 person

அடுத்து ஏ பி என் இயக்கிய கண்காட்சியில் அவரது விருப்பத்திற்கேற்ப பீம்பிளாஸ் இராகத்தில் புதுமையாக ஒரு டூயட் கேட்டார் ஏ பி என். சற்று யோசித்த குன்னக்குடி, இது வரையில் ஏழு அட்சரங்கள் கொண்ட மிஸ்ர நடையில் எவரும் அமைத்திராத காதல் டூயட் ஒன்று அமைத்தார். "தனன்ன தன்னன தன்ன என்று தொடங்கி குன்னக்குடி சொன்ன தத்தகாரத்தை, கவிஞர் கே டி சந்தானம் 
"அனங்கன் அங்கஜன் அன்பன் 
வசந்தன் மன்மதன் என்றும் 
வணங்கும் என் உயிர் மன்னவா" என்று எழுதினர்.

அடுத்து சீர்காழி பிரதான பாத்திரத்தில் நடித்த அகத்தியர். இதில் சீர்காழியும், நாரதராக வந்த டி ஆர் மகாலிங்கமும் இணைந்து பாடும் "இசையாய் தமிழாய் இருப்பவனே" என்ற பாடலைக் கேட்ட திரு மகாராஜபுரம் சந்தானம் அவர்கள், "கரஹரப்பிரியாவின் அனைத்து சஞ்சாரங்களையும் ஒரே பாடலில் திரட்டித் தந்து விட்டீர்களே" என்று பாராட்டினார்.

இதே படத்தில் நடந்தாய் வாழி காவிரி, மலை நின்ற திருக்குமரா மால் மருகா, வென்றிடுவேன், நாட்டையும் நாததால் வென்றிடுவேன்" என்று வரிக்கு வரி ராகம் மாறி வரும் ராகமாலிகையாக டி எம் எஸ்-சீர்காழி பாடும் போட்டிப் பாடல் என்று ஒரு இசை விருந்தையே படைத்து விட்டார். சிறுவர்களுக்காக தாயிற் சிறந்த கோயிலும் இல்லை என்ற பாடல் வேறு.

இவரது பெரிய வெற்றிபப் படம் என்று சொன்னால் "தேவரின் தெய்வம்" தான். இதில் கர்நாடக இசையில் புகழ் பெற்றிருந்த கலைஞர்களையும், பக்திப் பாடல்கலில் புகழ் பெற்றவர்களையும் பாட வைக்க விரும்பினார் குன்னக்குடி. மதுரை சோமு ஏற்கெனவே திரைக்குப் பொருத்தம் இல்லை என்று நிராகரிக்கப் பட்டவர், பாடுவதற்கு தயங்கிய அவரை பலவாறு எடுத்து சொல்லி சம்மதிக்க வைத்து "மருத மலை மாமணியே" பாடலை பாட வைத்தார். பெரும் புகழ் அடைந்த பாடலாயிற்று அது. ராதா ஜெயலக்ஷ்மி அவர்கள் பாடிய "வருவாண்டி தருவாண்டி மலையாண்டி" பித்துக்குளி முருகதாஸ் அவர்கள் பாடிய" நாடறியும் நூறு மலை", பெங்களூர் ரமணி அம்மாள் பாடிய "குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்" டி எம் எஸ்-சீர்காழி இணைந்து பாடிய "திருச்செந்தூரின் கடலோரத்தில்" ஆகிய அனைத்துப் பாடல்களுமே பெரும் வெற்றி பெற்றன.
பிறகு ராஜ ராஜ சோழன், குமாஸ்தாவின் மகள் என்று சில தோல்விப் பாடல்கள். ஆயினும் இவரது இசை அதில் சோடை போகவில்லை. அடுத்து சிவாஜி கணேசனின் மனிதனும் தெய்வமாகலாம் - இதில் வாதாபி கணபதிம் பஜே வை மெல்லிசையாக்கி இவர் போட்ட காதல் டூயட் தான், பால் பொங்கும் பருவம். கவியரசரையும் நடிகர் திலகத்தையும் அசர வாய்த்த மெட்டு அது.
அதன் பின் தேவரின் திருவருள், மேல் நாட்டு மருமகள் போன்ற படங்களில் இவரது பாடல்கள் வெற்றி பெற்றன.

பிறகு இவர் தயாரிப்பில் உருவான கந்தரலங்காரம், சேலம் ராமச்சந்திரனின் தயாரிப்பில் ராக பந்தங்கள் என்று இவர் இசையமைப்பு தொடர்ந்தது, இதில் ராக பந்தங்கள் படத்தில் வாணி ஜெயராம் குரலில் "சரிகமபதநி என்னும் சப்தஸ்வர ஜாலம் என்ற பாடல் சொல்லும்படி அமைந்திருந்தது.

அடுத்து மீண்டும் இவரது தயாரிப்பில் "தோடி ராகம்" டி என் சேஷகோபாலன் கதாநாயகன், இதில் தோடியில் பாடுகின்றேன் என்று தோடி ராகத்தில் அமைந்த பாடல் பிரசித்தம். குன்னக்குடியின் குரலில் "கொட்டாம்பட்டி ரோட்டிலே" என்று ஒரு நாட்டுப்புறப்(!) பாடல். இதற்குப் பிறகு குன்னக்குடி இரு படங்கள் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். இரண்டும் நிறைவேறவில்லை. அதன் பின்னர் அவர் திரைத்துறையில் ஈடுபட்டதாகத் தெரியவில்லை. 

திரையிசையில் பக்திப் பாடல்களில் பெருமளவு வெற்றி பெற்றவர் என்ற பெருமை இவருக்கு எப்போதும் உண்டு.

(நன்றி: திரு வாமனன் அவர்கள்)

டி சலபதிராவ்

தமிழ்த் திரையிசையின் பிதாமகர்கள் - 15 - டி சலபதிராவ் 

விஜயவாடா அருகே உள்ள கபிலேஸ்வரம் கிராமத்தில் டிசம்பர் 20, 1920 அன்று சலபதிராவ் பிறந்தார்.அவர் பிறந்த கிராமத்தில் பொதுவுடமை இயக்கம் (கம்யூனிசம் பரவியிருந்தது அவரது தமக்கைகளில் ஒருவர் கம்யூனிஸத்தில் தீவிர ஈடுபாடு உடையவர். இன்னொரு சகோதரிக்கு சங்கீதம் கற்பிக்கப் பட்டு வந்தது. அதில் சலபதிராவ் ஈடுபாடு கொண்டார். 

பொறியியல் படிப்புக்காக பம்பாய் சென்றவர் அங்கு இசை பயின்றார். யாரிடம் என்ற விவரங்கள் இல்லை. ஊர் திரும்பியதும் கம்யூனிச இயக்கத்தில் கலந்து கொண்டார். அதன் விளைவாக 3 ஆண்டுகள் சிறையில் அடைக்கப் பட்டார். சிறையிலும் பலரை பாட சொல்லி உற்சாகப்படுத்தியிருக்கிறார்.

அவர் திரையுலகில் நுழைந்தது 1951 ஆம் ஆண்டு. ஆனால் நேரடியாகத் தமிழ் திரைப்படங்களில் இசையமைக்கத் துவங்கியது 1956ல் அமரதீபம் திரைப்படம் மூலம். இப்படத்தில் 3 இசையமைப்பாளர்கள் பணியாற்றினார்கள். சலபதிராவுக்கு பின்னணி இசைதான் தரப்பட்டது. மற்ற இருவரும் ஆளுக்கு இரண்டு பாடல்கள் இசையமைத்து ஒதுங்கி விட்டார்கள். ஆகையால் மீதமுள்ள பாடல்களுக்கு சலபதிராவே இசையமைத்தார். 

"எங்கே மறைந்தனையோ" என்ற ஒரு பாடல், எம் எல் வசந்தகுமாரி பாடியது. இதற்கு ஜி என் பாலசுப்ரமணியம் இசையமைத்திருந்தார். இன்னொரு பாடல் "நாடோடிக் கூட்டம் நாங்க தில்லேலேலோ" என்று நரிக்குறிவார்கள் பாடுவது. ஏ பி கோமளா, டி வி ரத்னம். டி எம் சௌந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன் ஆகியோர் பாடியது. ஜி ராமநாதன் இசையமைத்திருந்தார். ஆனால் இப்படத்தில் சாகாவரம் பெற்றதென்னவோ சலபதிராவின் பாடல்கள்தான்.

மனித குலத்துக்கு அவசியமான குணத்தைப் பற்றி ஒரு பாடல் "நாணயம் மனுஷனுக்கு அவசியம், மிகவும் அவசியம்" - கே எஸ் கோபாலகிருஷ்ணன் எழுதியது. இதில் நாணயம் என்பதை இரு பொருள் பட எழுதியிருக்கிறார் கே எஸ் ஜி. இப்பாடலுக்கு எளிமையான ஆனால் மக்கள் மனதில் அழுத்தமாகப் பதியும் இசையை அமைத்திருந்தார் சலபதிராவ். டி எம் சௌந்தரராஜன் இதற்கு மேலும் உயிரூட்டியிருந்தார் தனது தெளிவான உச்சரிப்பின் மூலம்.

அறிவுரை கூறும் பாடலிலிருந்து ஒரு காதல் பாடலுக்கு இசையமைக்கும்போதுதான் என்ன ஒரு மாற்றம் இவரது இசையில். "தேன் உண்ணும் வண்டு" பாடலில்! ஹிந்துஸ்தானி இசையின் அடிப்படையில் மாண்டலின், வயலின், புல்லாங்குழல் என்று இனிமையான இசைக்கருவிகளுடன், ஏ எம் ராஜா - பி சுசீலாவின் குரல்களும் இழையும்போது தேனின் இனிமையை நாம் அனுபவிக்கிறோம். கவிஞர் காமாட்சி சுந்தரத்தின் இனிமையான வரிகளில் இன்றும் நம் காதுகளில் ரீங்கரித்துக் கொண்டிருக்கிறது இந்த "தேன் உண்ணும் வண்டு"

"ஜாலிலோ ஜிம்கானா" என்று ஜாலியாக பாடல் ஆரம்பித்தாலும் அப்பாடலிலும் ஒரு தத்துவத்தை புகுத்தியிருக்கிறார் கவிஞர் தஞ்சை ராமையாதாஸ். பாடலின் இறுதியில் வரும் இரண்டு வரிகள்."வாழ்விலும் தாழ்விலும் காணும் ஆனந்தமே, வானவில்லாய் மறைந்தாலும் ஜாலிலோ ஜிம்கானா" இப்பாடல் வெறும் அர்த்தமற்ற பாடல் என்று கூறிவிட முடியாது. பாடலின் மெட்டு அது வரை கேட்டிராதது. இதுவும் இன்றளவும் ரசிக்கப்படும் பாடல். 

ஜிக்கியின் குரலில் துள்ளலான "பச்சைக்கிளி பாடுது" மென்மையான "துன்பம் சூழும் நேரம், என்னைக் கொஞ்சம் பாரும்" பாடல்கள்.

அமரதீபத்திற்கு பின் அவர் இசையமைத்த படம் "கூடி வாழ்ந்தால் கோடி நன்மை" இந்தப் படத்தில் மொத்தம் ஏழு பாடல்கள். ஆனால் அனைத்தும் சுமார் ரகம் என்று விமர்சிக்கப்பட்டது. பாடல்களும் தற்போது கிடைக்கவில்லை.

ஆனால் அமரதீபத்தின் வெற்றியில் சலபதிராவுக்கு இருந்த பெரும்பங்கை ஸ்ரீதர் நினைவில் வைத்திருந்தார். "மீண்ட சொர்க்கம்" என்ற ஒரு உன்னத காதல் காவியத்தை அவர் இயக்க நினைத்தபோது சலபதிராவுக்கே வாய்ப்பளித்தார். இப்படம் 

"துயிலாத பெண்ணொன்று கண்டேன்" என்று தென்னஞ்சோலையிலிருந்து வீசும் இளம்தென்றல் போன்று ஏ எம் ராஜாவின் குரலில் ஒரு பாடல். பின்னர் பாகேஸ்ரீ ராகத்தின் அடிப்படையில் அமைந்த "கலைஏ என் வாழ்க்கையின் திசை மாற்றினாய்" ஏ எம் ராஜா, பி சுசீலா இருவரது பாடல் வடிவங்களும் மிக மிக இனிமை. அதிலும் சுசீலாவின் குரலில் பாடலின் இறுதியில் உச்சத்தைத் தொடும்போது என்ன ஒரு பாவம்! ஏ எம் ராஜாவோ தனது தேன் குரலாலேயே நம்மை மயக்கிவிடுகிறார். இவரது குரல் மிகவும் மென்மையாகத் தோன்றினாலும் மிக அனாயாசமாக உச்சத்தைத் தொடுகிறார்.

அடுத்து "மன நாட்டிய மேடையில் ஆடினேன்" என்ற பி சுசீலாவின் பாடல். பல்லவி முடிந்ததும் இடையிசையாக விறுவிறுப்புடன் ஒலிக்கும் வயலின்கள், பின் அந்த இசை அப்படியே இறங்கிவந்து நீரூற்று போன்ற சிதார் இசை - இங்கு இயக்குனரைப் பாராட்ட வேண்டும், இவ்விடத்தில் நாயகி போல பொலவென கண்ணீர் உகுப்பதைக் காட்டியிருப்பார் - எல்லாம் முடிந்ததும் அமைதியாக "புவி வாழ்வினில் காதல் இன்பம், அதில் ஏழையின் காதல் துன்பம்" என்று உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொண்டு சுசீலா பாடும் விதம், "உயிர்க் காதலிலே, உடல் மேடையிலே, இந்த வாழ்க்கையின் முடிவெங்கே" என்ற வரிகள் கதையின் முடிச்சை உணர்த்துகின்றன. இறுதியில் மன நாட்டிய மேடையில் ஆடினேன் என்று சுசீலா விசும்பலுடன் பாடலை நிறைவு செய்வது "TOP CLASS". இந்தப் பாடலில் சலபதிராவின் முழுத் திறமையும் வெளிப்படுகிறது. நாயகியின் உணர்வுகளுக்கேற்ப இசையை நன்கு வளைத்து, அவளது சங்கடத்தை ஒவ்வொரு திருப்பத்திலும் வெளிப்படுமாறு இசையமைத்திருக்கிறார். கவியரசர் ஒரு கவிக்காவியமே புனைந்திருக்கிறார் இப்பாடலில். "ஆடும் அருள்ஜோதி" என்றொரு நாட்டிய பாடல், சீர்காழி கோவிந்தராஜன் - எம் எல் வசந்தகுமாரி இருவரது குரலில். இதுவும் இன்றளவும் ரசிக்கப்படும் பாடலே.

அடுத்து மீண்டும் ஸ்ரீதர் படத்தில் இசையமைக்கும் வாய்ப்பு - புனர் ஜென்மம். இதில் தீம் பாடலான "என்றும் துன்பமில்லை ஒரு சோகமில்லை" என்ற பாடல் மூன்று முறை ஒலிக்கிறது. டி எம் எஸ், சுசீலா, பி பி எஸ் ஆகியோரது குரல்களில். மூன்றும் முறையே உத்வேகம், நிராசை, உளைச்சல் என்ற உணர்வுகளை வெளிப்படுத்துகின்றன. மூன்றுமே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது சலபதிராவின் திறமையைக் காட்டுகிறது. "உள்ளங்கள் ஒன்றாகித் துள்ளும்போதிலே" என்ற பாடல் ஒன்றான உள்ளங்கள் சந்தோஷ வானில் சிறகடித்துப் பறப்பதை நன்கு உணர்த்துகிறது. 
Image may contain: 1 person, sunglasses, eyeglasses and closeup

அடுத்து உத்தமி பெற்ற ரத்தினம் என்ற படத்திற்கு இசையமைத்தார் சலபதிராவ். இதில் வரும் "தேடிடுதே வானமிங்கே" என்ற பி பி எஸ் குரலில் ஒலிக்கும் பாடல் இலங்கை வானொலியில் மிகவும் பிரபலமான பாடல். 1983 வரை அடிக்கடி நான் கேட்டிருக்கிறேன் அதில். பிறகு வான வெளியில் தொலைந்தே போயிற்று இந்தப் பாடல். பாடலை இயற்றியவர் அ மருதகாசி. இத்தனை சிறப்புகள் பெற்றிருந்தும் இப்பாடல் காற்றில் கரைந்ததேனென்று தெரியவில்லை.

சலபதிராவ் கடைசியாக தமிழில் இசையமைத்த படம் மாடி வீட்டு மாப்பிள்ளை."அதில் வரும் கேட்டுப் பாரு கேள்விகள் நூறு" என்ற பாடல் மிகவும் பிரபலம். "வைகை பெருகிவர, வண்ண மணல் ஊர்ந்து வர" என்ற ஜெயலலிதா பாடும் பாடல் சுமார் ரகம்.

ஒருமுறை உங்களுக்கு பிடித்த இசையமைப்பாளர் யார் என்று கேட்டதற்கு ஜெயலலிதா "சலபதிராவ்" என்று சொன்னார். தமிழிலும் தெலுங்கிலும் அவர் இசையமைத்த படங்களில் நடித்த அவருக்கு சலபதிராவின் பெருமை நன்கு தெரிந்திருக்கிறது.

யாருக்கும் வளைந்து தரமாட்டார் சலபதி ராவ். தன்மானத்தை இழந்து வாய்ப்புகளை பெற்று எந்தப் பயனும் இல்லை என்பது அவரது கொள்கை. அதனால் அவர் இழந்த வாய்ப்புகள் ஏராளம். எண்ணிக்கையில் மிகை குறைந்த பாடல்களே அளித்திருந்தாலும் அத்தனையும் சொக்கத்தங்கம். எல்லாத் தரப்பினராலும் ரசிக்கப்படும் இசையை நமக்கு அளித்திருக்கிறார் சலபதி ராவ். 

நலிந்த இசைக்கலைஞர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்து வந்தார். மருத்துவரான தனது மனைவி டாக்டர் ஜமுனா குமாரியிடம், ஏழைகளுக்கு இலவசமாக மருத்துவம் செய் என்று கூறி வந்தார். இவ்வாறு ஒரு நிறைவான வாழ்வை வாழ்ந்து வந்த சலபதிராவ், 1994லில் தனது 74ஆம் வயதில் காலமானார். இவர் காலமானாலும் இவரது இசை இன்றும் நம்மை மகிழ்வித்துக் கொண்டிருக்கிறது.

COURTESY: MR Vamanan Narasimhan

Thursday, September 14, 2017

எஸ் ராஜேஸ்வரராவ்

தமிழ்த் திரை இசையின் பிதா மகர்கள் - 14. 
திரு எஸ் ராஜேஸ்வரராவ் 

ராஜேஸ்வரராவ் (இனி ராவ் என்று அழைப்போம்) விஜயநகரத்தில் 1922 ஆம் ஆண்டு பிறந்தார். இவரது தந்தை சந்நியாசி ராவ் மிருதங்க வித்வான். துவாரம் வேங்கடசாமி நாயுடுவிற்கு வாசித்து வந்தார். ராவிற்கு நான்கு வயதிலேயே ராகங்களை அடையாளம் காட்டும் திறமை வந்து விட்டது. ஏழு வயதில் ஹரிகதா காலட்சேபம் செய்ய ஆரம்பித்து விட்டார். 

1930 களில் பிரபலமாகத் தொடங்கிய கிராமபோன் கம்பெனிகள் நல்ல குரல்களை பதிவு செய்ய தகுதியான ஆட்களை அமர்த்தினர். அப்படி ஹட்சின்ஸ் (HUTCHINS) கம்பெனியால் அடையாளம் காணப்பட்டவர் ராவ். அவரது குரலில் "பகவத் கீதை" கிராமபோன் இசைத்தட்டு வெளிவந்தது.

பேசும்படங்கள் வெளிவரத்துவங்கிய காலம் அது. இசைத்தட்டுக்களில் பாடிய இளைஞர்கள் மீது தயாரிப்பாளர்களின் கவனம் திரும்பியது. வேல் பிக்சர்சின் தெலுங்குப் படமான "ஸ்ரீ கிருஷ்ண லீலாலு" படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட்டார். உடன் நடித்தவர் திரு வி என் சுந்தரம். "ஸ்ரீ கிருஷ்ணா லீலா (1935), மாயா பஜார் (1936) ஆகிய படங்களில் பாடி நடித்து வந்த ராவ், "கீசக வதம்" என்ற படத்தில் நடிக்க கல்கத்தா பயணமானார். அப்போது நியூ தியேட்டர்ஸ் சைகலை வைத்து "தேவதாஸ்" படத்தை எடுத்து பெரும் வெற்றி பெற்றிருந்தது. கீசக வதத்தில் நடித்ததுடன், சைகலிடம் சுமார் ஒன்றரை ஆண்டுகள் ஹிந்துஸ்தானி சங்கீதம் பயின்றார் ராவ். நியூ தியேட்டர்ஸ் கலைஞர்களான ஆர் சி போரால், பங்கஜ் மல்லிக் இவர்கள் மூலம் ஹிந்தி வங்காளப் பாடல்களின் மெல்லிசையையும் அறிந்து கொண்டார். சைகலிடம் ஒரு ஹார்மோனியம் பரிசாகப் பெற்றார் ராவ்.

1938 ல் சென்னை திரும்பிய அவர், சிதார், கரபஹார், ஹார்மோனியம், மிருதங்கம், டோலக், தப்லா ஆகியவற்றை வாசிக்கும் திறமை பெற்றிருந்தார். "விஷ்ணு லீலா" (1938) என்ற தமிழ்ப் படத்தில் உதவி இசையமைப்பாளராக பணியாற்றினார். அதற்கடுத்து "இல்லாளு" என்ற தெலுங்குப் படத்தில் இசையமைத்து நடித்தார். இந்தப் படத்துடன் இவரது நடிப்பு முடிவுக்கு வந்தது.

தென்னிந்தியாவின் மிகப் பெரிய தயாரிப்பு நிறுவனமான ஜெமினி ஸ்டுடியோவில் 1940ல் வேலைக்கு சேர்ந்தார். அங்கு "மங்கம்மா சபதம் (1943), தாசி அபரஞ்சி (1944) சந்திரலேகா (1948), அபூர்வ சகோதரர்கள் (1949) ஆகிய தமிழ்ப் படங்களுக்கு இசையமைத்தார். மங்கம்மா சபதத்தில் சில மேற்கத்திய மெட்டுக்களை தமிழ் ரசிகர்கள் விரும்பும் வண்ணம் இசையமைத்திருந்தார். I, I, I, I LIKE YOU VERY MUCH என்ற பாடல் "ஐயய்ய்யய்யே சொல்ல வெட்கம் ஆகுதே" என்ற பாடல், வசுந்தராதேவி அவர்களால் பாடி ஆடப் பட்டு பல ரசிகர்களின் உள்ளங்கள் கிறுகிறுத்துப் போனது.

சந்திரலேகாவிலும் உலக இசை தொடர்ந்தது. அயல்நாட்டு மெட்டுக்களை நல்ல மேற்கத்திய வாத்தியங்களுடன் கொடுத்து வெற்றி அடைந்தார் ராவ். "ஐலோ பக்கிரியாமா" என்ற பாடலில் வரும் உளறல்கள் FIREFLY என்ற படத்தில் வரும் DONKEY SERENADE பகுதியைத் தழுவியது. இப்பாடல் ஒரு உக்ரேனியன் பாடல் என்று கூறப்படுகிறது. உச்சக்கட்டக் காட்சியில் வரும் ட்ரம் டான்ஸில் கதகளி, கண்டி ஆகிய நடன அசைவுகள் உண்டு. இப்படத்தில் வாசனின் விருப்பத்திற்கேற்ப நல்ல இசையை உள்வாங்கிக்கொண்டு நமது ரசிகர்களுக்கேற்ப அளிக்கும் கடமையை மட்டுமே செய்தார் ராவ்.

அபூர்வ சகோதரர்களில் இவர் சற்று சுதந்திரமாக செயல்பட முடிந்தது. இப்படத்தில் பானுமதி பாடும் " லட்டு வேணுமா" என்ற கலகலப்பூட்டும் பாடல், "ஓடக்காரா, ஓடக்காரா, ஓடத்தில் ஏற்றியே செல்வாய்" என்று அமைதியாகப் பாடும் ஓடப் பாட்டு (இப்பாட்டின் துவக்கம் நினைவில் இல்லை), மானும் மயிலும் ஆடும் சோலை" என்ற காதல் ரசம் ததும்பும் பாடல் ஆகியவை இவரது இசையில் பெரும் வெற்றி பெற்றன. இப்படத்துடன் ஜெமினியில் இவரது சகாப்தம் முடிவடைந்தது.
Image may contain: 1 person, eyeglasses and text

50களில் 10 தமிழ்ப்படங்களுக்கு இசையமைத்துள்ளார் ராவ். மிஸ்ஸியம்மாவில் (1955) பாடல்கள் அனைத்துமே கர்நாடக இசையின் அடிப்படையில் அமைக்கப்பட்டு ரசிகர்களின் இதயங்களின் தென்றலாகத் தவழ்ந்தது. பிருந்தாவனமும் நந்தகுமாரனும்" "அறியாப்பருவமடா, மலர் அம்பையே வீசாதடா, மதனா" பழகத் தெரிய வேணும்" "மாயமே நானறியேன்" "எனையாளும் மேரி மாதா" "முடியுமென்றால் படியாது, படியும் என்றால் முடியாது" "வாராயோ வெண்ணிலாவே" போன்ற பாடல்கள் இன்றளவும் சாகா வரம் பெற்று விளங்குகின்றன.

அடுத்து வந்த மாதர் குல மாணிக்கத்தில் பாடல்கள் ஒன்றும் பிரகாசிக்கவில்லை. பிரேமபாசம்(1956) ல், வீசும் தென்றலிலே, பேசும் வெண்ணிலவே" "முரளீதரா, ஹரே மோகனக்ருஷ்ணா" என்று இரு அருமையான பாடல்கள். அலாவுதீனும் அற்புத விளக்கும் என்ற படத்தில் வெவ்வேறு நாட்டு இசை வடிவங்களைத் தொடும் வாய்ப்பு என்று நல்ல மெட்டுக்கள் ராவின் கைவண்ணத்தில் வந்தவண்ணம் இருந்தது."தாயே உன் செயலல்லவோ" (இரு சகோதரிகள்) "போதும் உந்தன் ஜாலமே" (கடன் வாங்கிக் கல்யாணம்), நாராயண மந்த்ரம் (பக்தப் பிரகலாதா) என்று இவரது வெற்றி வரிசை நீள்கிறது.

மாயபாஜாரில், "நீதானா என்னை அழைத்தது" "ஆஹா இன்ப நிலாவினிலே" ஆகிய இரு பாடல்களும் ராவ் இசையமைத்தவை, மற்ற பாடல்களுக்கு திரு கண்டசாலா இசையமைத்தார். பானை பிடித்தவள் பாக்கியசாலியில் ஒலிக்கும் "புருஷன் வீட்டில் வாழப்போகும்" பாடலுக்கு இசை ராவ்தான். பிறகு இப்படத்தின் மற்ற பாடல்களுக்கு எஸ் வி வெங்கட்ராமன் இசையமைத்தார்.

தன்னைப்புரிந்து கொள்ளாத இயக்குனராக இருந்தால் விலகிவிடுவார் ராவ். அப்படி பல படங்களிலிருந்து இவர் விலகியதுண்டு. வேகமாக இசையமைக்க வேண்டும்,பாட்டு உடனே வேண்டும் என்றால் அவர் சம்மதிக்க மாட்டார்.

உலகத்தின் எந்த நாட்டிலிருந்து இசைக்குழுக்களோ, கலைஞர்களோ வந்தாலும் ராவ் சென்று அவர்களது இசையை ரசித்து அனுபவிப்பார். ஒரு கலைஞனுக்கு அனைத்து வகை சங்கீதமும் தெரிந்திருக்க வேண்டும் என்பதில் இவர் உறுதியாக இருந்தார்.

தெலுங்கில் நூறு படங்களுக்கு மேல் இசை அமைத்தவர் ராவ். ஆந்திரப் பல்கலைக் கழத்தால் டாக்டர் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டவர். தமிழக அரசு கலைமாமணி பட்டம் வழங்கியது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் இவரை ஆஸ்தான வித்வானாக ஆக்கியது.

இவர் தமிழில் இசையமைத்த படங்கள்"
மங்கம்மா சபதம் - 1943
தாசி அபரஞ்சி -1944
சந்திரலேகா - 1948
அபூர்வ சகோதரர்கள் - 1949
வாழப்பிறந்தவள் - 1953 (ஜி ராமநாதனுடன்)
மிஸ்ஸியம்மா - 1955
மாதர்குல மாணிக்கம் - 1956
பிரேமபாசம் - 1956
கடன் வாங்கிக் கல்யாணம் - 1958
அவள் யார் 1959
பெற்றமனம் - 1960
விக்கிரமாதித்தன் - 1962 
பக்தப் பிரகலாதா - 1967
தசாவதாரம் - 1976

இவர் சில பாடல்களுக்கு மட்டும் இசையமைத்த படங்கள்:
மாயா பஜார் - 1957, பானை பிடித்தவள் பாக்கியசாலி - 1958

இவரது இசையில் பிரபலமான சில பாடல்கள்:
ஐயய்ய்யய்யே சொல்ல வெட்கம் ஆகுதே - மங்கம்மா சபதம் 
லட்டு வேணுமா லட்டு வேணுமா - அபூர்வ சகோதரர்கள் 
மானும் மயிலும் ஆடும் சோலை - அபூர்வ சகோதரர்கள்.
நாட்டியக் குதிரை நாட்டியக் குதிரை - சந்திரலேகா 
ஆஈளோ பக்கிரியாமா - சந்திரலேகா 
பாண்டுரங்கா பாண்டுரங்கா - சக்ரதாரி 
உனக்கும் எனக்கும் - சக்ரதாரி 
முடியும் என்றால் படியாது - மிஸ்ஸியம்மா 
அறியாப் பருவமடா - மிஸ்ஸியம்மா 
தெரிந்து கொள்ளனும் பெண்ணே - மிஸ்ஸியம்மா 
பழகத் தெரிய வேணும் - மிஸ்ஸியம்மா 
பிருந்தாவனமும் நந்தகுமாரனும் - மிஸ்ஸியம்மா 
வாராயோ வெண்ணிலாவே - மிஸ்ஸியம்மா 
எனையாளும் மேரி மாதா - மிஸ்ஸியம்மா 
வீசும் தென்றலிலே - பிரேம பாசம் 
தாயே உன் செயலல்லவோ - இரு சகோதரிகள் 
எங்கிருந்து வீசுதோ இனிதாகவே தென்றல் - கடன் வாங்கிக் கல்யாணம் 
போதும் உந்தன் ஜாலமே - கடன் வாங்கிக் கல்யாணம் 
நீதானா எனை அழைத்தது - மாயா பஜார் 
ஆஹா இன்ப நிலாவினிலே - மாயா பஜார் 
புருஷன் வீட்டில் வாழப் -போகும் பானை பிடித்தவள் பாக்கியசாலி 

ராகதேவனாகவே வாழ்ந்து, நாதத்தில் 1999 ல் சங்கமித்தார். இன்றளவும் இவரது பாடல்கள் இவர் பெயர் பாடிக் கொண்டிருக்கின்றன. என்றும் பாடும்.

(நன்றி: எழுத்தாளர் திரு வாமனன் அவர்கள்)

குன்னக்குடி வைத்தியநாதன்.

தமிழ்த் திரை இசையின் பிதா மகர்கள் - 16 : குன்னக்குடி வைத்தியநாதன். குன்னக்குடி வைத்யநாதனைப் பற்றி கூற வேண்டுமெனில்; "யாரையும் எ...